search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பித்தப்பை கற்களால் ஏற்படும் வயிற்று வலி
    X

    பித்தப்பை கற்களால் ஏற்படும் வயிற்று வலி

    • பித்தப்பையானது பித்தநீரின் அடர்த்தியை அதிகமாக்கும் போது அதில் உள்ள பித்த உப்புகள் அதன் அடியில் படியும்.
    • பித்தப்பையில் கல் இருக்கும் போது பித்த நீர் சரியாக செல்லாமல் உணவு விரைவில் செரிமானம் ஆகாது.

    சிறுநீரக கல் போன்று பித்தப்பை கல் பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். உணவு சாப்பிட்ட பிறகு வயிறு வலி, மஞ்சள் காமாலை பிரச்சினை என பல உபாதைகளை உண்டாக்கும் பித்தப்பை கல் பிரச்சினையை எளிதில் குணப்படுத்தி விடலாம். பித்தப்பை கல் எப்படி வருகிறது, அதனால் என்ன பாதிப்புகள், அதனை குணப்படுத்துவது எப்படி? என்பது பற்றி இன்று பார்ப்போம்.

    60 வயது பெண்மணி ஒருவர் ஆஸ்பத்திரிக்கு கடுமையான வயிற்று வலி என்று வருகிறார். வாயுத்தொல்லை மாதிரி இருக்கிறது, சாப்பிட்டதும் வாந்தி வருகிறது. வயிறு கடுமையாக வலிக்கிறது என்கிறார். இந்த வலி 2 நாளாக இருக்கிறது. வாயுத்தொல்லை 15 நாட்களுக்கு மேலாக இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் வயிறு உப்புசம் போல் இருக்கிறது என அடுக்குகிறார்.

    பித்தப்பை கல் பாதிப்பு இருந்தால் இதுபோன்ற அறிகுறிகள் தென்படும். பித்தப்பை கல் என்பது சாப்பிடும் உணவில் இருந்து செல்வது கிடையாது. இது பித்தப்பையில் தானாக உருவாகக் கூடியது. நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்யும் பணியில் பித்தப்பையும் இடம் பெற்றுள்ளது.

    திருமண வீட்டுக்கு செல்கிறோம். வடை, பாயாசம், பொறியல், துவையல், வறுவல், சாம்பார், ரசம், மோர் குழம்பு, இனிப்பு என 10-க்கும் மேற்பட்ட உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிடுகிறோம். இவை அனைத்தும் ஜீரணம் ஆக வேண்டும் அல்லவா? அந்த ஜீரணத்தை உண்டாக்க கூடியது பித்த நீர் ஆகும். பித்த நீரை கல்லீரல் சுரக்கிறது. பித்த நீர் சேமித்து வைக்கப்படும் இடமே பித்தப்பை.

    நம் உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகளில் மிகப்பெரியது கல்லீரல். இதில் தினமும் ஆயிரத்தில் இருந்து 1500 மில்லி லிட்டர் வரை பித்தநீர் சுரக்கிறது. பித்த நீர் என்பது ஒரு திரவக்கலவை. 97 சதவீதம் நீரும், ஒரு சதவீதம் பித்த நிறமிகளும், ஒன்று முதல் 2 சதவீதம் வரை பித்த உப்புகளும் இதில் உள்ளன.

    கல்லீரலில் சுரக்கும் பித்த நீர், வலது மற்றும் இடது பித்த நீர் குழாய்கள் வழியாக முன்சிறுகுடலுக்கு வந்து சேரும். அதற்கு முன்பாக ஒரு கிளை குழாய் வழியாக கல்லீரலுக்கு வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் பித்தப்பையினுள் அது செல்லும்.

    அப்போது பித்தப்பையானது பித்தநீரைப் பெற்றுக்கொண்டு அதன் அடர்த்தியை அதிகரித்து உணவு செரிமானத்துக்கு தயாராக வைத்திருக்கும்.

    நாம் சாப்பிட்ட உணவு இரைப்பையை விட்டு புறப்பட்டதும் பித்தநீர் தேவை என்று நரம்புகள் வழியாக ஒரு சமிக்ஞை பித்தப்பைக்கு வந்து சேரும். உடனே பித்தப்பையானது தன்னைத் தானே சுருக்கி, பித்த நீரை பித்தக் குழாய்க்குள் அனுப்பி வைக்கும். அது நேராக முன்சிறுகுடலுக்கு வந்து, உணவுக் கூழில் உள்ள கொழுப்பை சரியாக செரிக்க வைக்கும்.

    மனித உடலில் 6 இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம், சிறுநீர்ப்பாதை, பித்தப்பை, உமிழ் நீர்ச்சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த 6 இடங்கள். இவற்றில் சிறுநீரக கற்களுக்கு அடுத்தப்படியாக பித்தப்பை கல்தான் அதிகம் பேருக்கு தொல்லை தரக்கூடியது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி 100-ல் 15 பேருக்கு இந்த தொந்தரவு இருக்கிறது.

    பித்த நீரானது பச்சை கலரில் இருக்கும். சாதாரணமாக திரவநிலையில் உள்ள பித்தநீரில் சிலருக்கு மட்டும் தான் கற்கள் உருவாகின்றன. பித்தப்பையானது பித்தநீரின் அடர்த்தியை அதிகமாக்கும் போது அதில் உள்ள பித்த உப்புகள் அதன் அடியில் படியும்.

    இது சிறிது, சிறிதாக வளர்ந்து கடினமான ஒரு பொருளாக மாறி கல்லாக மாறி விடும். இந்த கற்கள் பார்ப்பதற்கு சாதாரண கற்கள் போலத்தான் இருக்கும். ஆனால் மிகவும் மென்மையானதாக இருக்கும்.

    சிலருக்கு ஒரு கல் மட்டும் உருவாகலாம். சிலருக்கு 10 கற்களுக்கு மேல் ஏற்படலாம். அதனால் கல்லின் அளவும், எண்ணிக்கையும் ஆளாளுக்கு வேறுபடும்.

    பித்தப்பையில் கல் இருக்கும் போது பித்த நீர் சரியாக செல்லாமல் உணவு விரைவில் செரிமானம் ஆகாது. இதனால் வயிற்று வலி ஏற்படும். அந்த சமயங்களில் எண்ணை பலகாரங்கள் சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளாது. வயிற்று வலி மேலும் அதிகமாகும்.

    பித்தப்பை கல் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது? நோயாளியை படுக்க வைத்து வயிற்றை தொட்டு பார்ப்போம். சில நேரங்களில் பித்தப்பை வீங்கி இருக்கும். கண்ணை திறந்து பார்த்தால் காமாலை வந்திருக்கும். பித்தப்பை கல் இருப்பவ ர்களுக்கு காமாலை நோய் வர வாய்ப்புண்டு. பித்தப்பையில் இருந்து பித்தநீர் வெளியேற சிரமப்படும் நேரத்தில் பித்த நீர் ரத்தத்துக்குள் போய் அது மஞ்சள்காமாலையாக மாறி விடுகிறது.

    அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் பித்தப்பையில் கல் இருப்பதை கண்டுபிடித்து விடலாம். ஸ்கேன் செய்து பார்க்கும் போது பித்தப்பை கல் இருப்பது தெரிவது மட்டுமல்லாமல் பித்தப்பையில் புற்றுநோய் இருந்தாலும் கண்டுபிடித்து விடலாம்.

    கல்லீரல் வீங்கி இருந்தாலும், குடல் வால் வீங்கி இருந்தாலும் இதில் தெரிந்து விடும். பெண்களுக்கு கர்ப்பப்பையில் பாதிப்பு இருந்தாலும், கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கலாம்.

    சிறிய அளவில் உள்ள பித்தப்பை கற்களை ஊசி மற்றும் மருந்துகள் மூலம் கரைக்கலாம். சற்று பெரிய அளவில் உள்ள கற்களை உடைத்து வெளியேற்றலாம். இருந்தாலும் பித்தப்பை நீக்கம் எனப்படும் அறுவை சிகிச்சை பித்தப்பை கற்களை தடுப்பதற்கு சிறந்த வழி.

    பித்தப்பை வீங்கி கல் இருந்தால் கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அது திறந்தநிலை அறுவை சிகிச்சையாகவோ அல்லது லேப்ராஸ்கோபி சிகிச்சையாகவோ இருக்கலாம். கல்லீரலுக்கு கீழே தொங்கிக் கொண்டிருக்கும் பித்தப்பையை கல்லோடு சேர்த்து அகற்றி விட்டோம் என்றால் பின்னர் பிரச்சினைகள் எதுவும் வராது.

    பித்தப்பையை அகற்றுவதால் எந்த பாதிப்பும் கிடையாது. பித்த நீர் அந்த பையில் சேகரித்து வைக்கப்படுவதற்கு பதிலாக கல்லீரலில் சுரக்கும் பித்த நீர் நேராக குடலுக்குள் வந்து விடும். அதன் மூலம் வழக்கம்போல் ஜீரணம் ஆகும். அவ்வளவு தான். அதனால் பித்தப்பையை அகற்றுவதில் தவறு இல்லை. அதேசமயம் சிறந்த மருத்துவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    அறிகுறிகள்

    பித்தப்பை கற்களால் பாதிக்கப்படுவோருக்கு மூன்று விதமான அறிகுறிகள் காணப்படும். உணவு உண்ட பின்பு சிறிது நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற உணர்வுடன் ஒரு வலி, வயிற்றின் மேல் பாகத்தில் அதாவது தொப்புளுக்கு மேலே தோன்றுவது ஒரு வகை. இந்த வலியானது கடுமையாகி பல மணி நேரம் நீடித்து குமட்டல், வாந்தி, ஏப்பம் போன்ற துணை அறிகுறிகளுடன் சிரமப்படுவது. 3-வது வலதுபுற விலா எலும்புகளை சுற்றி வந்து முதுகுப்புறம் வரைக்கும் சென்று தோள்பட்டை வரை வலி பரவும். கொழுப்பு அதிகம் உள்ள எண்ணை பதார்த்தங்களை சாப்பிடும் போது இந்த வலி ஏற்படும்.

    உடல் பருமன் மற்றும் அதிக உடல் எடை என்பது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும். ஒரு நாளைக்கு தேவையான கலோரியை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் உழைப்பு மூலம் அதிகப்படியான கலோரியை எரிக்க வேண்டும்.

    பெண்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் எடையை மிக வேகமாக குறைப்பவர்கள், மரபு ரீதியாக பித்தப்பை கல் பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பித்தப்பை கல் வராமல் தடுக்க முடியாது. ஆனால் வாய்ப்பை குறைக்க முடியும். தினமும் சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும். உணவை தவிர்ப்பது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

    எடையை குறைக்க அவசரம் வேண்டாம். உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டும். மிக வேகமாக குறைக்க முயற்சிக்கும் போது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

    அஜீரண பிரச்சினை

    இதேபோல அஜீரணம் ஏற்பட 4 காரணங்களை சொல்லலாம். 1. கல்லீரலில் பாதிப்பு இருப்பது, 2. பித்தப்பையில் கல் ஏற்படுவது. 3. கணையத்தில் நோய் பாதிப்பு இருத்தல், 4. அல்சர் பாதிப்பு.

    அஜீரணக் கோளாறுக்கான காரணத்தை கண்டறிய எண்டாஸ்கோபி சிகிச்சை அளிப்பது சிறந்தது. சின்ன குழாயை வாய் வழியாக உள்ளே செலுத்தி அதன் மூலம் ஒளியை ஊடுருவச் செய்து வயிற்றை முழுமையாக சோதனை செய்து பார்ப்பார்கள். அந்த சோதனையில் இரைப்பையில் புற்றுநோய் இருந்தாலும் தெரிந்து விடும். இரைப்பை புண், அல்சர், அசிசிட்டி போன்ற பிரச்சினைகளையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம்.

    தொடர்புக்கு:

    info@kghospital.com, 98422 66630

    Next Story
    ×