search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆட்டிசம் குறைபாடு தான்; நோயல்ல!
    X

    ஆட்டிசம் குறைபாடு தான்; நோயல்ல!

    • ஆட்டிசம் ஏற்படுவதற்கான காரணம் இதுதான் என்று உறுதியாகக் கூறுவது கடினம்.
    • ஆடுகளங்களில் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும்போது மற்றவர்களை ஒத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஆட்டிசம் என்பதை மதியிறுக்கம் அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு என்றும் கூறலாம். இது ஒரு மூளை நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடாக இருந்தாலும், மனஅளவில் பல சிக்கல்களால் இக்குழந்தைகள் இடர்படுகிறார்கள்.

    இக்குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் மன அழுத்தத்தால் துன்புறுகிறார்கள்.

    ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதான், நோயல்ல. ஆகவே, அந்தக் குறைபாட்டின் தன்மையிலிருந்து பாதித்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பதைச் சிந்திக்க வேண்டும். ஆக இந்தப் பாதிப்பு ஏன் வருகிறது? அறிகுறிகள் என்ன? எப்படிக் கண்டறிவது? கவன முறைகள் என்ன? என்பது பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.

    ஆட்டிசம் ஏன் வருகிறது?

    ஆட்டிசம் ஏற்படுவதற்கான காரணம் இதுதான் என்று உறுதியாகக் கூறுவது கடினம். மரபணுக்களின் சீரற்ற நிலை, வளர்சிதை மாற்றக் குறைபாடு, சுற்றுச்சூழல் மாசு, காற்றில், மண்ணில் கலக்கும் நச்சு ரசாயனங்கள், கனிமங்கள், நெருங்கிய உறவுத் திருமணம், தாமதமான திருமணம், தாமதமான குழந்தைப்பேறு, கருவுற்ற பெண்களுக்கு ரூபெல்லா வைரஸ் தாக்கினால், தைராய்டு சிக்கல் இருந்தால் அல்லது போலிக் அமிலம் குறைவாக இருந்தால் குழந்தைக்கு இந்தக் குறைபாடு வரலாம்.

    பேறு காலத்தில் பெண்களின் மனஅழுத்தம், மது அருந்தும் பழக்கம், புகைபிடித்தல், வலிப்பு நோய் மாத்திரைகள் சாப்பிடுவது, மன நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிடுவது, அலைபேசியைச் சிறுகுழந்தைகள் பயன்படுத்துவது போன்ற காரணிகளால் குழந்தையின் மூளை வளர்ச்சியில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இதனால் ஆட்டிசம் வரக்கூடும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    ஆட்டிசத்தின் அறிகுறிகள் என்ன?

    குழந்தை பிறந்து 10-லிருந்து 18 மாதங்களுக்குள்ளாகவே அறிகுறிகளைக் கண்டறிய முடியும். இந்தக் குறைபாட்டின் தீவிரத்தன்மை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

    இக்குழந்தைகளுக்கு, மற்றவர்களோடு ஒப்பிடும்போது தெளிவுடன் பேசும் மற்றும் பழகும்திறன் குறைவாக இருக்கும். சில குழந்தைகள் பேசினாலும், மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி, பேசத் தெரியாமல் இருக்கும்.

    பொதுவாகக் கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பார்கள்.

    பெரும்பாலும் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள்.

    ஒரே மாதிரியான செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள்.

    சில செயல்களைச் சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பார்கள்.

    பயம், ஆபத்து போன்றவற்றை உணராமல் தாம் நினைத்தவற்றைச் செய்வார்கள்.

    காரணமின்றி அழுவது, சிரிப்பது, கைகளைத் தட்டுவது, குதிப்பது போன்று ஏதாவது வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவார்கள்.

    தேவையானவற்றை விரல் சுட்டிக் காட்டாமல், மற்றவரின் கைபிடித்து இழுத்துச் சென்று காட்டுவார்கள்.

    மின்விசிறி, ராட்டினம் போன்ற சுற்றும் பொருள்களின் மீது அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

    கண், மூக்கு, வாய், காது, சருமம் ஆகிய புலன்களின் உணர்வுகளில் மாறுபாடு இருக்கும். இந்தப் புலன்களின் தூண்டுதல் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சிலருக்கு இருக்கலாம். தேவையில்லாமல் சில சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லும் பழக்கம் இவர்களிடம் அதிகம் காணமுடியும்.

    இந்த மேற்கூறிய அறிகுறிகள் குழந்தையிடம் தெரிந்தால் போகப்போகச் சரியாகிவிடும் என்று பெற்றோர் எண்ணிவிடக் கூடாது. அதேவேளையில் இவற்றில் சில அறிகுறிகளை மட்டும் வைத்துக்கொண்டு குழந்தைக்கு, ஆட்டிசம் உள்ளது என்று கணித்துவிடவும் கூடாது.

    இதில் சில அறிகுறிகள் இருந்து, குழந்தையின் இயல்பான திறமைகள் பாதிக்கப்படுகின்றன என்றால் மட்டுமே, அந்தக் குழந்தைக்கு ஆட்டிசம் இருக்க வாய்ப்புள்ளது. இப்படி இருந்தால் குழந்தையை 3 வயதுக்கு முன்னரே மூளை நரம்பியல் மற்றும் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனையைப் பெறுவது நல்லது.

    மரு.அ.வேணி MD., DM(Neuro), 75980-01010, 80564-01010.

    ஆட்டிசத்தைக் கண்டறிவது எப்படி?

    ஆட்டிசத்தைக் கண்டறிய இதற்கென்று தனிப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் ஏதும் இல்லை. பெற்றோர், ஆசிரியர், உறவினர், குழந்தைகள் நலமருத்துவர், மூளை நரம்பியல் நிபுணர், மனநல மருத்துவர் போன்றவர்களே இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்து சொல்ல முடியும். நரம்பியல் தொடர்பான ஆட்டிசக் குறைபாடுகளை சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் என்ன குறைபாட்டினால் ஆட்டிசம் ஏற்பட்டது என்பதைக் கண்டறியலாம்.

    ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள்:

    ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் குறைபாட்டின் விரைவுத்தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். எனவே, அவர்களுக்கு உள்ள குறைபாடு என்ன? என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சை மற்றும் பயிற்சிகள் அளிக்க வேண்டும். அவர்களின் அதிகப்படியான துறுதுறுப்புத் தன்மையைக் குறைப்பதற்கான மாத்திரைகள் உள்ளன. அதேபோல் அவர்களுக்கென்று சில பயிற்சி முறைகளும் உள்ளன.

    ஆக்குபேஷனல் தெரபி: பல் தேய்த்தல், குளித்தல், சாப்பிடுதல், தூக்கம் போன்ற தினசரிப் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தப் பயிற்சிகள் தர வேண்டும். இவைகளைச் சிறு வயதிலேயே குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதன் மூலம் மற்றவர்களைப் போல் தாமாக இயங்க முடியும்.

    பேச்சுப் பயிற்சி: மொழி மற்றும் பேச்சுப் பயிற்சிகளைச் சிறுவயதிலேயே தொடங்கிவிட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைக்குப் புரியும் விதமாக நிறையவே பேச வேண்டும்.

    உளவியல் சார்ந்த பயிற்சிகள்: குழந்தைகளுக்கு உடலளவில் மட்டுமல்லாமல், மனத்தளவிலும் நெகிழ்வுத்தன்மை, மற்றவர்களோடு பழகும்முறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

    கல்விக்கான பயிற்சிகள்: ஐ.ஈ.பி முறை ஆட்டிசக் குழந்தைகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். அதாவது, கல்வித் திட்டத்தை, ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் திறன், அதை வெளிப்படுத்தும் திறன் உட்பட, பலவற்றை ஆராய்ந்து அதற்குத் தகுந்தாற்போல் வடிவமைத்துக் கொடுப்பதே ஐ.ஈ.பி ஆகும். இதற்கென்று சிறப்புப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் சேர்த்துக் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும்.பள்ளிக்கு நடந்தே செல்வது நல்லது.

    ஆடுகளங்களில் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும்போது மற்றவர்களை ஒத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது. நினைவுத்திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கும் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

    பயிற்சி வகுப்புகளில் கற்றுக் கொடுக்கப்படுபவைகள் மட்டும் குழந்தையிடம் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடுமா? எனில் அது உறுதி இல்லை. வீட்டில் இருக்கும் மற்ற நேரங்களில் பல பெற்றோர்கள் எதுவுமே செய்யாமல் விட்டுவிடுகின்றனர். இதன் காரணமாகத்தான் குழந்தையிடம் முன்னேற்றம் ஏற்படுவது நீள்கிறது.

    குழந்தைகளின் பெற்றோர் பயிற்சியாளர்களிடம் முறைகள் அறிந்து, வீட்டில் செய்யவேண்டிய பயிற்சிகளைக் கட்டாயம் செய்ய வேண்டும். வீட்டு வேலை செய்வதற்கு வயதுக்கேற்ப, பயிற்றுவிக்க வேண்டும். இந்த அனைத்துப் பயிற்சிகளையும் குழந்தை சரியான முறையில் பெறுவதற்குத் தாயின் பங்கு மட்டுமல்லாமல், குடும்பத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. தொடர்ந்து பயிற்சிகள் கொடுப்பதன் மூலம், சீரான நிலைக்குக் கொண்டு வர முடியும்.

    பள்ளியோ, பயிற்சி வகுப்புகளோ குழந்தைகளுக்குத் தேவையான அனைத்தையும் முழுமையாகக் கற்றுக் கொடுத்துவிட முடியாது. பெற்றோரின் பங்கே முதன்மையானது என்பதை, ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர்கள் உணரவேண்டும். என்னதான் ஆட்டிசத்திற்கு என்று மாத்திரைகள் பல இருந்தாலும் அன்பும், அரவணைப்புமே இதற்கான மருந்துகள். இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போதுதான், அவர்கள் நம்மை நெருங்கி வருவார்கள். எனவே, இவர்களோடு நாம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்; பூங்கா, கோயில், கடற்கரை, பொருட்காட்சி போன்ற வெளி இடங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும். நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல், யோகா, நடனம் போன்ற பயிற்சிகளை ஆட்டிசக் குழந்தைகளுக்கு அளிக்கும்போது அவர்களின் உடல் திறனை அதிகப்படுத்துவதுடன், தத்தம் வேலைகளைத் தாமே செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும் வளர்கிறது.

    Next Story
    ×