search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சிலர் கவர்னர் மாளிகை வாசலில் இருந்த தடுப்பு வேலிகளை தாண்டி கவர்னர் மாளிகை வாசலுக்கு சென்றனர்.
    • பாதுகாப்பு பணியில் குறைவாவே போலீசார் இருந்தனர். இதனால் போலீசாருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை செய்ய காரணமான போதைப்பொருளை கட்டுப்படுத்த தவறிய முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் இன்று நடந்தது.

    பந்த் போராட்டம் அறிவித்த இந்தியா கூட்டணி கட்சியினர் காலை 10 மணியளவில் ராஜா தியேட்டர் சந்திப்பில் ஒன்று கூடினர். அங்கு புதுவை அரசுக்கு எதிராகவும், முதலமைச்சரும், அமைச்சரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். ஒரு சிலர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் திடீரென இந்தியா கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவபொழிலன், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, திமுக நிர்வாகிகள் கார்த்திகேயன், சண்.சண்முகம், பிரபாகரன், சக்திவேல், தியாகராஜன், கலியகார்த்திகேயன், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    ஊர்வலம் நேரு வீதியில் ஆக்ரோஷமாக வந்தது. ஊர்வலத்தை நேருவீதி, மிஷன்வீதி சந்திப்பில் பேரிகார்டு அமைத்து போலீசார் தடுத்தனர். இதனால் ஊர்வலத்தில் வந்தவர்கள் மிஷன் வீதியில் திரும்பினர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அவர்களை தள்ளி விட்டு, ஊர்வலத்தில் வந்தவர்கள் மிஷன்வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர்.


    அங்கு போலீசார் பேரிகார்டு அமைத்து அவர்களை தடுத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் குறைவாவே போலீசார் இருந்தனர். இதனால் போலீசாருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண் போலீசார் உட்பட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். ஆனாலும் பேரிகார்டுகளை தள்ளிவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், திருநங்கைகள் சிலர் கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர்.

    அவர்களை போலீசார் துரத்தி பாரதிதாசன் சிலை அருகே தடுத்து பிடித்தனர். பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கவர்னர் மாளிகை நோக்கி செல்ல விடாமல் தடுக்கும் வகையில் சுற்றி வளைத்தனர். திடீரென மீண்டும் அங்கிருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஓடினர். சிலர் கவர்னர் மாளிகை வாசலில் இருந்த தடுப்பு வேலிகளை தாண்டி கவர்னர் மாளிகை வாசலுக்கு சென்றனர்.

    கவர்னர் மாளிகை வாசலில் நின்று அவர்கள் கோஷம் எழுப்பினர். போலீசார் அவர்களை துரத்திப் பிடித்து கைது செய்தனர். இந்த போராட்டத்தால் கவர்னர் மாளிகை வாசல், சுற்றுப்புற பகுதிகளில் களேபரமாக இருந்தது. இதையடுத்து நூற்றுக்கணக்கான போலீசார் கவர்னர் மாளிகையை சுற்றிலும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி கட்சியினரையும் போலீசார் கைது செய்தனர். வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்கட்சித் தலைவர் சிவா, தி.மு.க., காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை போலீசார் கைது செய்தனர்.

    போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 3 திருநங்கைககளுக்கு கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. கைது செய்தோரை போலீசார் வாகனங்களில் ஏற்றி கோரிமேடு கொண்டு சென்றனர்.

    • புதுச்சேரி அரசை கண்டித்தும் புதுச்சேரி அ.தி.மு.க.வி.னர் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
    • சாலையில் அமர்ந்து கோஷம் போட்டனர். தொடர்ந்து 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் போதைப் பொருள் ஆசாமிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும்நீதிகேட்டும், போதைப்பொருள் விற்பனை கேந்திரமாக மாறி இளைஞர்கள் வாழ்வை சீரழிக்கப்படுவதை தடுக்காத புதுச்சேரி அரசை கண்டித்தும் புதுச்சேரி அ.தி.மு.க.வி.னர் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

    பந்த் போராட்டத்தையொட்டி அ.தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. உப்பளத்தில் உள்ள அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து மாநிலச்செயலர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். அவர்கள், அண்ணா சிலையை வந்தடைந்தனர்.

    அங்கு மறியலில் ஈடுபட்டனர். மறியலில் அவை தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜாராமன், கோமளா, மாநில இணைச்செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணைச்செயலர் காந்தி, நகர செயலாளர்கள் அன்பழகன் உடையார், சித்தானந்தம், தொகுதி செயலாளர்கள் சம்பத், துரை, பாஸ்கர், ஆறுமுகம், மகளிர் அணி விமலா, எழிலரசி, மதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    சாலையில் அமர்ந்து கோஷம் போட்டனர். தொடர்ந்து 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    • சிறுமி படுகொலைக்கு நீதிக்கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம்.
    • போதைப்பொருகள் புழக்கத்தை தடுக்க தவறியதை கண்டித்தும் போராட்டம்.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

    புதுச்சேரியை உலுக்கிய இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதை மயக்கத்தில் வாலிபர் செய்த இந்த வெறிச்செயல், புதுச்சேரி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.

    சிறுமி கொலையை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆங்காங்கே போராட்டம், சாலை மறியல் நடத்தினர்.

    சிறுமி கொலையை கண்டித்தும், போதைப் பொருள் நடமாட்டத்தை புதுவையில் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் பந்த் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் இந்த பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பந்த் போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. பந்த் போராட்டத்தால் புதுச்சேரி புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் எதுவும் இயக்கப்பட வில்லை.

    புதுச்சேரியை பொறுத்தவரை தனியார் பஸ்கள்தான் அதிகளவில் இயக்கப்படுகிறது. அரசியல் கட்சியினர் கோரிக்கையை ஏற்று தனியார் நிறுவனத்தினர் பஸ்களை இயக்கவில்லை. அதோடு புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக பஸ்களும் இயக்கப்படவில்லை.

    தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லைகளில் பயணிகளை இறக்கி சென்றது. புதுச்சேரி வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடியது. பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். ஆட்டோக்கள், டெம்போக்களும் இயக்கப்படவில்லை.

    நகர பகுதியில் பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய பெட்டி கடைகள் வரை அடைக்கப்பட்டிருந்தது. நேருவீதி, அண்ணா சாலை, மறைமலைஅடிகள் சாலை, புஸ்சி வீதி, காமராஜர் சாலை, படேல் சாலை, திருவள்ளுவர் சாலை, மிஷன் வீதி ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    பெரிய மார்க்கெட், சின்னமணிக்கூண்டு, நெல்லித்தோப்பு மார்க்கெட் கடைகளும் இயங்கவில்லை. தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கின. பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

    போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தவர்கள் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்காக பள்ளி, கல்லூரி வாகனங்களை நிறுத்த மாட்டோம் என தெரிவித்திருந்தனர். இதன்படி பிளஸ்-2 தேர்வு எழுத மாணவர்களை அழைத்து செல்ல ஒரு சில தனியார் பள்ளி பஸ்கள் மட்டும் ஒடியது. பெரும்பாலான தேர்வு எழுதும் மாணவர்களை பெற்றோர் தங்கள் வாகனங்களில் அழைத்து சென்றனர்.

    தனியார் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கவில்லை என்றாலும் அவைகள் இயங்கவில்லை. அரசு பள்ளிகள் இயங்கினாலும் மாணவர்கள் வருகை குறைவாக இருந்தது. சேதராப்பட்டு, மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் ஒரு சில தொழிற்சாலைகளை தவிர பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தது.

    பந்த் போராட்டத்தையொட்டி நகர பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரெயில்நிலையம், பஸ்நிலையம் உட்பட மக்கள் கூடும் இடங்கள், முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் வியாபாரிகள், ஆட்டோ, டெம்போ, தனியார் பஸ் உரிமையா ளர்கள், தொழிற்சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவு தெரிவித்திருந்தனர். ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தால் புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • பந்த் குறித்து மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.
    • போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்து பந்த் அறிவிப்பு.

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.

    இதைதொடர்ந்து, சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுகவும், இந்தியா கூட்டணியும் நாளை பந்த் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை (8ம் தேதி) பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

    மேலும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்தும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

    • விசாரணை அதிகாரி முத்தயால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் பணியிடமாற்றம்.
    • பணியிட மாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

    புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 11 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    விசாரணை அதிகாரி முத்தயால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தனச்செல்வம், உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் ஆகியோர் ஏற்கனவே பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    தற்போது மேலும் 11 காவலர்களை பணி இடமாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

    பணி இடமாற்றம் செய்யப்பட்ட 11 காவலர்கள் முத்தயால்பேட்டை, முதலியார்பேட்டை, ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்கள்.

    மேட்டுப்பாளையம், லாஸ்பேட்டை, அரியாங்குப்பம், வில்லியனூர், சோலைநகர் காவல் நிலைய காவலர்களும் 11 பேரில் அடங்குவர்.

    • சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணை.
    • இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

    இச்சம்பவம் தொடர்பாக கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது. 

    சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நிலையில், பாதுகாப்பு கருதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை முடித்து போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    மத்திய சிறை வளாகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட நீதிபதி இளவரசன், சிறையில் அடைக்கப்பட்ட விவேகானந்தன், கருணாஸ் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

    • புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர்
    • இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராப் பிரச்சனையாக உள்ளது

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராப் பிரச்சனையாக உள்ளது. 28.9% குழந்தைகள் ஏதோ ஒரு வகையான பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்.

    குழந்தைகளுக்கு GOOD TOUCH, BAD TOUCH கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியமானது. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு நற்குணங்களை போதித்து வளர்ப்பதும் அவசியம்.

    புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர். இதனால் பல தீமைகளை நாம் எதிர்கொள்கிறோம் என்பது புரிகிறது. பாதுகாப்பான நாடாகவும், ஒன்றுபட்ட சமூகமாகவும் வளர்வோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு இன்று காலை விசாரணையை தொடங்கியுள்ளது.
    • இறுதி ஊர்வலத்தில் சிறுமியின் புத்தகம், பொம்மை, பை ஆகியவை வாகனம் முன்பு தொங்கவிடப்பட்டன.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த சிறுமி 9 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு இன்று காலை விசாரணையை தொடங்கியுள்ளது.

    இதற்கிடையே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுமியின் உடல் முத்தியால்பேட்டை பாடசாலை வீதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. அங்கு சிறுமியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர், சிறுமியின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதி ஊர்வலத்தில் சிறுமியின் புத்தகம், பொம்மை, பை ஆகியவை வாகனம் முன்பு தொங்கவிடப்பட்டன.


    வீட்டில் இருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலமானது பாப்பம்மாள் கோவில் மயானத்தை அடைந்ததும் சிறுமியின் குடும்ப முறைப்படி சடங்கு செய்யப்பட்டது. அதன்பின் சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது சிறுமி பயன்படுத்திய புத்தகப் பை, பொம்மை, உடைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    • அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து பந்த் போராட்டம் அறிவித்துள்ளன.
    • போதையில் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் புதுவை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. நேற்றைய தினம் கல்லூரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் சாலைமறியல், சட்டசபை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை என 10-க்கும் மேற்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதனால் புதுச்சேரியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து பந்த் போராட்டம் அறிவித்துள்ளன.

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், சம்பத், இந்தியகம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் சிறுமி படுகொலை, புதுச்சேரியில் போதை பொருளை கட்டுப்படுத்தாதது, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் இன்று மாலை 4 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் கூறும்போது, மாணவர்களுக்கு தேர்வு நடப்பதால் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அத்தியாவசிய பொருட்கள் தடைபடாத வகையில் இந்த போராட்டம் இருக்கும் என தெரிவித்தார்.

    அ.தி.மு.க. சார்பிலும் நாளை பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. மாநில செயலளார் அன்பழகன் கூறும்போது, புதுச்சேரிக்கே தலை குனிவை ஏற்படுத்தியுள்ள சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்து நாளை அ.தி.மு.க. சார்பில் பந்த் போராட்டம் நடத்தப்படும்.

    போதையில் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. பந்த் போராட்டத்தால் நாளை புதுச்சேரியில் பஸ்கள் ஓடாது.

    புதுச்சேரியை பொருத்தவரை தனியார் பஸ்களே அதிகம். பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்கமாட்டார்கள். இதோடு டெம்போ, ஆட்டோக்களும் ஓடாது. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும்.

    சிறுமி கொலையை கண்டிக்கும் வகையில் வணிகர்கள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவும் தெரி வித்துள்ளனர்.

    இதனால் பந்த் போராட்டம் முழுமையாக நடைபெறும் என தெரியவருகிறது.

    • சந்தேகத்தின் பேரில் பிடித்தவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை செய்யாமல் மேலோட்டமாக விசாரித்துள்ளனர்.
    • அலட்சியமாக செயல்பட்டதால் சிறுமியை உயிருடன் மீட்க முடியாமல் பிணமாக மட்டுமே மீட்க முடிந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த சிறுமி 2-ந்தேதி மதியம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் திடீரென சிறுமி மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    சிறுமி மாயமான தினத்தன்று மாலையே சோலை நகர் மற்றும் முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் முதலில் அலட்சியமாக விசாரணையை தொடங்கியதாக கூறப்படுகிறது. 2-வது நாளில் சிறுமியின் வீட்டை சுற்றியே தேடினர். மறுநாள் மோப்ப நாய் வரவழைத்து தேடும் பணிநடந்தது. மோப்பநாய் சிறுமியின் வீட்டில் இருந்து சிறிது துாரம் சென்று நின்று விட்டது.

    சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சிறுமி கண்ணதாசன் வீதியில் நடந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்துள்ள வீட்டில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகள் தானாக அழிந்துவிட்டது.

    அழிந்துவிட்டதாக கூறப்பட்ட சி.சி.டி.வி.யின் ஹார்டு டிஸ்க் அழிக்கப்பட்ட மூலம் காட்சிகளை மீண்டும் ரெக்கவரி செய்து பார்த்திருந்தால் அன்றே கொலை குற்றவாளிகளை கைது செய்திருக்கலாம். ஆனால் அதில் போலீசார் கோட்டை விட்டதாக கூறப்படுகிறது.

    அதுபோல் சந்தேகத்தின் பேரில் பிடித்தவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை செய்யாமல் மேலோட்டமாக விசாரித்துள்ளனர்.

    இதனால் உண்மை வெளியே தெரியவில்லை. அதில் காலதாமதம் ஏற்பட்டது. சிறுமி மாயமான இடத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்திற்கு அப்பால் உள்ள சி.சி.டி.வி.க்களில் சிறுமி குறித்து எதுவும் பதிவாகவில்லை என்பதால் சிறுமி வெளியே செல்லவில்லை என்பதை உறுதி செய்தனர்.

    3-வது நாள் சிறுமி இறந்திருக்கலாம் என கருதிய போலீசார், அங்குள்ள செப் டிக் டேங்க், குடிநீர் தொட்டி, பிரிட்ஜ்களில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர். அப்போதும் சிறுமியை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    4-வது நாள் மதியம் 2 மணியளவில் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் உடல் அழுகிய நிலையில், கழிவுநீர் கால்வாயில் இருந்து சிறுமியின் உடல் கட்டப்பட்ட மூட்டை வெளியே வந்தது. துர்நாற்றம் காரணமாக சிறுமி உடல் மிதப்பது வெளியே தெரிந்தது. அதன் பிறகே போலீசார் உடலை கண்டுபிடித்தனர். சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட தகவலும் வெளியானது.

    இவை அனைத்தும் சிறுமி மாயமான வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்திலே நடந்து முடிந்து விட்டது.

    சிறுமி மாயமான 2-ந்தேதி மதியம் முதல் 5-ந்தேதி வரை 4-வது நாளில் சிறுமியை பிணமாக மட்டுமே மீட்க முடிந்தது.

    சிறுமி மாயமான அன்றே அப்பகுதியில் யார் கஞ்சா பழக்கம் உள்ளவர்கள். யார்? யார்? சிறுமியிடம் நெருங்கி பழகுபவர்கள் என விசாரணையை தொடங்கி இருந்தால் சிறுமியை முதல் நாளிலே கண்டு பிடித்திருக்கலாம்.

    அலட்சியமாக செயல்பட்டதால் சிறுமியை உயிருடன் மீட்க முடியாமல் பிணமாக மட்டுமே மீட்க முடிந்தது.

    கொலை நடந்த பகுதி மக்கள் நடமாட்டம் மிக்க பகுதி. அருகருகே வீடுகள் உள்ளது. எப்போதும் சாலையில் மக்கள் அமர்ந்திருப்பர். இந்த பகுதியிலேயே துப்பு துலக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக செயல்பட்டதை காட்டுகிறது.

    கொலையாளிகளும் சிறுமி மாயமான நாள் முதல் சகஜமாக வெளியில் நடமாடியுள்ளனர்.

    • சிறுமி கொலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து டிஜிபி விளக்கம் அளித்தார்
    • வாட்ஸ்-அப் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க துணை நிலை ஆளுநர் வலியுறுத்தினார்

    முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், புதுச்சேரி காவல்துறை டிஜிபி சீனிவாஸ், புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்தார்.

    இவ்வழக்கில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துணை நிலை ஆளுநர், டிஜிபி-யிடம் கேட்டறிந்தார்.

    மேலும், இச்சம்பவம் தொடர்பாக வாட்ஸ்-அப் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்க டிஜிபி-யிடம் துணை நிலை ஆளுநர் வலியுறுத்தினார்.

    • சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளது.
    • சிறுமியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு இன்று காலை முதல் விசாரணையை தொடங்கியுள்ளது.

    சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று இரவு உத்தரவிட்டது.

    இதையடுத்து சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டு, விசாரணையை இன்று காலை சிறப்புக் குழு தொடங்கியுள்ளது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளது.


    இதற்கிடையே, பெற்றோரிடம் ஒப்படைக்க சிறுமியின் உடலுக்கு புதுச்சேரி மாநில டி.ஜி.பி. சீனிவாசன் அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

    முத்தியால்பேட்டை பாடசாலை வீதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காலை 10 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×