search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    குறைகளை கடந்து வெற்றிபெற்ற ஹெலன் கெல்லர்
    X

    குறைகளை கடந்து வெற்றிபெற்ற ஹெலன் கெல்லர்

    • சாதனைக்கு வழி தைரியம் என்ற தன்னம்பிக்கை தான்.
    • தன்னம்பிக்கையும் மன உறுதியும் இன்றி எந்த ஒன்றையும் செய்ய முடியாது.

    உடல் குறையெல்லாம் இருந்தாலும் உலகம் புகழும் அளவு வெற்றி பெற்றதோடு அனைவருக்கும் எடுத்துக்காட்டான ஒரு வாழ்வை வாழ்ந்து காட்டலாம் என்று வாழ்ந்து காட்டிய பெண்மணி யார் தெரியுமா? ஹெலன் கெல்லர் என்ற அபூர்வமான பெண்மணிதான் அவர்.

    பிறப்பும் இளமையும்: அமெரிக்காவில் அலபாமாவில் உள்ள ஒரு சிறு நகரான டுஸ்கும்பியாவில் 1880-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி பிறந்தார் ஹெலன் கெல்லர். பிறந்த 19வது மாதத்தில் குழந்தையாக இருந்தபோது அவர் கண் பார்வையை இழந்தார். காதால் கேட்கும் செவிப்புலன் சக்தியையும் இழந்தார்.

    அவரால் பேசவும் முடியவில்லை. புலன்களில் இயக்கம் பற்றிய சிக்கல் ஏராளமாக அவரிடம் இருந்தது.

    ஹெலனுடைய தாயார் தன் குழந்தைக்கு உதவி செய்வதற்கான தகுந்த நபரைத் தேட ஆரம்பித்தார். காது கேட்காத குழந்தைகளுக்காக உதவி புரிந்து வந்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லை அவர் நாடினார். பெல் அவரை மசாசூசெட்சில் இருந்த பெர்கின்ஸ் 'ஸ்கூல் பார் தி பிளைண்ட்' என்ற கண்பார்வையற்றோருக்கான பள்ளியை நாடுமாறு ஆலோசனை கூறினார்.

    ஹெலனின் தாயார் அந்தப் பள்ளியை நாடினார். பள்ளி ஹெலனுக்கு உதவி புரிய ஆன்னி சல்லிவன் என்ற ஒரு இளம் ஆசிரியையை அனுப்பியது. அவரே அந்தப் பள்ளியில் மாணவியாக இருந்தவர் தான். அவரும் பார்வை இழந்த ஒருவர்தான்.

    அவர் ஒரு மாதம் ஹெலனுடன் பழகி வந்து, பின்னர் பல பொருள்களின் பெயரைக் கற்றுத் தர ஆரம்பித்தார். பல பொருள்களை ஒவ்வொன்றாக ஹெலன் கையில் வைப்பார். அந்தப் பொருளின் பெயரைத் தன் விரல்களினால் கூறுவார். விரல்கள் மூலம் அந்தப் பொருளின் பெயருக்கான எழுத்தை உணர வைப்பார்.

    ஆனால் ஹெலனுக்கோ அவர் என்ன செய்கிறார் என்பதே முதலில் புரியவில்லை. அவரோ குருடு, செவிடு! தனது விரல்களில் ஏதோ ஒரு அசைவு ஏற்படுவதையும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அந்த அசைவு நகர்வதையும் மட்டும் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

    ஒரு நாள் ஹெலனின் கையில் ஆன்னி ஒரு கோப்பையைக் கொடுத்தார். விரல்களில் அசைவு ஏற்பட்டது. அவை கப் என்பதற்கான அசைவுகள்! அடுத்து அந்தக் கோப்பையில் நீரை ஊற்றினார். இப்போது வாட்டர் என்பதற்கான எழுத்துக்களுக்கான அசைவுகள் ஏற்பட்டன.

    ஹெலனுக்கோ ஒன்றுமே புரியவில்லை. முதலில் கப்க்கும் வாட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல் மாற்றி மாற்றிச் சொன்னார். அவருக்கு கோபம் கோபமாக வந்தது.

    ஆன்னி விடவில்லை. அவரை பம்ப் ஹவுசுக்குக் கூட்டிக் கொண்டு சென்றார். அங்கு அவர் நீரை பம்ப் செய்ய கோப்பையை ஹெலன் பிடிக்குமாறு செய்தார். இன்னொரு கையால் வாட்டர் என்பதற்கான ஸ்பெல்லிங்கை விரல் அசைவுகள் செய்து காட்டினார். ஹெலன் அசைவற்று நின்றார். அவரது முழுக் கவனமும் அந்த அசைவுகளின் மீது இருந்தது. இப்போது அவருக்குச் சற்று புரிய ஆரம்பித்தது.

    நீர் அவர் கையில் பாய ஆரம்பித்தபோது இனம் தெரியாத உணர்வு அவருக்குள் ஏற்பட்டது. அது சாவிலிருந்து மீண்டும் உயிர் பிழைத்தது போல அவருக்கு இருந்தது.

    இப்படித்தான் ஆரம்பித்தது அவரது படிப்பு!

    ஆன்னி தன் பணியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு அபூர்வமான ஆசிரியை! அவரால் தான் ஹெலன் கெல்லர் பேச முடிந்தது, எழுதப் படிக்க முடிந்தது. ஏன், பாடவும் கூட முடிந்தது!

    பல வருடங்கள் அவரிடம் படித்த பின்னர் ஹெலன் பெர்கின்ஸ் பள்ளிக்குச் சென்றார். ஆங்கிலத்தைத் தவிர பிரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, கிரேக்கம், லத்தீன், ப்ரெய்லி ஆகிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.

    கடுமையாக உழைத்த பின்னர் 1900-ம் ஆண்டில் ரெட்கிளிப் கல்லூரிக்குச் செல்ல அவர் தயாரானார். 1904-ம் ஆண்டில் அவர் பட்டதாரியானார். செவிடாகவும் கண்பார்வையற்றவராகவும் இருந்து பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் அவர் தான்!

    1902-ம் ஆண்டு அந்தக் கல்லூரியில் படிக்கும்போதே அவர், 'தி ஸ்டோரி ஆப் மை லைஃப்" என்ற தனது சுய சரிதையை எழுதினார். ஜான் ஆல்பர் மேசி என்பவர் அவருக்கு உதவினார். தனது வாழ்நாளில் அவர் 14 புத்தகங்களையும் 475-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதினார்; உரைகளை நிகழ்த்தினார்.

    1939-ம் ஆண்டு தொடங்கி 1959-ம் ஆண்டு முடிய ஐந்து கண்டங்களில் உள்ள 39 நாடுகளுக்கு பயணம் செய்து அனைவருக்கும் அவர் உத்வேகம் ஊட்டினார். உலகப் பெண்மணி ஆனார்.

    சமுதாயத்தில் உடல் ஊனமுற்றோருக்காக அவர் குரல் கொடுத்தார். அத்துடன் பெண்களின் உரிமைகளுக்காகவும் அவர் பாடுபடலானார். குறிப்பாக அவர்களது ஓட்டுரிமைக்காக அவர் போராடினார். 1920-ல் அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியனை நிறுவிய ஸ்தாபகர்களில் அவரும் ஒருவராக இருந்தார், ஒவ்வொரு மனிதரின் தனி மனித உரிமையை வலியுறுத்தும் சங்கமாக இது அமைந்தது.

    இரண்டாம் உலகப்போரில் காயமடைந்த ராணுவ வீரர்கள் இருந்த மருத்துவமனை

    களுக்குச் சென்று அவர்களுக்கு ஹெலன் ஆறுதல் கூறினார். அமெரிக்காவில் உள்ள கண் பார்வையற்றோருக்காக ஒரு நிறுவனம் தனியாக அமைந்தது. அதற்கென 20 லட்சம் டாலர் நிதியை அவர் திரட்டி உதவினார்.

    உயரிய விருதும் மறைவும்:

    அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்ஸன் 1964, செப்டம்பர் 14-ம் தேதியன்று அவருக்கு 'பிரெசிடென்ஷியல் மெடல் ஆப் பிரீடம்; என்ற அமெரிக்காவின் உயரிய சிவிலியன் ஹானர் விருதை அளித்தார்.

    ஹெலனின் குடும்பம்:

    ஹார்வர்ட் பயிற்றுவிப்பாளரான ஜான் மேசி என்பவரை 1905-ம் ஆண்டு ஹெலன் மணந்தார்.

    1936-ல் வருந்தத்தக்க ஒரு சம்பவமாக அவருக்கு கல்வி கற்பித்த ஆசிரியையான அன்னி சல்லிவன் மறைந்தார்.

    ஹெலன் தனது ஆசிரியையான ஆன்னி சல்லிவனைச் சந்தித்ததைப் பற்றி உளமார தனது சுய சரிதையில் குறிப்பிடுகிறார் இப்படி: "எனது வாழ்க்கையில் மிகக் குறிப்பிடத்தகுந்த ஒரு நாள் என்பது எனது ஆசிரியையான ஆன்னி மேன்ஸ்ஃபீல்ட் சல்லிவன் என்னிடம் வந்த நாள் தான். "ஆன்னி சல்லிவனின் பரிவும் ஹெலனின் விடாமுயற்சியுமே அவரது வெற்றிக்குக் காரணம்.

    ஹெலன் கெல்லரைப் பற்றிய படங்கள்:

    ஹெலனைப் பற்றி 'டெலிவரன்ஸ்' என்ற ஒரு படம் அவரது வாழ்கை வரலாற்றைச் சித்தரித்து 1919-ல் எடுக்கப்பட்டது.1959-ல் அவரைப் பற்றி 'தி மிராகிள் வொர்கர்' என்ற நாடகம் அரங்கேறியது. 1960-ல் இது புலிட்சர் விருதைப் பெற்றது. இதுவே அன்னி சல்லிவனை மையமாகக் கொண்ட திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

    மறைவு: 1968-ம் ஆண்டு ஜூன் முதல் தேதி தனது 87-ம் வயதில் கனெக்டிகட்டில் ஈஸ்டனில் அவர் மறைந்தார். வாஷிங்டனில் உள்ள செயின்ட் ஜோசப் சப்பலில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

    "உலகில் சில மனிதர்களே இறக்காமல் இருக்கப் பிறக்கிறார்கள். அவர்களுள் ஹெலன்கெல்லரும் ஒருவர்" என்று அமெரிக்க செனேடர் லிஸ்டர் ஹில் அவரைப் போற்றிப் புகழாரம் சூட்டினார்.

    கண்பார்வையற்றோரின் சாதனைகள்: இந்து மகான்களில் சூர்தாஸ் கண்பார்வை இல்லாமலிருந்தும் கிருஷ்ண தரிசனத்தைப் பெற்ற வரலாற்றை நமது அறநூல்கள் எடுத்துக் கூறுகின்றன.

    செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள பூதூரில் பிறந்த அந்தகக்கவி வீரராகவ முதலியார் பிறவியிலேயே கண்ணொளியை இழந்தவர். அற்புதமான தமிழ்ப் பாடல்களை இயற்றிய இவர் இலங்கை சென்று பரராஜசேகர மன்னனைப் பாடி ஒரு யானை, பொற்பந்தம், ஒரு ஊர் ஆகியவற்றைப் பரிசிலாகப் பெற்று வந்தார்.

    பிறர் மனதில் இருப்பதை அறிந்து அதற்குத் தகுந்த பாடல் பாடுவதில் இவர் வல்லவர். இலங்கை மன்னன் நினைத்த சந்தேகத்திற்கு இவர் தக்க விடையைப் பாடலில் அளித்து அவரை பிரமிக்க வைத்தார்.

    கண் பார்வையற்றோருக்காக பிரெய்லி எழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர் கண்பார்வையற்ற லூயிஸ் ப்ரெய்லி (பிறப்பு 4-1-1809 மறைவு 6-1-1852) பிரபல ஆங்கில கவிஞரான 'பாரடைஸ் லாஸ்டைப்' படைத்த ஜான் மில்டன் கண் பார்வையற்றவரே. 1667-ல் இவர் படைத்த இந்த நூல் உலகப் புகழ்ப் பெற்றது.

    1907-ம் ஆண்டு அமெரிக்காவில் ஓக்லஹாமாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செனேட்டரான தாமஸ் கோர் கண் பார்வையை இழந்தவர் தான்.

    ஆண்ட்ரியா பொசெல்லி, நார்மன் ஜெஃப்ரி, கேசி ஹாரிஸ், ரே சார்லஸ் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட உலகப் புகழ் பெற்ற பாடகர்கள் கண்பார்வையற்றவர்களே.

    மவுண்ட் எவரெஸ்டின் மீது 25-5-2001இல் ஏறிய முதல் கண்பார்வையற்ற வீரர் என்ற புகழைப் பெற்றவர் எரிக் வெய்ஹென்மேயர் உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞரான பீத்தோவனுக்கும், விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் காது கேட்காது.

    உலகெங்கும் இது போன்ற உதாரணங்களைப் பரக்கக் காணலாம்.

    கண்பார்வை யற்றிருந்தாலும், காது கேட்காமலிருந்தாலும் சாதனைகள் புரிந்த பலரால் ஹெலன் உத்வேகம் ஊட்டப்பட்டார். அதே போல அவராலும் ஏராளமானோர் உத்வேகமூட்டப்பட்டனர்.

    பொன்மொழிகள்:

    ஹெலன் கெல்லரது பொன்மொழிகளில் சில: எனது வாழ்க்கை மிக சந்தோஷமான ஒரு வாழ்க்கை. ஏனெனில் எனக்கு அற்புதமான நண்பர்கள் இருந்தனர். செய்யவேண்டிய நல்ல விஷயங்கள் ஏராளம் இருந்தன. எனது குறைகளைப் பற்றி நான் நினைப்பதே இல்லை.

    அந்த குறைகள் என்னை ஒரு போதும் வருத்தமுறச் செய்ததும் இல்லை. ஒருவேளை ஒரு ஏக்கம் சில சமயம் இருந்திருக்கலாம், ஆனால் அது கூட மலர்க்கூட்டத்தின் இடையே புகுந்து செல்லும் தென்றலைப் போலத்தான் என்று சொல்லலாம். காற்று கடந்து செல்கிறது. மலர்கள் திருப்தியுடன் இருக்கின்றன.

    உலகில் மிக பிரமாதமான அழகிய விஷயங்களைப் பார்க்கவோ தொடவோ முடியாது. அவற்றை இதயத்தால் அனுபவித்து உணர மட்டுமே முடியும். உங்கள் முகத்தை பிரகாசத்தின் பக்கம் திருப்புங்கள், நிழலை நீங்கள் பார்க்க முடியாது.

    சாதனைக்கு வழி தைரியம் என்ற தன்னம்பிக்கை தான். தன்னம்பிக்கையும் மன உறுதியும் இன்றி எந்த ஒன்றையும் செய்ய முடியாது.

    ஜூன் 27:ஹெலன் கெல்லர் தினம்

    எவ்வளவு மோசமான சூழ்நிலையில் ஒருவர் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி வெற்றி காண முடியும் என்பதை மனித சரித்திரத்திற்கு உணர்த்தியவருள் முக்கியமான இடத்தைப் பெறுபவர் ஹெலன் கெல்லர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27 ஹெலன் கெல்லர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அபாரமான சாதனை புரிந்த ஹெலன் கெல்லரை நினைவு கூரும் நாள் மட்டுமல்ல இது. துரதிர்ஷ்டவசமாக உடல் ஊனம் கொண்டோரை அவமதிக்காமல், ஒதுக்காமல் அவர்களை சமுதாயத்துடன் இணைக்க நம்மால் ஆன உதவியைச் செய்ய உறுதி பூண வேண்டிய நாளும் கூட இது தான்!

    Next Story
    ×