search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பெருமை நிறைந்த புரட்டாசி!
    X

    பெருமை நிறைந்த புரட்டாசி!

    • திருமாலின் நாமத்தை ஜபித்து விஷ்ணுவை வழிபடுகிறார்கள்.
    • புரட்டாசி ஏகாதசியும் சிறப்பானதுதான்.

    சித்திரை தொடங்கிக் கணக்கிடப்படும் பன்னிரண்டு தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் ஆறாவது மாதம். இம்மாதம் முப்பத்தியோரு நாட்களை உடையது.

    `மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்` என்று கண்ணன் கீதையில் சொன்னாலும், அன்பர்கள் புரட்டாசியையும் பெருமாளுக்குரிய மாதமாகவே கருதுகிறார்கள்.


    திருமாலின் வடிவமான திருப்பதி வேங்கடவனின் ஆசி பெற விரும்பும் அன்பர்கள், வேங்கடாஜலபதியை விசேஷமாகப் புரட்டாசியில் வழிபடுகிறார்கள்.

    அதற்கு ஒரு காரணம் உண்டு. வெங்கடாஜலபதி திருப்பதியில் அவதரித்தது ஒரு புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் தான்.

    படிப்படியாய் மலையில் ஏறி திருப்பதி மலையப்பனை தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், நம்மை எப்படி கடக்க முடியும் என மலைக்க வைத்த துன்பங்களெல்லாம் படிப்படியாய்க் குறைந்து நிம்மதி தோன்றும் என்று அடியவர்கள் நம்புகிறார்கள்.

    வைணவர்கள் மட்டுமல்லாமல் சைவர்களில் பலரும் கூட புரட்டாசி சனிக்கிழமையன்று நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டு திருமாலின் நாமத்தை ஜபித்து விஷ்ணுவை வழிபடுகிறார்கள்.

    வேங்கடவனுக்கு மாவிளக்கு ஏற்றிப் பிரார்த்தனை செய்யும் மரபு பல குடும்பங்களில் வழிவழியாக வருகிறது. அவர்களெல்லாம் மாவிளக்கு ஏற்ற புரட்டாசி சனிக்கிழ மையைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

    புரட்டாசி காலஞ்சென்ற நம் குடும்ப முன்னோர்களை வழிபடுவதற்குரிய மாதமாகவும் கருதப் படுகிறது. முன்னோருக்கு நீர்க்கடன் செலுத்தும் மகாளய அமாவாசை புரட்டாசி மாதத்தில்தான் வருகிறது.

    பவுர்ணமி தொடங்கி அமாவாசை முடிய உள்ள பதினைந்து நாட்கள் அடங்கிய காலகட்டம் `மகாளய பட்சம்` எனப்படுகிறது. அந்தப் பதினைந்து நாட்களும் நம் முன்னோர் மேலுலகில் இருந்து வந்து நம்மோடு தங்கிச் செல்கிறார்கள் என்பதும் அந்த நாட்களில் அவர்களைப் பிரார்த்தனை செய்வதால் அவர்கள் ஆசியைப் பெறமுடியும் என்பதும் அன்பர்களின் நம்பிக்கை.

    பித்ருக்களுக்கு நீர்க்கடன் செலுத்துதல் பழங்காலம் தொட்டே தமிழர்களிடம் நிலவிவந்த ஒரு பழக்கம். திருக்குறளும் நீத்தாருக்கு நீர்க்கடன் செய்யும் அவசியத்தைப் பேசுகிறது.

    ஒருவன் தன் சம்பாத்தியத்தை ஐந்தாய்ப் பிரித்து அதில் ஒரு பங்கை நீத்தார் கடன் செலுத்தப் பயன்படுத்தவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

    `தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்

    தான் என்றாங்கு

    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'

    என்கிற திருக்குறளில் பித்ருக்களுக்கு நீர்க்கடன் செலுத்தவேண்டும் என்பதைச் சொல்லும்போது `காலமான முன்னோர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான்` என்ற வரிசையில் பித்ருக்களை முதலில் வைக்கிறார் வள்ளுவர் என்பதும் கவனத்திற்குரியது.


    புரட்டாசி அமாவாசை மட்டுமா, புரட்டாசி ஏகாதசியும் சிறப்பானதுதான். அன்று உண்ணாநோன்பு மேற்கொண்டு பெருமாளைத் துளசியால் அர்ச்சித்து வழிபட்டுப் பலனடைகிறார்கள் பக்தர்கள்.

    தேவியை வழிபடும் நவராத்திரியும் இந்த மாதத்துப் பண்டிகைதான். இது பெண்களுக்கே உரிய பண்டிகை. `காளையர்க்கு ஓரிரவு சிவராத்திரி ஆனால் கன்னியர்க்கு ஒன்பதுநாள் நவராத்திரி' என்பன கண்ணதாசன் வரிகள்.

    அழகிய படிகளைக் கட்டி பொம்மைகளை அவற்றில் வரிசையாய்க் கொலு வீற்றிருக்கச் செய்து கொண்டாடப்படும் நவராத்திரி போன்றதொரு பண்டிகை உலகில் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

    மண் பொம்மைகளைச் செய்து அவற்றின் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கைவினைக் கலைஞர்கள் ஆண்டுதோறும் ஆவலாக எதிர்பார்ப்பது நவராத்திரிப் பண்டிகையைத் தான். வருடம் முழுவதற்குமான அவர்களின் வாழ்க்கைக்கு புரட்டாசியில் வரும் நவராத்திரி விற்பனைதான் வழி செய்கிறது.

    கவுரி விரதம், மகாலட்சுமி விரதம், தசாவதார விரதம் போன்ற பற்பல வித்தியாசமான விரதங்கள் எல்லாம் புரட்டாசியில்தான் வருகின்றன.

    புரட்டாசி ஆன்மிக மாதம் என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் பற்பல மகான்கள் பிறந்திருப்பது இந்த மாதத்தில்தான் என்பதைச் சொல்லலாம்.

    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் புரட்டாசியில் பிறந்தவர்தான். திருவள்ளுவரின் புலால் உண்ணாமைக் கோட்பாட்டைத் தீவிரத்தோடு வலியுறுத்திய மகான் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

    புரட்டாசி வள்ளலார் பிறந்த மாதம் என்பதால் அந்த மாதத்திலாவது அசைவ உணவை முற்றிலுமாகத் தவிர்க்கும் பழக்கம் சிலரிடம் காணப்படுவது பொருத்தமானதுதான்.

    வைணவச் சான்றோரும் தமிழ் வடமொழி இரண்டிலும் மிகச் சிறந்த நூல்களைப் படைத்தவருமான வேதாந்த தேசிகர் பிறந்ததும் புரட்டாசியில் தான்.

    திருமந்திரம் என்ற அரிய தத்துவச் செய்யுள் நூலைப் படைத்தவரும் திருவிடை மருதூரில் சமாதிக் கோயில் கொண்டிருப்பவருமான திருமூலர் அவதரித்ததும் ஒரு புரட்டாசி மாதத்தில்தான்.

    தாகூரால் மகாத்மா என அழைக்கப் பட்ட காந்தி அடிகளும் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இளம் வயதிலேயே சுதந்திரப் போரில் உயிர் நீத்த கொடிகாத்த குமரன் பிறந்ததும் புரட்டாசியில்தான். ராமாயணம் என்ற மகத்தான இதிகாசத்தைப் படைத்த ஆதிகவி வால்மீகி அவதரித்ததும் புரட்டாசி அனுஷ நட்சத்திரத்தில்தான்.

    மறுமையில் வீடுபேறு அடைவதற்குரிய புண்ணியச் செயல்களைச் செய்யும் மாதம் இது என்பதாலோ என்னவோ, இம்மையில் வீடு வாங்குதல் போன்ற செயல்களைப் பொதுவாகப் புரட்டாசி மாதத்தில் செய்வதில்லை.

    புதுமனை புகுவிழாக்களையோ புது வியாபாரம் தொடங்குதல் போன்றவற்றையோ அதுபோன்ற எந்தப் புது முயற்சியையுமே புரட்டாசியில் செய்யும் வழக்கமில்லை.

    பூண்டு வெங்காயம் போன்றவற்றை இந்த மாதத்தில் உணவில் சேர்க்காமல் தவிர்ப்பவர்கள் உண்டு. புரட்டாசி மாதம் முழுவதிலும் முடியவில்லை என்றாலும் புரட்டாசி சனிக்கிழமை அன்றாவது அசைவத்தையும் பூண்டு வெங்காயத்தையும் தவிர்ப்பவர்கள் நிறையப் பேர் உண்டு.

    புரட்டாசி சனிக்கிழமையன்று முழுவதுமாக உண்ணாவிரதம் இருப்பவர்களும் கூட உண்டு.

    திருமாலைப் பற்றிய பக்திப் பனுவல்களில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நாராயணீயம் முக்கியமானது. நாராயணனைப் போற்றி நாராயண பட்டதிரி அருளிய நூலே நாராயணீயம்.

    குருவாயூரப்பனை முன்னிலைப் படுத்தி அவருடன் பேசுவது போலான உத்தியில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை எப்போது பாராயணம் செய்தாலும் புண்ணியம்தான். என்றாலும் திருமாலுக்குரிய புரட்டாசி மாதத்தில் பாராயணம் செய்வது விசேஷமானது.

    ஒரு பக்தி நூலைப் பாராயணம் செய்வதால் ஏற்படும் பலன்களைப் பற்றிச் சொல்லக் கூடியது அந்த நூலின் இறுதியில் அமைந்து ள்ள பலச்ருதி என்ற பகுதி.

    நாராயணீயத்தின் பலச்ருதி என்பது உடல் ஆரோக்கியம்தான். நம் உடல் நலனை வலுப்படுத்தக் கூடிய மந்திர சக்தி நிறைந்த சுலோகங்களைக் கொண்டது நாராயணீயம்.

    பத்துப் பத்துக் கவிதைகளாக அமைந்த நாராயணீயத்தின் நூறு தசகங்களில் ஒவ்வொரு தசகத்தின் இறுதியாக அமையும் பாடலிலும் `என் நோயிலிருந்து என்னைக் காத்தருள் இறைவா!` என்ற பொருளுடைய வாக்கியம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

    நாராயணீயத்தைப் புரட்டாசி மாதத்தில் பாராயணம் செய்வதால் நோய்நீங்கி நல்ல உடல்நலத்தோடு கூடிய ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற முடியும்.

    திருமாலின் ஆயிரம் நாமங்களைக் கூறி அவரைத் துதிக்கும் சகஸ்ர நாமத்தையும் புரட்டாசியில் நாள்தோறும் ஜபிப்பது நல்ல பலனைத் தரும்.

    புரட்டாசியில் செய்யும் ராமநாம ஜபம் அதிகப் பலன்தரக் கூடியது. வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், பாகவதம், மகாபாரதம் முதலிய திருமாலின் பெருமைகளைப் பேசும் நூல்களை இந்த மாதத்தில் பாராயணம் செய்வது சிறப்பு.

    கண்ணன் அருளிய கீதையை மனமொன்றி வாசித்து அதுசொல்லும் கருத்துகளை ஆழ்மனத்தில் சிந்திப்பதற்குரிய விசேஷ மாதமும் புரட்டாசியே.

    பலர் பல்வேறு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதாக மனத்தில் வேண்டிக் கொள்வதுண்டு. ஆனால் உலகச் சூழலில் பற்பல காரணங்களால் அத்தகைய நேர்த்திக் கடன்களை உடனுக்குடன் செலுத்த இயலாமல் போவதும் உண்டு.

    செலுத்தாமல் தாமதமான நேர்த்திக் கடன்களைச் செலுத்துவதற்குரிய மாதமும் புரட்டாசிதான். விட்டுப்போன நேர்த்திக் கடன்களைப் புரட்டாசி மாதத்தில் செலுத்தினால், இறைவன் அந்தத் தாமதத்தை மன்னித்து அன்பர்களுக்கு அருள் புரிவார் என நம்பப் படுகிறது.

    புரட்டாசியில் திருப்பதி, ஸ்ரீரங்கம், குணசீலம், ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலான வைணவத் திருத்தலங்களில் பிரம்மோத்சவத் திருவிழா கொண்டாடப் படுகிறது.

    பத்து முதல் பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் காலையும் மாலையும் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும். திருப்பதி பிரம்மோத்சவமும் திருவரங்க பிரம்மோத்சவமும் மிகப் பிரசித்தமானவை.

    புரட்டாசி மாதத்தில் நாம் வழிபடும் திருமால், தொன்றுதொட்டுத் தமிழர்கள் வழிபட்டுவரும் தெய்வமாவார். தொல்காப்பியம் என்ற மிகப் பழைய தமிழ் இலக்கண நூல் திருமாலை `மாயோன்` என்ற பெயரால் குறிப்பிடுகிறது.

    ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் `ஆய்ச்சியர் குரவை` என்ற பகுதியில் மதுரையில் வாழும் இடைக்குலப் பெண்கள் திருமாலைப் போற்றுவதாக அமைந்த பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    `மடம்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்

    கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும்

    போற்ற

    படர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்குத்

    தூது

    நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே!

    நாராயணா என்னா நா என்ன நாவே!'

    என்றெல்லாம் அந்தப் பகுதியில் திருமாலைப் போற்றுகிறார் சமணப் புலவரான இளங்கோ அடிகள்.

    படைத்தல் காத்தல் அழித்தல் ஆகியவை இறைச்சக்தியின் மூன்று பெரும் தொழில்கள். அவற்றில் காக்கும் தொழிலைச் செய்பவர் திருமால். அவருக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் அவரைப் பிரார்த்திப்பதன் மூலம் நம் இன்னல்கள் அனைத்திலிருந்தும் நாம் காக்கப் படுவோம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×