search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மனிதனின் இரண்டாவது மூளை: குரல் நரம்பு மண்டலம்
    X

    மனிதனின் இரண்டாவது மூளை: குரல் நரம்பு மண்டலம்

    • நரம்பியல் மண்டலத்திற்கென்று சில சிறப்பு இயல்புகள் உள்ளன.
    • குடல், தசைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது.

    குடல் நரம்பு மண்டலம் என்பதைத்தான் மனிதனின் இரண்டாவது மூளை என்று அழைக்கின்றோம். இந்த குடல் நரம்பியல் மண்டலம் நமது உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் மற்றும் ஆசனவாய் வரை சுமார் ஒன்பது மீட்டர் நீளம் உள்ளது.

    மூளையில் இருந்து வரும் செய்திகள் இதன் வழியாகத்தான் நம் குடல் பகுதியை வந்தடைகின்றன. இருப்பினும் மூளையின் தூண்டுதல் இல்லாமல் தன்னிச்சையாகவும் செயல்படக் கூடியது. இந்த நரம்பியல் மண்டலத்தை நம்மால் கட்டுப்படுத்த இயலாது.

    பொதுவாகவே நரம்பியல் மண்டலத்திற்கென்று சில சிறப்பு இயல்புகள் உள்ளன. மூளையில் உள்ள நியூரான்களில் சுரக்கப்படும் நரம்பியக்கடத்திகள் போலவே, குடல் நரம்பியல் மண்டலத்தில் சுரக்கப்படும் நரம்பியக்கடத்திகளும் உள்ளன. கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றுபோல் உள்ளதால்தான் இதை இரண்டாவது மூளை என்றழைக்கின்றோம்.

    டோபமின், அசிடைல்கோலின், செரடோனின் ஆகியவைகள் மூளையில் இருப்பதைக் காட்டிலும் குடல் நரம்பியல் மண்டலத்தில் அதிகமாக உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, 90 விழுக்காடு செரடோனின், உடலின் 50 விழுக்காடு டோபமின் இங்குதான் உள்ளது.

    மூளை நரம்பியல் தொடர்பான நோய்கள் நம்மைத் தாக்குவதற்கு வயிற்றுப் பகுதியில் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக உள்ளன. எடுத்துக்காட்டுக்கு வயிற்றுப்போக்கு வந்து போன சில நாட்களில், அதிவிரைவான நரம்புத்தளர்ச்சி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    மன அளவிளான பாதிப்புகளும் இதனால் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை இப்பகுதியில் பார்க்கலாம்.

    இரண்டாவது மூளையின் பணிகள்:

    1. குடல், தசைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது.

    2. உணவுக் குழாய்களுக்குச் செல்கின்ற ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்கிறது.

    3. குடலின் உள்பகுதியில் உள்ள சுரப்பிகளின் சுரப்புத்தன்மை, அதிகமாகச் சுரப்பதும் அல்லது சுரக்காமல் இருப்பதும் இந்த நரம்பியல் மண்டலத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

    4. குடல் மண்டலத்தின் எதிர்ப்புசக்திக்கு முக்கியமானது.

    5. நம் குடலின் செரிமான சக்தியையும், சத்துகளை உறிஞ்சும் தன்மையை நிர்ணயிக்கிறது.

    6. குடலின் முக்கியப் பணியான உணவுகளை கீழ்நோக்கித் தள்ளும் Peristalsis நடைபெறுவதற்கு மிகவும் உதவுகிறது.

    7. குடலில் இருந்து ஹார்மோன்கள் (Gastrin, Secretion) சுரப்பதற்கான செய்திகளை அனுப்புகிறது.

    8. உணவு ஒரு பகுதியில் இருக்கும்போது அந்தப் பகுதியை மட்டுமே சுருங்கி விரியச் செய்கிறது. இதனால் குடலினுள் உள்ள உணவு ஒன்றோடு ஒன்று நன்கு கலக்கப்படுகிறது. இது செரிமானத் தன்மைக்கும், உணவில் உள்ள சத்துகளைப் பிரித்தெடுப்பதற்கும் மிகவும் அவசியமான ஒன்று.

    9. குடல்கள் மத்திய நரம்பு மண்டலத்திலிருந்து, துண்டிக்கப்பட்டாலும், குடல் நரம்பு மண்டலத்தின் உதவியோடு வழக்கமான பணிகளான செரித்தல், சத்துகளை உறிஞ்சுதல் போன்ற செயல்கள் எப்போ தும்போல் நடைபெறுகின்றன.

    இந்த குடல் நரம்பு மண்டலத்தைத் தொடர்ந்து நம் நலத்திற்கு மிகவும் முதன்மையானது நுண்ணுயிர் நரம்பு மண்டலம் (Microbial nervous system). அப்படி என்றால் என்ன என்றுதானே சிந்திக்கிறீர்கள்.

    நம் தோல், மூக்கு, வாய், இரைப்பை, குடல் ஆகிய பகுதிகளில் நன்மை பயக்கக்கூடிய பல பாக்டீரியாக்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை லாக்டோபேசிலஸ், என்ட்ரோபாக்டர், பிஃபிடோ பாக்டீரியம் ஆகியவைகளாகும்.

    இந்த நுண்ணுயிரிகள் உணவுகளைச் செரிப்பதற்கும், சத்துகளை உறிஞ்சுவதற்கும் பெரிதும் துணைபுரிகின்றன. இந்த நுண்ணுயிரிகளின் நலத்தில்தான் நம் உடலின் முழுமையான நலம் அடங்கியுள்ளது.

    இந்த நுண்ணுயிரிகள் நம் உடலுக்குள் எப்படி வருகின்றன? சிசு வயிற்றில் இருக்கும்போதே வருவதாகவும், குழந்தை பிறந்து தாய்ப்பால் குடிக்கத் தொடங்கும் போது தாயிடம் இருந்து வருவதாகவும் ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

    இந்த நுண்ணுயிரிகளின் நலன் பாதிக்கப்படும்போது மூளை, நரம்பு மற்றும் மனம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது ஸ்கிசோஃப்ரினியா மற்றும் குழந்தைகளுக்கு வரும் ஆட்டிசம் ஆகும்.

    மாறிவிட்ட உணவு கலாச்சாரத்தினால் இந்த நுண்ணுயிரிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. வாழ்வியல் முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்களுக்கு இதுவும் ஒரு முதன்மைக் காரணம்.

    இந்த நுண்ணுயிரிகளைப் பல்கிப்பெருக வைக்க நாம் சில உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும். இவைகள் இரு வகைப்படும்.

    புரோ - பயோடிக் என்பது நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள்.

    ப்ரி - பயோடிக் என்பது இந்தப் பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகுவதற்கு உதவும் உணவு.

    நாம் அன்றாடம் உண்ணும் உணவில் இவைகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நமது நலத்தை மேன்மையுறச் செய்யும்.

    நுண்ணுயிரிகள் அதிகம் உள்ள உணவுகள்:

    மோர், இட்லி, தோசை மற்றும் புளித்த மாவில் இருந்து செய்யும் உணவு வகைகள், நீராகாரம் / பழையசாதம், உப்பில் ஊறவைத்த 2-3 நாட்களுக்குப் பிறகு எடுத்துக்கொள்பவைகள். உதாரணத்திற்கு ஊறுகாய், பன்னீர், தேன், வாழைப்பழம், வெங்காயம் ஆகியவை நம் குடலின் ஆரோக்கியத்தை மேன்மையுறச் செய்கின்றன. எனவே தினமும் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளுதல் நல்லது.

    நுண்ணுயிரிகளை பாதிப்பவை:

    இராசயன முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், செயற்கை இனிப்பூட்டிகள் ஆகியவைகளை அதிகம் எடுத்துக்கொள்வது. குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு, ஆன்டிபயோடிக் மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆகியவைகள் நம் குடலில் உள்ள நுண்ணுயிரிகளைப் பாதிக்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் அளவு குறையும்போது மனஅழுத்தம், மனப்பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இந்த இரண்டாவது மூளையும் அதிலுள்ள நுண்ணுயிரிகளும்தாம் நம் உடலின் நலத்தை நிர்ணயிக்கின்றன. இவை பாதிக்கப்படும்போது வயிற்றில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படுவதாலும் இந்த நுண்ணுயிரிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே வயிற்றில் சிக்கல்கள் ஏற்படும்போது எளிதாகச் செரிக்கக் கூடிய மேற்கூறப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் வெந்நீர் மட்டும் எடுத்துக்கொண்டு குடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

    குடல் நரம்பு மண்டலத்திற்கு இரவு வேளைகளில் ஓய்வு கொடுக்க வேண்டும். காலம் தாழ்த்தி உணவு அருந்தி விட்டு உடனே உறங்கச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

    அரைவயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வெற்றிடம் என்று நம்முன்னோர்கள் கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    குளிர்சாதனப் பெட்டியில் உணவை வைத்து பிறகு அதை சூடுபடுத்தி உண்பதையும் தவிர்க்க வேண்டும்.

    நம் உடல் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்க இந்த இரண்டாவது மூளையின் ஆரோக்கியத்தை, மேற்கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி பாதுகாக்கலாம்.

    Next Story
    ×