search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஒற்றுமை-மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஓணம் பண்டிகை
    X

    ஒற்றுமை-மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஓணம் பண்டிகை

    • மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார்.
    • ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சத்யா" என்ற உணவு தயாரிக்கப்படுகிறது.

    கேரள மக்களால் சாதி மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதை கேரளத்தின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொரு நாளும்...

    ஓண திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினாலான அத்தப்பூ கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர்.

    ஓணம் பண்டிகையை ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து கொண்டாடுகிறார்கள். முதல் நாள் அத்தம், இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படுகிறது. அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில் ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் 64 வகையான உணவு வகை இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை "ஓண சாத்யா" என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று கேரளத்தின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலை பாடிக்கொண்டு படகை செலுத்துவது இதன் சிறப்பம்சம்.

    ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா), ஏழாம் நாள் மூலம், எட்டாம் நாள் பூராடம், ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படுகிறது. பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவடைகிறது.

    மன்னர் மகாபலி

    மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். கொடை செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமணனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தார். ஒரு அடியால் இந்த பூமியையும், மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் மகாபலி பேரரசன்.

    அவருக்கு முக்தி அளிக்க வேண்டி அவரது தலையில் கால் வைத்து அவரை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் ஆண்டுக்கு ஒருமுறை பாதாளத்திலிருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டினார் மன்னன்.

    அதன்படி ஒவ்வொரு திருவோண திருநாள் அன்று மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள். இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

    அத்தப்பூ கோலம்

    ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பல வண்ண மலர்களால் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் போடப்படும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக்குலுங்கும் மாதமாகும். அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாக கொண்டாடுவர்.

    ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக்கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின் தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று என தொடர்ந்து, பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள் பூக்கோலத்தின் அளவு பெரியதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.

    ஓண சத்யா

    கேரள உணவுகள் என்றதுமே புட்டு, கிழங்கு, பயறு என்பவை நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி "ஓண சத்யா" என்ற உணவின் சிறப்பை கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சத்யா" என்ற உணவு தயாரிக்கப்படுகிறது.

    புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இந்த உணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக " இஞ்சிக்கறி", "இஞ்சிப்புளி" ஆகியவற்றை உணவுடன் எடுத்துக் கொள்வர்.

    புலிக்களி

    "புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று அழைக்கப்படும் நடனம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தை குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர். புலிக்களி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியை தலைநகராக கொண்டு ஆண்ட மன்னன் ராமவர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும். இசை ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.

    பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம் "கைகொட்டுக்களி". கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களை பாடியபடி ஆடுவர். பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியை குறித்தும். அவரை வரவேற்பதாகவும் அமையும்.

    யானைத்திருவிழா-படகுப்போட்டி

    ஓணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழாவாகும். 10-ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூத்தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்குச் சிறப்பு உணவுகளும் படைக்கப்படும்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகளென 10 நாட்களும் பல விளையாட்டு போட்டிகள் நடைபெறும். ஆரன்முலா பாம்பு படகுப் போட்டி ஓணம் பண்டிகையின் மற்றொரு சிறப்பம்சமாகும். இதில் பழங்கால படகு பாடல்களை பாடி நிபுணத்துவம் வாய்ந்த துடுப்பு வீரர்களால் பாரம்பரிய பாம்புப் படகுகள் பந்தயம் நடத்தப்படும்.

    முக்கியத்துவம்

    ஓணம் என்பது கேரளாவில் முக்கியமாக கொண்டாடப்படும் ஒரு குறிப்பிடத்தக்க பண்டிகையாகும். இந்த திருவிழா கேரள மக்களுக்கு ஆழ்ந்த கலாச்சார மற்றும் மத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அவர்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சமூக உணர்வை வளர்க்கிறது. ஓணத்தின்போது கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக மக்கள் 'ஓணக்கொடி' எனப்படும் புதிய ஆடைகளை பரிமாறி, அணிந்து கொள்கின்றனர். மொத்தத்தில் ஓணம் பண்டிகை ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியை குறிக்கிறது.

    வயநாடு நிலச்சரிவு கேரளாவில் ஒரு பேரழிவாக பார்க்கப்படுவதால் மாநில அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஓணம் விழா இந்த ஆண்டு நடத்தப்படவில்லை. இருந்தபோதிலும் ஓணம் விழாவை பெரும்பாலான மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    Next Story
    ×