search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மறுபிறவி இல்லா நிலை அருளும் கருவேலி கருணாதேஸ்வரர்
    X

    மறுபிறவி இல்லா நிலை அருளும் கருவேலி கருணாதேஸ்வரர்

    • சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • புகழ் சார்ந்த வாழ்வைத் தரவல்ல உன்னதமான திருத்தலம்

    ஒருவர் மரணம் அடைந்த பிறகுதான், அவர் செய்த மாபெரும் பணிகள், சேவைகள், தானங்கள் ஒவ்வொன்றாக வெளியில் வரும். இதற்கு சமீபத்திய உதாரணம் நடிகர் விஜயகாந்த்.

    இந்த உலகில் வாழும்போது தான் சம்பாதித்த நற்பெயரையும் புகழையும் எவர் விட்டுச் செல்கிறாரோ அவரே வாழ்வாங்கு வாழ்ந்தவராக மதிக்கப்படுவார்: துதிக்கப்படுவார். அத்தகைய புகழ் சார்ந்த வாழ்வைத் தரவல்ல உன்னதமான திருத்தலம் தான் கருவேலி சற்குணநாதர் திருக்கோவில்.

    கும்பகோணம் அருகே இருக்கும் வித்தியாசமான ஆலயங்களில் இந்த ஆலய மும் ஒன்று. கும்பகோணம் ஆன்மிக யாத்திரை செல்பவர்கள் தவிர்க்கக் கூடாத ஆலயமும் கூட.

    தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இவ்வாலயம் சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 126-வது தலமாகவும் காவிரி தென்கரைத் தலங்களில் 3-வது தலமாகவும் திகழ்கின்றது.

    அரசலாற்றின் வடகரையிலும் காவிரி தென்கரையிலும் அமைந்துள்ள இத்தலம் அஷ்டதிக் பாலகர்கள் வழிபட்ட தலங்களில் ஒன்றாகத் திகழ்வதோடு, மூர்த்தி, தலம் தீர்த்தம் என முப்பெரும் சிறப்புகளுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளை பெற்றதொரு தலமாக விளங்குகிறது. இத்தலத்தைச் சுற்றி அஷ்டதிக் பாலகர்கள் வழிபட்ட தலங்களும் உள்ளன.

    இந்திரன் - நாகம்பாடி

    அக்னி - வன்னியூர்

    எமன் - கருவிலி.

    நிருதி - வயலூர்

    வருணன் - சிவநகரம்

    வாயு (-) அகாலங்கன்.

    குபேரன் - எஸ், புதூர்.

    ஈசானன் - நல்லாவூர்

    இந்த எட்டு தலங்களில் எமன் வழிபட்ட தலம்தான் கருவிலி.

    முற்பிறவியில் ஒரு தீயவனுக்கு மகளாகப் பிறந்த பாவத்திற்காக ஈசன் மனைவியே மறுபிறவி எடுக்கவேண்டி வந்தது. அவள் மறுபிறவியில் இறைவனை அடைந்ததால் பிறவாநிலை பெற்றாள்.

    அதுபோலவே இத் தலத்து இறைவனைக் காண்போருக்கு மறுபிறவியில்லை அதாவது அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள். இதனால் தான் இவ்வூர் கருகில்லை. என்னும் பொருளில் கருவிலி எனப்படுகிறது. காலப்போக்கில் கருவேலி என மருவியது. கருவுக்கு வேலி என்றும் பொருள்கொள்ளலாம்.

    இத்தலத்தின் முக்கிய பெருமை நல்ல குணங்கள் உள்ளவ ருக்கு அந்த குணங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்பதும், தீய குணங்கள் இருந்தால் அது மறைந்துவிடும் என்பதுவுமாகும். எனவே இவ்வூர் இறைவன் 'சற்குணேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

    சற்குணன் என்னும் மன்னன் இக்கோவிலில் வழிபட்டு திருப்பணிகள் செய்து குறைகள் நீங்கப்பெற்று, பிறவிக்கடலைக் கடந்து மோட்சமும் பெற்றான் என்று கல்வெட்டு செய்திகள் கூறுகிறது.

    தட்சனின் யாகத்தின்போது நடந்த கோர நிகழ்வால் தாட்சாயிணியை இழந்த ஈசன் பித்துப் பிடித்தாற்போல ஊர் ஊராக சுற்றித் திரிந்து இறுதியில் அமர்ந்த இடம் கருவிலி என புராணம் கூறுகிறது.

    அப்போது ஈசனுடன் சேர்வதற்கு அன்னை பார்வதி அழகே உருவாக மீண்டும் தோன்றிய இடம், கருவிலி ஆலயத்தில் இருந்து அரைகிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அம்பாச்சிபுரம் என்று சொல்கிறது புராணம்.

    இறைவனுடன் சேர அம்மை தங்கி அர்ச்சித்த இடமே அம்பாச்சிபுரம். முப்புரமும் எரித்த ஈசன் ஆனந்தக் களிப்பில் கொடுகொட்டி என்னும் ஆட்டத்தை இத்தலத்தில் நிக ழ்த்தினார். எனவே இத்தலம் கொட்டிடை என்றழைக்கப் படுகிறது.

    திருக்கடையூரில் எமன் மார்க்கண்டேய னுக்கு பாசக்கயிற்றை வீச. சிவபெருமான் தடுத்தார். இதனால் பயந்த எமதர்மனை, கருவிலி வந்து நீராடி தன்னை வணங்குமாறு ஈஸ்வரன் பணித்தார். எமன் இங்குவந்து நீராடி வணங்கி தன் பாவம் நீங்கப் பெற்றான் இக்குளத்தில் நீராடினாலும், தலையில் தெளித்துக்கொண்டாலும் எமபயம் போகும்.

    சிவன் கோவில்களில் மூன்றுவிதமாக அம்மன் சந்நிதிகளை. அமைக்கலாம் என்று ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதாவது சமான வீஷணம், அனுக்கிரஹ வீஷணம், அபிமுக வீஷணம் என்பர்.

    சிவன் சந்நிதி (கிழக்கு அல்லது மேற்கு) எந்த திசை நோக்கி அமைக்கப்பட்டிருக்கி றதோ அந்த திசை நோக்கியே அம்மனையும் பிரதிஷ்டை செய்வது அதாவது சுவாமியும் அம்பாளும் ஒரே திசை நோக்கிக் காட்சி தருவதை 'சமான வீஷணம் என்பர் சில கோவில்களில் சுவாமிக்கு வலப்புறம் அம்மன் சந்நிதியும் சில கோவில்களில் சுவாமிக்கு இடப்புறம் அம்மன் சந்நிதியும் அமைந்திருக்கும். சுவாமிக்கு வலப்பக்கம் அம்மன் சந்நிதி இருப்பதை திருமணக் கோலம் என்றும், சுவாமிக்கு இடப்புறம் அம்மன் சந்நிதி இருப்பதை அர்த்தநாரீஸ்வர கோலம் என்றும் கூறுவர்.

    சிவன் சந்நிதி கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைந்திருக்கும். இருப் பினும் அம்மன் சந்நிதி தெற்கு நோக்கியே அமைந் திருக்கும். இதனை 'அனுக் கிரஹ வீஷணம்' என்பர்.

    இந்த முறையில் சுவாமியை தரிசிக்கும் ரீதியில் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருப்பாள். சுவாமியின் அனுக் கிரஹத்தைப் பெற்று அம்பாள் நமக்கு அருள் புரிவதாக ஐதீகம். பெரும்பாலான சிவாலயங் களில் இந்த முறையிலான அமைப்பே காணப் படுகின்றது.

    சுவாமி சந்நிதி மேற்கு நோக்கி அமைந்தி ருந்தால் அம்பாளின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். சுவாமியும் அம்பாளும் நேரெதிரே பார்த்துக் கொள்ளும் நிலையான இதனை 'அபிமுக வீஷ ணம்' என்பர். 'எதிர்காட்சி என்று சொல்லப்படும் இந்தநிலை மிகவும் அபூர்வமானது. திருக் கடையூர், காள ஹஸ்தி போன்ற தலங்களில் இந்த அமைப்பினை தரிசிக்கலாம்.

    மேற்கூறிய வகைகளில் 'சமான வீஷணம்' என்னும் சாஸ்திரப்படி சுவாமியும் அம்பாளும் ஒரே திசையான கிழக்கு நோக்கி, சுவாமிக்கு இடப்புறம் அம்மன் சந்நிதி அர்த்தநாரீஸ்வர கோலம் என்னும் அமைப்பில் கருவிலி தலத்தில் அமைந்துள்ளது சிறப்பம்சம் வாய்ந்த ஒன்று.

    இறைவனுடன் சேர்வதற்கு அம்பாள், அம்பாச்சிபுரம் என்னும் இடத்தில் சிலகாலம் தங்கி, பின் உலகத்து அழகையெல்லாம் ஒன்றுதிரட்டிய சர்வாங்க சுந்தரியாக இறைவனின்முன் நின்றாளாம்.

    அம்பாளை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. இவளை தரிசித்த இளம்பெண்களின் திருமணம் காலதாமதமின்றி, தடையின்றி நடப்பதோடு, குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தைப் பேறும் கிடைக்கிறதென்று பயனை டந்தவர்கள் கூறுகின்றனர்.

    இத்தலத்தில் குடிகொண்டுள்ள தெய்வங்களை வணங்கும் பேறுபெற்றவர்கள் இனி எந்தவொரு கருவிலும் பிறக்க வேண்டியதில்லை என்னும் வரம் கிடைக்கும்.

    * இந்திரனும், தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறுபெற்றுள்ளனர்.

    * 'உய்யக்கொண்டான் வளநாட்டு, வெண்ணாட்டு, குலோத்துங்க சோழ நல்லூராகிய சுருவிலிக் கொட்டிடை என்னும் கல்வெட்டுச் செய்தி இரண்டாம் ராஜாதிராஜன், ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட தற்குரிய ஆதார முள்ளது. இத்தல மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    * சிவாலயத்திற்குரிய அனைத்து விசேஷங்களும் முறைப்படி ஆலய நிர்வாகக் குழு, அற நிலையத் துறையின் கண்காணிப்பில் சிறப்பாக நடைபெறுகிறது.

    * தேய்பிறை அஷ்டமியில் பைர வருக்கும், பிரதோஷ வழிபாடும் விமரிசையாக நடக்கும்.

    * மூல நட்சத்திரம் மற்றும் சனிக் கிழமைகளில் சஞ்சீவி ஆஞ்சனே யருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

    * வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ராகுகால வேளையில் துர்க்கை, சிம்மவாகினிக்கு வழிபாடு நடைபெறும்.

    * எமதீர்த்தக் குளத்தில் கங்கையை சடையில்கொண்ட ஈசனின் சிற்பம் அமைந் துள்ளது சிறப்பான ஒன்று.

    கோவில்கள் நிறைந்த கும்ப கோணத்தில் உள்ள அனைத்து கோவில் களையும் தரிசித்த பலன் இந்த ஒரு கோவிலை தரிசித்தாலே கிடைத்துவிடும்' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகரான குமார் குருக்கள்.

    அரசலாற்றின் வடகரையில் கருவிலி ஊரின் மையத்தில் வயல்வெளிகளுக்கு நடுவே இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது ஆலயம்.

    ஜாதகத்தில் குருவுடன் சர்ப்ப கிரகங்களான ராகு அல்லது கேது இணைந்தால் குரு சண்டாள யோகம் ஏற்படும். 7-ம் இடத்தில் ராகு - கேது இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும். அதனால் திருமணத்தடை, சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், சுருத்து வேறுபாடு காரணமாக தம்பதியர் பிரிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    அத்தகையவர்கள் கருவேலி தலத்திற்கு வந்து மூலவர், அம்பாளை தரிசனம் செய்து, சுவாமி சந்நிதியிலுள்ள தட்சிணாமூர்த்திக்கு புதுவஸ்திரம் சாற்றி அபிஷேக அர்ச்சனை செய்தால் நல்லதீர்வு கண்டு நலமுடன் வாழலாம்.

    காலை 6.30 மணிமுதல் பகல் 12.30 மணிவரையிலும்; மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

    கும்பகோணம்- நாச்சியார் கோவில்- எரவாஞ்சேரி- பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்தால், அங்கிருந்து அரசலாற்றின் வடகரையில் உள்ளது கருவேலியை எளிதாக சென்று அடையலாம்.

    Next Story
    ×