search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    செயற்கை முறை கர்ப்பத்தில் குழந்தை பாதுகாப்பாக பிறக்க வேண்டுமா?
    X

    செயற்கை முறை கர்ப்பத்தில் குழந்தை பாதுகாப்பாக பிறக்க வேண்டுமா?

    • சர்க்கரை வியாதி, உப்பு சத்து காரணமாக குழந்தைக்கும், தாய்க்கும் பாதிப்புகள் ஏற்படலாம்.
    • தாயின் மனநிலையானது மிகுந்த சந்தோஷத்துடனும், அமைதியுடனும் இருந்தால் அந்த குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

    ஒரு பெண் இயற்கையாக கருத்தரிக்கும் கர்ப்பத்துக்கும், ஐ.வி.எப். முறையில் செயற்கையாக கருத்தரிக்கும் கர்ப்பத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. கர்ப்பம் இரண்டுமே ஒன்று தான் என்றாலும் அதில் உள்ள பிரச்சனைகள் வேறுபடும். கர்ப்பப்பையில் கரு ஒட்டி வளரும்போது சில வகையான சைட்டோகைன்கள் எனப்படும் புரதம் வெளியாகிறது. இந்த சைட்டோகைன்களில், இயற்கையான கருத்தரிப்புக்கும், செயற்கையான கருத்தரிப்புக்கும் பல வித்தியாசங்கள் இருக்கிறது.

    சைட்டோகைன்கள் குறைவதால் ஏற்படும் பாதிப்பு:

    கர்ப்பப்பையில் கரு வளரும்போது நஞ்சு உருவாக்கம், நஞ்சுவுக்கு போகும் ரத்தக்குழாய்கள், நஞ்சுவில் உருவான அனைத்து ரத்தக்குழாய்கள் வளர்ச்சி ஆகியவற்றை சார்ந்த விஷயம் தான் சைட்டோகைன்கள். இந்த சைட்டோகைன்கள் பொதுவாக ஐ.வி.எப். செயற்கை கருத்த ரிப்பில் குறைவாக உருவாகிறது.

    இதனால் அந்த கரு வளரும்போது நஞ்சுவுக்கு வரும் ரத்தக்குழாய்கள் சீராக வளராததாலும், நஞ்சுவில் உருவாகும் சைட்டோகைன்கள் கெமிக்கல் சரியாக இல்லாத காரணத்தா லும், பலநேரங்களில் குறை பிரசவம் ஏற்படுவதற்கான அளவில் சைட்டோகைன்கள் நஞ்சுவில் இருப்பதாலும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    பொதுவாக இயற்கையான கர்ப்பத்தில் கூட நஞ்சுவில் குறைபாடு இருக்கும் பெண்களுக்கு இந்த பிரச்சனையெல்லாம் வரும். அதாவது கருவில் இரட்டை குழந்தைகள் உருவாகும் பெண்கள், தொற்று கிருமிகளால் பாதிக்கப்படும் பெண்கள் ஆகியோருக்கும் சில சமயங்களில் நஞ்சுவில் பாதிப்பு ஏற்பட்டு குறை பிரசவம் ஏற்படலாம்.

    இப்படிப்பட்ட பாதிப்பு கொண்ட பெண்களுக்கு எந்த அளவில் சைட்டோகைன்கள் இருக்குமோ, அதே அளவு தான் செயற்கை முறையில் கருத்தரிக்கும் பெண்களுக்கும் சைட்டோகைன்கள் குறைவாக இருக்கிறது என்று பல ஆய்வுகள் உறுதி செய்திருக்கிறது.

    அதன்படி இதுபோன்ற பெண்களுக்கு சைட்டோகைன்கள் அளவு மாறுபடும் நிலையில் நஞ்சுவின் செயல்பாடு பாதிக்கப்படுவதால் பல நேரங்களில் குறை மாத பிரசவம், குறை பிரசவம், குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பு ஏற்படும். நஞ்சுவின் பிரச்சனைகளால் இவை அனைத்தும் ஐ.வி.எப். கர்ப்பத்தில் அதிகமாக உள்ளது.

    தாயின் உடல்நிலையில் ஏற்படும் பாதிப்பு:

    இதுதவிர இந்த குழந்தைகள் பிறந்தவுடன் சில பிரச்சனைகள் ஏற்படும். அதாவது குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இது தவிர இந்த குழந்தைகளுடைய எடை குறைவு, அதனால் வரும் பிரச்சனைகள், குறை பிரசவத்தினால் குழந்தைக்கு குறை மாதத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் ஆகியவை அனைத்தும் ஐ.வி.எப். கருத்தரிப்பில் அதிகமாக ஏற்படுகிறது. இந்த வகையில் கரு வளர்ச்சி, தாயின் உடல் நிலை ஆகியவை ஐ.வி.எப். கர்ப்பத்தில் பிரத்தியேகமாக பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறது. மேலும் இயற்கையாக கருத்தரிக்கும் பெண்களை ஒப்பிடும்போது ஐ.வி.எப். முறையில் கருத்தரிக்கும் பெண்க ளுக்கு சர்க்கரை சத்து, உப்பு சத்து, ரத்த அழுத்தம் ஆகியவை 5 முதல் 8 சதவீதம் கூடுதலாக வர வாய்ப்புள்ளது. சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படவும் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது.

    சர்க்கரை வியாதி, உப்பு சத்து காரணமாக குழந்தைக்கும், தாய்க்கும் பாதிப்புகள் ஏற்படலாம். பொதுவாக ஐ.வி.எப். கர்ப்பத்தில் குழந்தை பிரசவம் ஆகும்போது நிறைய நேரங்களில் சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி, அதனால் ஏற்படும் விளைவுகளும் தாய்க்கும், குழந்தைக்கும் சில பிரச்சனைகளை உருவாக்கலாம். இது இயற்கை முறை கர்ப்பத்தில் அதிகமாக இருப்பதில்லை. செயற்கை கருத்தரிப்பில் குழந்தை தானாக பிறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஐ.வி.எப். கர்ப்பம் தரிக்கும் பெண்கள், ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு, கை, கால் வீக்கம் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    இயற்கையாக கர்ப்பமாகும் பெண்களுக்கு இந்த பாதிப்பு குறைவாக இருக்கிறது. சிசேரியன் செய்வதால் ஏற்படும் விளைவுகள், பிறந்தவுடன் எடை குறைவாக இருப்பதால் குழந்தைக்கு ஏற்படும் சில தொற்றுக்கள், குழந்தை வயிற்றிலேயே இறப்பதற்கான வாய்ப்புகள் ஆகியவையும் ஐ.வி.எப். கருத்தரிப்பில் அதிகம் ஏற்படுகிறது. இதுவே இயற்கை கருத்தரிப்பில் இந்த வாய்ப்புகள் மிக மிக குறைவு.

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    மன அழுத்தத்தால் ஏற்படும் பிரச்சனைகள்:

    இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஐ.வி.எப். முறையில் கருத்தரிக்கும் பெண்கள் பலருக்கும் இருக்கிற ஒரு பெரிய பிரச்சனையே மன அழுத்தம் தான். பல பெண்களுக்கு கர்ப்பம் ஆகி விட்டோம் என்கிற சந்தோஷத்தை விட, கர்ப்பம் பாதுகாப்பாக இருக்குமா? தானாக குழந்தை பிறக்குமா அல்லது சிசேரியன் செய்ய வேண்டுமா? குழந்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் நன்றாக இருக்குமா? நிறை மாதம் வரை பிரசவம் தாங்குமா அல்லது இடையில் ஏதாவது குறைபாடுகள் வருமா என்கிற பலவிதமான கேள்விகள் அவர்கள் மனதில் எழுகிறது. இப்படிப்பட்ட பலவிதமான கேள்விகளால் அவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தை சந்திக்கிறார்கள்.

    பெண்களின் இந்த மனரீதியான பிரச்சனையானது குழந்தையின் வளர்ச்சி, குழந்தையின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாக அமைகிறது. தாயின் மனநிலையானது மிகுந்த சந்தோஷத்துடனும், அமைதியுடனும் இருந்தால் அந்த குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தைக்கு எந்த குறைபாடுகளும் வராது. ஆனால் ஐ.வி.எப். முறையில் கர்ப்பமாகும் பெண்களுக்கு சந்தோஷத்தை விட பய உணர்வுதான் அதிகமாக ஏற்படுகிறது. இந்த பய உணர்வு தாயின் உடல் நிலையையும் பாதிக்கும்.

    சில நேரங்களில் இந்த மாதிரியான பெண்களுக்கு பொதுவாக உடல் பருமன் அதிகமாக இருக்கும். நீரிழிவு ஏற்கனவே இருக்கலாம். இவை அனைத்துமே கரு வளர்ச்சியை பாதிக்கும். இந்த வகையில் இயற்கை முறை கர்ப்பம், ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு இவை இரண்டுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. 2 பேருக்கும் ஒரே வயது, ஒரே எடை, ஒரே மாதிரியான செயல்பாடு ஆகியவை சீராக இருந்தாலும், ஐ.வி.எப். மூலம் கர்ப்பம் தரிக்கும் பெண்ணுக்கு இத்தகைய பிரச்சனைகள் மிக அதிகம்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, பல நேரங்களில் ஐ.வி.எப். கருத்தரிப்பு முறை மூலம் கருத்தரிக்கும்போது நஞ்சு குறைபாடுகளால் 7 அல்லது 8 மாதத்துக்குள் குழந்தையின் நஞ்சு முதிர்வடைந்து குழந்தை சில நாட்களுக்கு முன்பாகவே பிறப்பது குழந்தையின் ஆரோக்கியத்துக்கு சீராக அமையாது.

    பாதுகாப்பான கர்ப்பமும் குழந்தை பிறப்பும்:

    இந்த வகையில் ஒரு ஐ.வி.எப். கர்ப்பம் என்பது அதற்குள் உள்ளடங்கிய சில பிரச்சனைகளோடு இருக்கிறது. இதை தெளிவாக தெரிந்துகொண்டு ஒவ்வொரு கர்ப்பிணிகளும் ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு என்றால், அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வேண்டும். மேலும் இதைப்பற்றி தெளிவாக தெரிந்த மருத்துவரிடம் கர்ப்பகால பரிசோதனைகளை செய்யுங்கள். இதைப்பற்றி முழுமையாக தெரியாத மருத்துவரிடம் சென்று காண்பிக்கும்போது, கர்ப்பிணிகளுக்கு இந்தெந்த பிரச்சனைகள் வரும் என்பதை முன்பே கணிக்க தெரியாவிட்டால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கலாம். பல நேரங்களில் குழந்தை வயிற்றில் இறப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

    இதன் காரணமாக பிரசவ காலத்தில் ஏற்படுகிற பிரச்சனைகளும் அதிகமாகும். தாயின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்பு இருக்காது. ஐ.வி.எப். செயற்கை முறையில் கருத்தரிக்கும் கர்ப்பம் மிகவும் விசேஷமானது. இதற்குள் உள்ளடங்கிய பிரச்சனைகள், இயற்கையான கர்ப்பத்தை விட மாறுபாடு உள்ளது.

    எனவே ஐ.வி.எப். செயற்கை முறையில் கருத்தரிக்கும் பெண்கள் இதைப்பற்றி தெளிவாக தெரிந்த மருத்துவரிடம் கர்ப்ப காலத்தில் பரிசோதனை செய்து, நல்ல வசதிகள் உள்ள மருத்துவமனைகளில் பிரசவ காலத்தை பார்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் கர்ப்பமும், பிறக்கும் குழந்தையும் பாதுகாப்பாக இருக்கும்.

    Next Story
    ×