search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திருக்குறள் ஞான அமுதம்- அவா அறுத்தல்
    X

    திருக்குறள் ஞான அமுதம்- அவா அறுத்தல்

    • இவள் மனிதனை மட்டும் அன்று எல்லா உயிர்களையும் இயங்கச்செய்கின்றாள்.
    • உண்மைப் பொருள் அறிந்தவர்கள் இயற்றிய நூல்களைப் படிக்க வேண்டும்.

    அதிகாரம்: அவா அறுத்தல்

    இந்த அதிகாரத்தில்,

    அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

    தவாஅப் பிறப்பீனும் வித்து.

    என்ற குறளில் தொடங்கி

    ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

    பேரா இயற்கை தரும்...

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    அவா என்பது ஆசை. அவா அறுத்தல் என்பதற்கு ஆசைகளைத் துறக்க வேண்டும் என்பது பொருளாகும். இத்தகைய ஆசை காமத்தால் வந்தது. காமம் என்பது இயற்கை. காமம் ஏற்பட, பெண் காரணமா? அல்லது பெண்ணுக்கு ஆசை வர ஆண் காரணமா? அல்லது உணவு சாப்பிடுவதனால் ஆசை வந்ததா? அவ்வாறானால் பெண் முதலில் தோன்றினாளா? அல்லது ஆண் முன்னே தோன்றினானா?

    காமம் அல்லது ஆசை, உலகம் தோன்றும்போதே தோன்றியுள்ளது. அப்போது ஆண், பெண் இருவரும் சேர்ந்தே தோன்றி இருக்கின்றார்கள். ஒன்று முன்னே தோன்றி, மற்றொன்று பின்னே தோன்றியிருக்க முடியாது. இருவரும் ஒரு நொடியில் தோன்றியிருக்கிறார்கள். இந்த உலகம் முன்னே தோன்றியதா? நீர் தோன்றியதா? காற்று தோன்றியதா? கதிரவன் தோன்றினானா?

    லட்சோப லட்சம் அண்டங்கள் உள்ளன. சில அண்டங்கள் குளிர்ச்சியாக இருக்கும். சில அண்டங்கள் எரிமலையாக இருக்கும். கோடானகோடி அண்டங்களை ஒரேயொரு சக்தியே உருவாக்கியிருக்கிறது. இயற்கை அன்னை, அரூபமாக இருந்து இவையனைத்தையும் படைத்திருக்கின்றாள்.

    ஏன் படைத்திருக்கின்றாள்? இதற்கு யாராலும் விளக்கம் தர இயலாது.பல்வேறு அண்டங்களும் இயங்கிக் கொண்டேயிருக்கும். பூமியை விட அளவு பெரியதாகவுள்ள அண்டங்களும் இருக்கின்றன. இவையனைத்தையும் படைத்து விட்டு, அவள் அசையாமல் இருக்கி ன்றாள். அவள்தான் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கி ன்றாள். பல்வகை ஜீவராசிகளாகவும் இருக்கின்றாள்.

    இனம் புரியாமலும் இருக்கின்றாள். இவளை புரிந்து கொண்டவர்களுக்குத் தாயாக இருக்கின்றாள், புரியாதவர்களுக்கு காம மோகினியாக இருக்கின்றாள். சண்டாளர்க்கு அவள் காளியாகவும், சாந்தம் உள்ளவர்களுக்கு சக்தியாகவும் இருப்பாள். மும்மலத்தையும் சார்ந்திருப்பாள். பெண் உறுப்பாகவும், ஆண் உறுப்பாகவும் இருப்பாள்.

    காமத்திற்குக் காரணமாகி இருப்பாள். கருவாகவும் இருப்பாள். கரு உருவாகி குழந்தையாக வெளிவந்தவுடன் அந்தத் தாய்க்குப் பாசத்தைத் தந்திருப்பாள். முன்னே அவள்தான் காமத்தைத் தந்தாள். பின், அவளே பாசத்தையும் தந்திருக்கின்றாள்.

    அதுமட்டுமல்லாமல் பிறந்த குழந்தைக்குப் பாலாகவும் இருப்பாள். இவ்வாறு பல்வேறு விதமாக உள்ள இவளே அரூபமாக இருப்பாள். யோகிகளுக்கு, புருவ மத்தியில் சிறு குழந்தையாக இருப்பாள்.

    அதே சமயம் பத்து வயது பெண்ணாக (வாலைப் பெண்) இருப்பாள். சில இடங்களில் மூக்கில்லாத மூக்கறைச்சியாக இருந்து, பல்வேறு விந்தைகளைச் செய்வாள்.காலையில் இளநங்கையைப் போல் இருப்பாள். மாலையில் கிழவியாகக் காட்சி தருவாள்.

    இத்தகைய காட்சிகளை யோகிகள் மட்டும்தான் அறிய முடியும். பெண்ணோடு ஆண் கூட நினைக்கும்போது, சிந்தனையாக இருக்கின்றாள். பின் சேர்க்கைக்குக் காரணமாக இருக்கின்றாள்.

    ஆண்பாலுக்கான சுக்கிலமாகவும், பெண்பாலுக்கான சுரோணிதம் அல்லது கருமுட்டை அணுக்களாகவும் மாறுவாள். அக்கரு, கருப்பையுள்ளே தங்கச் செய்வாள். பின்பு அக்கரு வளரவும் காரணமாயிருப்பாள். சிந்தனையாக இருந்தது திரவப்பொருளாக மாறியது. சுக்கிலம் என்பது பல லட்சக்கணக்கான அணுக்களாக இருந்தது. அது கரு கூடும்போது மென்மையான பொருளாகவும் பின் திடப்பொருளாகவும் மாறுகிறது.

    தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    ஆக எண்ணமாக இருந்த அதே சக்தி, சுக்கிலம் சுரோணிதமாக மாறி கருப்பையுள் மிருதுவான குழந்தையாக மாறி, பின் திடமான எலும்பும் தோலும் தசையும் கொண்ட உடம்பாக மாறியது. இந்த உடம்பு நாடி, நரம்புகளாகவும், ஆற்றல் பொருந்திய மண்டைஓடு, கை எலும்பு போன்று வலிமையாகவும் மாறியது. இத்தனையும் அணுக்களாக இருந்த ஒன்றே இவ்வாறாகச் செயல்படுகிறது. அனைத்திற்கும் எல்லாம்வல்ல இயற்கை அன்னையே காரணமாக இருக்கின்றாள்.

    இவள் மனிதனை மட்டும் அன்று எல்லா உயிர்களையும் இயங்கச்செய்கின்றாள். அவா அறுத்தல் என்ற ஒன்றை மிருகங்களிடம் கூறவில்லை. உண்பதும், இனப்பெருக்கம் செய்வதும் மற்ற ஜீவராசிகளுக்கு இயல்பு. மனிதனும் உண்பான், இனப் பெருக்கம் செய்வான். இவனைப் பார்த்தே அவாவை அறுக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறினார். மனிதனுக்கு மட்டும்தான் தான் பிறந்தது எப்படி ? என்பது தெரியும். மிருகங்களுக்கு எதுவும் தெரியாது.

    முதலில் சிந்தனையாகவும் பின்பு பஞ்சபூதச் சாரங்களான சுக்கிலமாகவும் பஞ்சபூதச் சாரங்களான சுரோணிதமாகவும் கருமுட்டையாகவும் இருந்தது. இத்தகைய பஞ்சபூதச் சாரங்களைப் பற்றி, ஆறாவது அறிவுள்ள மனிதனுக்கு மட்டுமே தெரியும். எல்லாமே பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டதாகவே உள்ளது. இத்தகைய பரிணாம வளர்ச்சி எப்படி வந்தது? இந்தப் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நன்கு அறிந்தவன்தான் மனிதன்.

    இதிலிருந்து எப்படி விடுபடுவது. இத்தகைய பரிணாம வளர்ச்சிக்கு, பசி காரணமா? உணவு காரணமா? உணர்வு காரணமா? இயற்கை காரணமா? செயற்கை காரணமா ? உடம்பு காரணமா? இப்படி ஓர் இனம்புரியாத ஓர் இயக்கம் இருக்கின்றது. இதனை மனிதன் அறிந்திருக்கின்றான். காமத்திற்கு பசி காரணம். பசி என்பது இயற்கை. இப்படியாக ஓர் இயக்கம் நம் உடலில் உள்ளது. நம் உடலில் பல லட்சம் கோடி அணுக்கள் உள்ளது.

    ஒவ்வொரு அணுவிலும் பெண்மையும், ஆண்மையும் கலந்திருக்கும். பெண்மையும் ஆண்மையும் கலந்த அணுக்களில் ஆசைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். அப்போது அணுக்களைக் கொல்லுவதா? மிகுதியான வெப்பம் இருந்தால், அணுக்களின் செயல்பாடு குறைந்துவிடும். வெப்பமும் குளிர்ச்சியும் சமமாக இருந்தால், உள்ளே உள்ள அணுக்கள் சாகா இதுதான் வாதப்பித்தம் என்று சொல்லப்பட்ட வைத்தியம்.

    ஞானிகள் இந்த உடற்கூற்றை நன்கு அறிந்துள்ளனர். முறையோடு நெறிக்குட்பட்டு வாழ்ந்து, அந்த அணுக்களின் இயல்பறிந்து அந்த அணுக்களுக்குத் தம்முடைய தவமுயற்சியால் ஒரு வகையான உஷ்ணம் தருகின்றனர். அந்த அணுக்களில் உள்ள பெண்மை, ஆண்மை சக்தியைக் குறைக்கின்றனர். உடம்பின் தன்மையறிந்து, உடம்புக்கு ஏற்ற உஷ்ணத்தைத் தந்து அந்த அணுக்களை சாகடிக்காமல் சாகடிப்பார்கள். இவ்வாறாக, உடலின் அணுக்களை சாகடிக்காமல் சாகடிப்பதே அவா அறுத்தல். இது சூட்சம உண்மை.

    இந்த அறிவு, திருவருள் துணை இருந்தால்தான் வரும். திருவருள் துணையில்லாவிட்டால் இந்த அறிவு வராது. உண்மைப் பொருள் அறியாதவர்கள் சுப்பிரமணியருக்கு 2 மனைவிகள் என்று கூறுவார்கள். தத்துவ விளக்கம் வேறு. வள்ளி என்பது ஸ்தூல தேகம். தெய்வானை என்பது சூட்சும தேகம். இச்சாசக்தி என்பது காமதேகத்திற்குரியது, அது வள்ளி. ஞான சக்தி என்பது, அக உடம்புக்குரியது அதுவே தெய்வானை. எல்லாம் வல்ல பரப்பிரம்மத்திற்கு திருமணம் செய்வது என்பதன் பொருள் வேறு. அங்கே ஒன்றுமே இருக்காது. அங்கே காமம் இல்லை, வெகுளி இல்லை, வேண்டுதல் இல்லை, எந்தவிதமான விகற்பமும் இல்லை.

    பரப்பிரம்மத்தின் தத்துவம் என்னவெனில், இச்சாசக்திதான் வள்ளி. ஞானசக்திதான் தெய்வானை. இரண்டும் கலந்தது கிரியாசக்தி. அதாவது பரப்பிரம்மம். கிரியாசக்தி என்பது சூட்சும தேகமும் கிடையாது, ஸ்தூலதேகமும் கிடையாது, அரூப தேகம். வறுமையில் உள்ளவனுக்கு அவன் மொட்டையாண்டி. புண்ணியம் படைத்தவர்களுக்கு ராஜகோலம் பூண்டு நிற்பான்.

    ஆசை, உடம்பிலுள்ள எல்லா அணுக்களிலும் கலந்திருக்கும். ஆசைகள் பலவிதமாய் உள்ளன. வீடு, வாசல், மனைவி எல்லாமே காமத்தின் காரணமாக வந்தவை. காமம், உலகம் தோன்றும்போதே வந்தது. அது இயல்பு. ஆசை காரணமாக அறியாமை வந்தது. அறியாமை காரணமாக ஆடம்பரமான எல்லாமே வந்தன. தேகசுத்தி ஆனாலன்றி, இதிலிருந்து விடுபட முடியாது.

    தேகசுத்தி அல்லது காயசித்தி பெற்றவர்கள் உலக மக்களுடன் இருந்தாலும், அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. ஆசை என்பது அவனுக்குத் தெரியாத ஒரு உணர்வு. அவனுக்குள்ளேயே இயங்கிக் கொண்டிருக்கும். இயற்கை அன்னை இவ்வாறெல்லாம் இயங்கிக் கொண்டிருப்பாள். காகம் தன்னுடைய முட்டை என்றெண்ணி, குயில் முட்டையை அடைகாத்து, பொரித்து தன் குஞ்சு என்று உணவு ஊட்டும். இறகு முளைத்து, உண்மை தெரிந்தவுடன் அதனை வெளியேற்றி விடும்.

    அதுபோல் எல்லாம்வல்ல இயற்கை அன்னை உலக மக்கள் அனைவருக்கும் இப்படியொரு மயக்கத்தை கொடுத்து, இனம் புரியாத ஓர் இயக்கத்தையும் உண்டாக்கி செயல்படுத்திக் கொண்டிருப்பாள். இந்த மயக்கம் பெண்ணால் வந்ததா? உணர்வால் வந்ததா? உடற்கூற்றால் வந்ததா? தத்துவம் தொன்னூற்றாறில் வந்ததா? இந்த மயக்கம் ஆதியிலிருந்தே தோன்றியது. எல்லாம்வல்ல அருட்சக்தி அந்த மயக்கத்தை கொடுத்திருக்கின்றாள்.

    அதனால் திருமணம் செய்வான், பொன்பொருள் சேர்ப்பான், வீடு, வாகனம், நிலம் சம்பாதிப்பான், கடைசிவரை தன்னைப் பற்றியோ மனைவியைப் பற்றியோ அறியமுடியாது. வினை காரணமாகவே இவையெல்லாம் வந்தது. ஆசை, காமம், பாசம் போன்றவை இந்த வினையினால் வந்தது. எல்லாம்வல்ல சக்தியே இந்த வினைக்கு காரணமாக உள்ளது. இத்தகைய இயற்கையை கண்டுபிடித்து இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்பதை உணர வேண்டும்.

    மயக்கம் என்பது நிலையில்லாத பொருளைக் கண்டு நிலையானதென எண்ணி மயங்குதல். மயக்கத்திற்குக் காரணம் உடம்பா? உயிரா? உணர்வா? அறிவா? பெண்ணா? ஆணா? உலகமா? என்று எதுவும் புரியாது. இந்த மயக்கத்தை, எல்லாம்வல்ல இயற்கை அன்னை தந்திருக்கின்றாள். இந்த மயக்கத்தை கொடுத்த அவளே, அதற்குள் ஒரு துளி சுத்தமான அமிழ்தத்தையும் வைத்துள்ளாள்.

    100 துளியில் 99 துளி மயக்க மருந்து. அந்த ஒரு துளி அமிழ்தத்தைத் தட்டி எழுப்புவதற்குத்தான் தந்திருக்கின்றாள். 99 துளி மயக்க மருந்து நீங்கினால், ஒரு துளி அமிழ்தம் வெளிப்படும். இந்த ஒரு துளி அமிழ்தம் வெளிப்பட வேண்டுமானால், 99 துளி மயக்க மருந்தை நீ அறிந்திருக்க வேண்டும். இந்த மயக்க மருந்துதான் உலக மக்களை ஆட்டிப் படைக்கின்றது. இதை ஞானிகள் புரிந்து கொண்டுள்ளார்கள். இதை புரிந்து மயக்கத்தை நீக்கி விட்டார்கள்.

    ஒரு துளி அமிழ்தத்தைப் புரிந்துக் கொள்ளத்தான், மயக்கம் என்ற ஆசை, அறியாமை, கோபம், காமம், கற்பனை, இனம்புரியாத கவலை போன்றவற்றை இயற்கை அன்னை நம்முள் வைத்துள்ளாள். நம் தேகத்துள் 99 துளி நஞ்சு வைத்து, ஒரு துளி அமிழ்தத்தையும் வைத்திருக்கின்றாள். 99 துளி நஞ்சு நீங்கினாலன்றி, ஒரு துளி அமிழ்தம் கிடைக்காது. இந்த ரகசியம் ஆதிதலைவன் சுப்ரமணியருக்கே தெரியும்.

    இதனை ஆதிதலைவன் சுப்ரமணியர், இயற்கை அன்னை ஆசி கொண்டு 99 துளி நஞ்சை நீக்கி, ஒரு துளி அமிழ்தம் பெற்றுக் கொண்டார். இந்த அமிர்தம் கல்வியைத் தரும், காமத்தை நீக்கும், கோபத்தை நீக்கும், அழிவில்லாத வாழ்வு தரும். விஷம் நீங்கினால், விவேகம் தோன்றும். விஷம் நீங்கினால் அமிர்தபானம் தோன்றும், விஷம் நீங்கியதும் சிறப்பறிவு வந்தது. விஷம் நீங்கியது ரூபம், அரூபமில்லாத ஜோதி உடம்பு தோன்றியது.

    இந்த அழியா உடம்பை எல்லா ஞானியர்களும் பெற்றுள்ளார்கள். இந்த 99 துளியில் ஒரு துளி நச்சுத்தன்மை இருந்தாலும் மீண்டும் கருப்பைக்குள் சென்று விடுவான். காமதேகம் இருக்கும்வரை உண்மை புரியாது. திருக்குறளுக்கு அர்த்தம் தெரியாது. இதை யார் சொல்ல வேண்டும். 99 துளி நஞ்சை நீக்கியவன் சொல்ல வேண்டும். சூட்சும தேகத்தை அறிந்தவன் சொல்ல வேண்டும்.

    அப்படி அறிந்தவனின் சொல், பிறவிப்பிணிக்கு மருந்தாக இருக்கும். முதுபெரும் ஞானிகளின் சொற்களைக் கேட்டால், அந்த சொற்கள் ஆன்மாவைத் தட்டி எழுப்பும். அவர்கள் நமக்கு பிறவிப்பிணி நீங்க வழி சொல்வார்கள். அவர்களின் நாமத்தைச் சொல்லி, பூஜை செய்து ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளவேண்டும்.

    ஆசைதான் எல்லா உயிர்களின் பிறவிக்கு வித்து. நச்சுத் தன்மையுடைய காமம் நீங்கினால் ஒழிய, இத்தகைய ஆசையை அறுக்க முடியாது. பட்டினி கிடந்தாலும் இந்த வித்து சாகாது, சாப்பிட்டாலும் சாகாது. சாகாமல் சாகடித்தவன், காமதேகத்தைச் சாகடித்தவன், பசியை வென்றவன், மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்றவன் எவனோ, அவனது திருவடியைப் பற்றிக் கொள். நம்மைச் சுற்றியுள்ள இளமையானவற்றைப் பார், முதுமையையும் பார். சுடுகாட்டில் உள்ள மண்டை ஓட்டைப் பார். சாவைப்பற்றிச் சிந்தித்துப்பார்.

    நாளை, நமக்கும் இப்படித்தான் என்பதை உணர்ந்துகொள். கடைசி நேரத்தில் நோய்கள் சூழ்ந்து விடும், என்ற உண்மையை உணர்ந்துகொள். இப்பொழுதே தலைவனின் திருவடியை பற்றிக் கொள். சான்றோர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்.

    மற்றவர்களுக்கு, கடுகளவு துன்பமும் வராமல் வாழ்க்கையை நடத்தக் கற்றுக்கொள். உண்மைப் பொருள் அறிந்தவர்கள் இயற்றிய நூல்களைப் படிக்க வேண்டும்.

    அது ஆன்மாவைத் தட்டி எழுப்பும் சக்தி வாய்ந்தது, அறிவைத் தெளிவுபடுத்தும், அறியாமையெனும் திரையை நீக்கும், சவமாகப் போகின்றவனைச் சிவமாக ஆக்கும். பல லட்சம்கோடி அணுக்களினால் ஆன உடம்பில், தாய்தந்தையாலான காமம் சேர்ந்திருக்கும். அதைப் பக்தி என்று சொல்லப்பட்ட மூலக்கனல் கொண்டு, நஞ்சை நீக்க வேண்டும். அணுக்களைச் சாகாமல் சாகடித்து, நஞ்சை நீக்கி ஒளி உடம்பு பெற வேண்டும். அதற்கு ஒளி உடம்பு பெற்றவரின் திருவடியே கதியென்று உணர வேண்டும்.ஆசையே பிறவித்துன்பத்திற்கு வித்து.

    ஒருவனுக்கு ஆசை என்பது, பிறவித்துன்பத்தை அறுக்கும் ஆசையாக இருக்க வேண்டும். அவா அற்ற நிலைமைக்கு நிகரான செல்வம் வேறு எதுவும் இல்லை. ஆசையை அற்றவர்கள் உண்மைப் பொருளை உணர்ந்தவர்கள். ஆசை இல்லாதவனுக்கு துன்பம் இல்லை. ஆசை என்றால் துன்பம், ஆசை அற்றவனுக்கு பேரின்பம் வாய்க்கும்.

    Next Story
    ×