search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    திருப்பதி கோவிலுக்கு வர விடாமல் ஜெகன்மோகன் ரெட்டியை தடுத்து நிறுத்த முடிவு
    X

    திருப்பதி கோவிலுக்கு வர விடாமல் ஜெகன்மோகன் ரெட்டியை தடுத்து நிறுத்த முடிவு

    • ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி மலைக்கு வருவதால் கலவரம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
    • திருப்பதியில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதியில் லட்டு செய்வதற்கான நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை போக்க ஆந்திரா முழுவதும் நாளை 28-ந் தேதி கோவில்களில் பரிகார பூஜை நடத்தி வழிபட வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார்.

    இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுலையான் கோவிலில் நாளை தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். இன்று மாலை 5 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து திருப்பதி மலைக்கு சென்று பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.

    நாளை காலை 10.30 மணிக்கு ஏழுமலையானை தரிசிக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.

    ஜெகன் மோகன் ரெட்டி வருகைக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏழுமலையான் கோவில் விதிகளின் படி அவர் மாற்று மதத்திற்கான பதிவேட்டில் கையெழுத்திட்டு செல்வாரா? என கேள்வி எழுப்பியது.

    இதற்கு பதில் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஜெகன் மோகன் ரெட்டி மாற்று மதத்திற்கான பதிவேட்டில் கையெழுத்திட்டால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார் என தெரிவித்தனர்.

    ஜெகன்மோகன் ரெட்டி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திருப்பதியில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது கோ பேக் ஜெகன்மோகன் என்றும் 5 ஆண்டுகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டியை திருப்பதி மலையில் கால் வைக்க விடமாட்டோம் என கோஷம் எழுப்பினர்.

    ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி மலைக்கு வருவதை தடுக்க ஆயிரக்கணக்கான இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் அலிபிரி சோதனை சாவடியில் குவிந்து வருகின்றனர்.

    இதே போல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.

    ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி மலைக்கு செல்லும் வரை தங்களது போராட்டம் தீவிர படுத்தப்படும் என ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

    திருப்பதி நகர எல்லைகளில் போலீசார் சோதனை சாவடிகளை அமைத்து வாகனங்களில் வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி மலைக்கு வருவதால் கலவரம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

    ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டியை தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி திருப்பி அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    திருப்பதியில் இந்து அமைப்பை சேர்ந்தவர்களும் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் குவிந்து வருவதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் திருப்பதியில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    Next Story
    ×