search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சீரான ரத்த ஓட்டமே நோயை தடுக்கும்
    X

    சீரான ரத்த ஓட்டமே நோயை தடுக்கும்

    • அதிக மது, புகை இவற்றினை அடியோடு தவிர்த்து விடுவதே நல்லது.
    • கணைய வீக்கம் என்பது திடீரென ஏற்படும் பொழுது அதன் வலி பாதிக்கப்பட்டவரை துடிதுடிக்க வைத்துவிடும்.

    மனித உடல் என்பது எப்படி உருவானது? எப்படி இயங்குகின்றது? என்பதனை நினைக்க நினைக்க ஆச்சர்யம்தான் வருகிறது. இத்தனையையும் ஒருங்கிணைத்து நடத்த ரத்த ஓட்ட மண்டலம் மிக முக்கியமானதாக விளங்கு கின்றது. இந்த மண்டலம் அதிக எடை, ஆரோக்கிய உணவின்மை, குடி, மது போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றது.

    சர்க்கரை நோய், ரத்தத்தில் சிறு கட்டிகள், இருதயம் சீராக இயங்காமை, இவை எல்லாம் ரத்த ஓட்டம் சீராக இயங்காமல் இருப்பதன் விளைவுகளே.

    குறைவான ரத்த ஓட்டம் சிறுநீரகங்களுக்கு இருந்தால் சிறுநீரக செயல்திறன் குறைந்து விடுகின்றது. இதன் காரணமாகவே கால்களில் வீக்கம் ஏற்படலாம்.

    பொதுவில் கால்களில் வீக்கம் என்பது கர்ப்ப காலத்தில் அதிக உடல் உழைப்பில்லாது வெகு நேரம் அமர்ந்திருப்பது, மாதவிலக்கிற்கு முன்னர் இதுபோன்ற காரணங்களாலும் வீக்கம் ஏற்படலாம். சற்று காலை 2 தலைகாணி மேல் உயர்த்தி வைத்து படுக்கும் போது கூட இவை சரியாகி விடும். ஆனால் எதிலும் சரியாகாது தொடர்ந்து இருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

    வைட்டமின் பி12 குறைபாடு, கை, கால்களில் மரத்து போவது போன்ற உணர்வினை ஏற்படுத்தலாம்.

    கை, கால்களில் சில்லிப்பு உணர்வு இருந்தால் போதுமான சீரான ரத்த ஓட்டம் இல்லாமலும் இருக்கலாம். பொதுவில் இவர்கள் கைகளை தேய்த்து சூடு படுததிக் கொள்வார்கள். ஆனால் அடிக்கடி இவ்வாறு ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    காயங்கள் ஆறுவதற்கு கூடுதல் நேரம் ஆனாலும் போதுமான வைட்டமின், தாதுக்கள் கிடைக்கவில்லை என்ற காரணமும் உண்டு.

    சீரான ரத்த ஓட்டம் தலைக்கும் வேண்டும். மசாஜ் செய்வதே ரத்த ஒட்டத்தினை அதிகரிப்பதற்காகத்தான். சீரான ரத்த ஓட்டம் இல்லாவிட்டாலும், சத்துகள் இல்லாவிட்டாலும், சில மருத்துவ காரணங்களாலும் முடி கொட்டும்.

    நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு, மன அழுத்தம் இன்மை இவையும் சீரான ரத்த ஓட்டத்திற்கு அவசியம்.

    சிலருக்கு வித்தியாசமான ஒரு பிரச்சினை உண்டு. மருத்துவரிடம் செல்லும் போது தனக்கு இருக்கும் உடல்நிலை பிரச்சினைகளை கூற மறந்து விடுவார்கள். இதனாலேயே ஒரு மருத்துவரை காணும் முன்பு அவரது உதவி மருத்துவர்கள் தலை முதல் கால் வரை, பரம்பர, ஒவ்வாமை போன்ற கேள்விகள் மூலம் அவர்களது பிரச்சினைகளை கேட்டு எழுதி பைல் என்ற முறையில் அனைத்தினையும் பதிவு செய்து விடுவர். ஒவ்வொருவரும் தனது சிகிச்சை பேப்ர்கள், உடல்நல குறைபாடுகளின் சிகிச்சை இவற்றினை ஒரு பைல் போல் வைத்து அதனை ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் எடுத்து செல்வது சரியான முறையாகும். இதில் சோம்பேறித்தனம், கவனக்குறைவு கூடாது. அதே போன்று மருத்துவரிடம் செல்லும் போது உடல்நல பிரச்சினைகள், ஐயங்கள் இவற்றினை ஒரு பேப்பரில் எழுதி எடுத்துச் செல்வது நல்லது.

    * இன்று எது கூறினாலும் 'கூகுள்' சென்று விஷயங்களை சேகரிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இது நல்லதுதான். ஆனால் இதனை படித்து சுய சிகிச்சை செய்ய முற்படுவதுதான் தவறு.

    * சுய சிகிச்சையில் தவறான மருந்து, தவறான அளவு என்பது அதிகமாகக் காணப்படுகின்றது.

    * போனிலேயே இருதய அறுவை சிகிச்சை வரை மருத்துவர் அளிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

    * உடனடி கவனிக்காமல் ஆரோக்கியம் அதிகம் கெட்ட பிறகு சிகிச்சைக்கு செல்வது உங்கள் உடல் நலனை பாதிக்கும் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

    எந்த சிகிச்சையினையும் அவர்களோ (அல்லது) அவர்களது உறவினர்களோ முழுமையாய் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இதுவரை நான் எந்த பரிசோதனையும் செய்து கொள்ளவில்லை என்பது கேட்பதற்கு பெருமையாக இருக்கலாம். ஆனால் வயதிற்கேற்ப பரிசோதனைகள் செய்து கொள்வதே நல்லது.

    காலம் சென்ற மருந்துகளை எடுத்துக் கொள்வது விஷம் உண்பதற்கு சமமாகும். தவறுகள் ஏற்படாமல் இருக்க ஒவ்வொருவரும் சில தவிர்ப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.

    * நீங்கள் என்ன மருந்துகளை சத்து மருந்துகளை எடுத்துக் கொள்கின்றீர்கள் என்பது உங்கள் மருத்துவருக்கு முழுமையாக தெரிய வேண்டும். கையில் மருந்து சீட்டு மருந்து இவற்றினை எடுத்துச் செல்லலாம். ஆயுர்வேதம், ஒமியோபதி, நாட்டு மருந்து என இருந்தாலும் அவைகளையும் குறிப்பிட வேண்டும்.

    * உங்கள் அலர்ஜி பற்றி மருத்துவருக்கு குறிப்பிட வேண்டும்.

    * டாக்டர் எழுதும் மருந்தினை நீங்கள் உங்கள் மொழியில் கூட எழுதி வைத்துக் கொள்ளலாம். அவரது எழுத்து உங்களுக்கு படிக்க கடினமாக இருந்தால் தெளிவாக கேட்டு எழுதிக் கொள்ளலாம். பல மருந்துகள் எழுதப்படும் போது

    * ஒவ்வொன்றும் எதற்கானது

    * இதன் பக்க விளைவின் அறிகுறிகள்

    * உணவு-தவிர்க்கப்பட வேண்டியவை எனக் கேட்கலாம்.

    ஒவ்வொரு மருத்துவரும் இதனை தெளி வாக விளக்குகின்றனர். வேண்டுமெனில் அவரது உதவியாளரிடம் மீண்டும் கேட்டு தெளிவு பெற வேண்டும்.

    * மருந்து வாங்கும் போது அதே மருந்து வேறு கம்பெனி உற்பத்தி மூலமாக இருக்க லாம். சந்தேகம் இருந்தால் கஷ்டம் பார்க்காமல் மருத்துவரிடம் மீண்டும் அதனைக் காட்டி உறுதி செய்து கொள்ளுங்கள்.

    * நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்தால் மருத்துவரே உரிய நேரத்தில் உங்களை டிஸ்சார்ஜ் செய்வார். பணம் மிச்சப்படுத்துகின்றேன் என்ற பெயரில் அவசரப்படுத்தாதீர்கள்.

    * சிகிச்சையின்போது குடும்ப நபர் ஒருவர் உடன் இருப்பது நல்லது.

    * நம்மீது நாம்தான் அக்கறை கொள்ள வேண்டும் என்பதனை கருத்தில் கொள்ளுங்கள்.

    * டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தாலும் மருந்து, ஓய்வு, உணவு இவற்றினை முறைபடி செய்யுங்கள்.

    * அதிக மது, புகை இவற்றினை அடியோடு தவிர்த்து விடுவதே நல்லது. சீரான ரத்த ஓட்டம் கிடைக்காது செய்துவிடும். உடனடி மருத்துவர் சிகிச்சை அவசியம்.

    * நெஞ்சில் இறுக்கம், மூச்சு வாங்குதல் இவை உடனடியாக மருத்துவர் கவனம பெற வேண்டியவை ஆகும்.

    கணைய வீக்கம்

    கணைய வீக்கம் என்பது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்பது முக்கியமான மருத்துவ அறிவுரை என்று கொள்ளலாம். கணைய வீக்கம் என்பது திடீரென ஏற்படும் பொழுது அதன் வலி பாதிக்கப்பட்டவரை துடிதுடிக்க வைத்துவிடும். கணையம் என்ற சிறிய உறுப்பு வயிற்றுக்குள் பின்னால் விலா எலும்பிற்கும் கீழ் உள்ள உறுப்பு ஆகும்.

    பொதுவில் திடீரென ஏற்படும் இந்த வீக்கம் வயிற்றில் கடும் வலி, சோர்ந்து விடுதல், வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் காட்டும். பின் முதுகு வரை வலி பரவும். ஏதாவது குடித்தாலோ, சாப்பிட்டாலோ வலி துடிதுடிக்க செய்து விடும்.

    பித்தப்பையில் உள்ள கற்களால் ஏற்படும் கணைய வலி மிக அதிக உணவு உண்ட பின் ஏற்படும். மது அருந்திய பிறகும் ஏற்படும்.

    வயிற்றுப் பிரட்டல், வயிற்றுப் போக்கு, அஜீரணம், அதிக ஜூரம், மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகளை காட்டும். திடீரென கணைய வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்து 4-10 நாட்கள் ஊசி மூலம் சத்து, மருந்து கொடுப்பதன் மூலம் தீர்வு பெற முடியும். ஆனால் மிக அதிக பாதிப்பு என்பதற்கு அதிக மருத்துவ கவனம் தேவைப்படுகிறது.

    இதுபோன்று அடிக்கடி கணைய வீக்கம் ஏற்பட்டால் அது நாள்பட்ட கணைய அழற்சி என்று கூறப்படுகின்றது.

    கணைய வீக்கத்தினை தவிர்க்க மது, அதிக கொழுப்பு கொண்ட உணவுகள் இவற்றினை தவிர்க்க வேண்டும். சில வகை மருந்துகளும் இந்த பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால் எந்த மருந்தினையும் மருத்துவ ஆலோசனையின் பேரிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தைராய்டு

    தைராய்டு குறைபாடு பிரச்சினை என்பது தைராய்டு சார்ந்த பிரச்சினைகளில் சற்று கூடுதலாக காணப்படும் ஒன்று. இதன் அறிகுறிகளாக:

    * அதிக சோர்வு இருக்கும். இரவு 10 மணி நேரம் தூங்கி எழுந்தாலும் அதிக சோர்வுடன் இருப்பர்.

    * திடீ ரென எடை கூடும். முயற்சி செய்தும் எடை இறங்காது.

    * மனச் சோர்வு, படபடப்பு என மனநலம் அடிக்கடி மாறும்.

    * இவர்களுக்கு பிற ஹார்மோன் பிரச்சினைகளும் இருக்கலாம்.

    * எப்பொழுதும் குளிர்வது போல் இருக்கும்.

    * வறண்ட சருமம், எளிதில் உடையும் நகங்கள், வறண்ட பலவீனமான முடி இருக்கும்.

    * மலச்சிக்கல் * கவனிக்கும் கூர்மை திறன் குறையும், மறதி ஏற்படும், கழுத்தில் வீக்கம் இருக்கும்.

    * குறட்டை கனத்த சப்தத்தோடு இருக்கும்.

    * தசைகளில், மூட்டுகளில் வலி இருக்கும். மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை இதற்கு அவசியம் தேவை. கூடவே மருத்துவர் ஜிங்க், செலினியமும் கொண்ட வைட்டமின் சத்து மாத்திரையினை அளிப்பார்.

    * குளூடன் இல்லாத உணவு உதவும். * 8 முதல் 10 மணி நேர உறக்கம் அவசியம். யோகா, தியான பயிற்சி அவசியம், ஆரோக்கியமான ஜீரண மண்டலம் இருக்க வேண்டும். மேலும் சில வாழ்க்கை முறை மாற்றங்களை அவரவர் உடல் நலனுக்கேற்ப மருத்துவர் பரிந்துரை செய்வார்.

    தாதுக்களின் அவசியம்

    ஜிங்க்- நோய் எதிர்ப்பு சக்தி தரும். அயோடின் தைராய்டு சுரப்பி நன்கு இயங்கும். பாஸ்பரஸ் எலும்புகளுக்கு பலம் தரும். சல்பர் நச்சு நீக்கும். கரோலியம் சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

    Next Story
    ×