search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்: அரங்கம் நிறைந்தது மனம் குளிர்ந்தது
    X

    மீனா மலரும் நினைவுகள்: அரங்கம் நிறைந்தது மனம் குளிர்ந்தது

    • டான்சிலோ நடிப்பிலோ கொஞ்சம் சரியில்லை என்றாலும் டைரக்டர் திட்டுவார்.
    • ஏன்டா சினிமாவுக்கு வந்தோம் என்று கூட நினைக்க தோன்றியது.

    கொள்ளே கால் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. தண்ணீரில் இறங்கி, பாறை மீது நின்றெல்லாம் டூயட் பாடலுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டே நடிக்கணும்.

    வழுக்கும் பாறை என்பதால் கவனம் முழுவதும் அதில் தான் இருக்கும். டான்சிலோ நடிப்பிலோ கொஞ்சம் சரியில்லை என்றாலும் டைரக்டர் திட்டுவார். அந்த பயம் வேறு! இப்படியாக ஒவ்வொரு காட்சியிலும் நடித்தது திரில்லிங்கான அனுபவம்.

    ஷூட்டிங் முடிந்து காரில் ஓட்டலுக்கு திரும்புவோம். அப்பல்லாம் ஏ.சி.கார் கிடையாது. பக்க விட்டு கண்ணாடியை இறக்கி விட்டிருப்போம். கார் போகும் வேகத்தில் கண்ணில் போட்டிருக்கும் 'ஐலேஷ்' காற்றில் படபட என்று அடிப்பது கண்ணில் பட்டாம்பூச்சி தொட்டு ெதாட்டு போவது போல் அழகாக இருக்கும். அதை மிகவும் ரசிப்பேன்.

    குழந்தை நட்சத்திரமாக நடித்த போது இந்த மாதிரி மேக்-அப் எல்லாம் போட்டது கிடையாது. கதாநாயகி என்றால் சும்மாவா...? பயங்கர எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் வடக்கில் இருந்து வந்த சேதி எங்களுக்கு சாதகமாக இல்லை. முக்கியமாக அது மகிழ்ச்சியை தரவில்லை.

    ஆம். திட்டமிட்டபடி எனது நடிப்பில் உருவான 'சீதா ராமையா காரி மனவரலு (சீதா ராமையாவின் பேத்தி) என்ற தெலுங்கு படம் திரைக்கு வந்தது.

    படிப்பா? நடிப்பா? என்பதை இந்த படம்தான் முடிவு செய்யும் என்றிருந்ததால் அந்த படத்தை பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இருந்தோம்.

    ஆனால் தெலுங்கு பட உலகில் இருந்து வந்த தகவல் படம் வெற்றி பெறவில்லை. தியேட்டர்களில் கூட்டமே இல்லை. காற்றாடுகிறது... இரண்டு வாரத்தில் தூக்க வேண்டியதுதான் என்பதுதான். அதை கேட்டதும் மிகவும் சங்கடமாக இருந்தது.

    குழந்தை பருவத்தில் ரசிகர்கள் காட்டிய ஆதரவை பெரியவளானதும் காட்ட வில்லையே ஏன்? நாம்தான் சரியாக நடிக்க வில்லையா? என்று பல்வேறு குழப்பம் மனதுக்குள்.

    ஏன்டா சினிமாவுக்கு வந்தோம் என்று கூட நினைக்க தோன்றியது.

    குழந்தை நட்சத்திரமாக நடித்த போது ஜாலியாக மட்டும் தான் இருக்கும். பொறுப்பாக எதுவும் தெரியாது. ஆனால் கதாநாயகியாக மாறிய பிறகு என்னை அறியாமலே மனதுக்குள் ஒரு பொறுப்புணர்வு.

    நடிப்பதோடு கடமை முடிந்ததாக நினைக்க தோன்றாது. எப்படியாவது படம் நல்லா வரவேண்டும். வெற்றிப்படமாக அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அதன் விளைவு தான் படம் வெற்றி பெறவில்லை என்று தகவல் வந்ததும் எங்களை கவலையில் ஆழ்த்திவிட்டது.

    என்ன சார்...? இப்படி ஆகிவிட்டதே என்று அம்மாவும் தயாரிப்பாளரிடம் பேசி இருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் நம்பிக்கையுடன் சொன்னார்.

    நீங்க கவலைப்படா தீங்க. நல்ல படம். நல்லா வந்திருக்கு. ஜனங்க நிச்சயம் ரசிப்பாங்க. வேணும்னா பாருங்க 'மவுத் டாக்' போக, போக ஜனங்க வருவார்கள் என்றார்.

    அவர் சொன்னது அப்படியே பலித்தது. அடுத்த சில நாட்களில் கூட்டம்.... கூட்டம்... அப்படியொரு கூட்டம்...

    திரையிடப்பட்ட எல்லா தியேட்டர்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓடியது. ஆந்திரா முழுவதும் படம் சக்கை போடு போட்டது.

    ஹீரோயின் மீனா... தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் ஹீரோயின் ஆகிவிட்டேன். படம் பேசப்பட்டது. அதோடு மீனாவும் பட்டி தொட்டியெல்லாம் பேசப்பட்டேன்.

    இதற்கிடையில் எங்கள் வீட்டில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது. அதை கேளுங்கள்....

    கஸ்தூரிராஜா சார் இயக்கப் போகும் 'என் ராசாவின் மனசிலே' என்ற தமிழ் படத்துக்கு ஹீரோயின் தேடியிருக்கிறார்.

    என்னை பற்றி அறிந்து நேரில் வீட்டில் வந்து என்னை பார்த்து பேச வேண்டும் என்று வீட்டிற்கே வந்திருந்தார்.

    தனது படத்தின் கதையை சொன்னார். கதையை சொன்னதோடு அவர் விடவில்லை. படத்தில் வரும் டயலாக்குகள் தென் மாவட்டங்களில் பேசும் சாயலில் இருக்கும். நீ பேசுவியா என்றார்.

    நானும் சரி என்றேன்.

    உடனே நான்கைந்து வரி டயலாக்கை சொன்னார்.

    'நான் ஒண்ணும் அந்த மனுஷனுக்கு கழுத்த நீட்ட மாட்டேன். பொழுது விடிஞ்சு ராத்திரி படுக்க போற வரைக்கும் சாராயம் குடிக்குறது.எதுக்கெடுத்தாலும் ஈவு இரக்கமில்லாம அடிக்குறது. முரட்டு புத்தி. மூர்க்க குணம். நாட்டு கம்பு, புளியங்கம்பு, பெல்ட் அடி. அத தாங்குறதுக்கு என் உடம்புல சக்தி இல்லை. அந்த மனுஷனுக்கு வாக்கப்படுறதற்கு பதிலா சீவி, சிங்காரிச்சு, பொட்டு வச்சு, பூவச்சு, பட்டுச்சேலை கட்டிக்கிட்டு மாலையும், கழுத்துமா கிணத்துல குதிச்சிடலாம் சாமி..."

    -இதுதான் அவர் தந்த டயலாக். அதை பேசி காட்டு பார்ப்பேம் என்றார்.

    நானும் மனப்பாடம் பண்ணி பேசி காட்டினேன். ஆனால் அந்த டயலாக்கை அதற்கேற்ற முக பாவனையுடன் பேசியதில் எனக்கே முழு திருப்தி இல்லை.

    கஸ்தூரிராஜா சார் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

    நானே தொடர்ந்து சொன்னேன். சார், ஒரு சிறிய ரூமில் நின்று பேசுவதற்கும் கேமிரா முன்பு கதா பாத்திரத்தை புரிந்து கொண்டு பேசுதற்கும் வித்தியாசம் உண்டு. காமிரா லைட் வெளிச்சத்தில் நின்று பேசும் போது இன்னும் பெட்டரா வரும் சார்' என்றேன்.

    அது என்ன டைரக்டருக்கு தெரியாதா? எனக்கு அப்போது கொஞ்சம் அதிக பிரசங்கித் தனம்தான். இப்படி நான் பேசியதை கேட்டால் எல்லோரும் அப்படித் தானே நினைப்பார்கள். எந்த இடத்தில், யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று யோசிப்பது இல்லை. மனதில் பட்டதை பட்டென்று சொல்லி விடுவேன். அதுதான் என் குணம்.

    டைரக்டர் பதில் ஏதும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

    நான் டயலாக் பேசியது அவருக்கு பிடித்திருக்குமா? வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று ஒரே குழப்பம்.

    அவர் போனதும் அம்மா என்னிடம் 'இப்படியா சொல்றது? ஒரு வாய்ப்பு தேடி வரும் போது முழுமையாக பயன்படுத்திக் கொள்ளணும். உணர்ச்சிகளை முகத்தில் கொண்டு வந்து காட்டுவதுதானே அழகு? அப்பதானே அவுங்களுக்கு திருப்தி வரும். இப்படி சொன்னா ஏற்றுக் கொள்வார்களா? என்றார்.

    எனவே அந்த படத்தில் என்னை ஹீரோயினா செலக்ட் பண்ணுவாங்களா? மாட்டங்களா? என்று எதுவும் புரியாமல் இருந்தோம்.

    நாட்கள் சென்று கொண்டே இருந்தது. ஆனால் எந்த தகவலும் இல்லை. ஒரு கட்டத்தில் இனி வர மாட்டார்கள். நிச்சயம் கஸ்தூரிராஜா சார் வாய்ப்பு தரப் போவதில்லை என்றே முடிவு செய்து விட்டோம். ஆனால் நடந்தது வேறு.

    என் ராசாவின் மனசிலே...

    என் மனசில் இடம் பிடித்தது எப்படி...? அடுத்த வாரம் சொல்கிறேன்....

    (தொடரும்)

    Next Story
    ×