search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கருவைக் காத்தருளும் கர்ப்பரட்சாம்பிகை
    X

    கருவைக் காத்தருளும் கர்ப்பரட்சாம்பிகை

    • அம்பாளாக கர்ப்பரட்சாம் பிகை வீற்றிருக்கிறாள். அவளுக்கு அந்த பெயர் வந்ததின் பின்னணியில் ஒரு புராண வரலாறு இருக்கிறது.
    • தமிழகத்தில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளை நீக்கும் ஒரே தலமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.

    கர்ப்பிணி பெண்களுக்கு கண்கண்ட தெய்வமாக திகழ்பவள் கர்ப்பரட்சாம்பிகை. ஒரு பெண் கருத்தரிக்கவும், கருத்தரித்தப் பிறகு அந்த கருவை நன்கு பாதுகாத்து சுகப்பிரசவம் ஏற்படும் வரை கண்ணுக்குள் வைத்து காக்கும் கடவுளாக கர்ப்பரட்சாம்பிகை கருதப்படுகிறாள்.

    கும்பகோணத்துக்கு மிக அருகில் திருக்கருகாவூர் என்ற ஊரில் கர்ப்பரட்சாம்பிகை ஆலயம் அமைந்துள்ளது. திருமணம் கை கூடுவதற்கும், குழந்தை பாக்கியம் பெறுவதற்கும், சுகப்பிரசவம் அடையவும் கர்ப்பரட்சாம்பிகையை வேண்டிக் கொண்டால் போதும் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

    திருக்கருகாவூர் தலம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தலமாகும். இங்கே எழுந்தருளி இருக்கும் சிவலிங்கம் தானே எழுந்த சுயம்புலிங்கம் ஆகும். இந்த லிங்கத்தை கிரேதாயுகத்தில் தேவர்களும், திரேதா யுகத்தில் முனிவர்களும் வழிபட்டதாக குறிப்புகள் உள்ளன.

    அம்பாளாக கர்ப்பரட்சாம் பிகை வீற்றிருக்கிறாள். அவளுக்கு அந்த பெயர் வந்ததின் பின்னணியில் ஒரு புராண வரலாறு இருக்கிறது.

    ஆதிகாலத்தில் இந்த தலத்தில் நித்துருவர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி வேதிகை. இல்லற வாழ்வின் பயனாக வேதிகை கர்ப்பம் அடைந்தாள். கருவை சுமந்த அவள் அந்த குழந்தையை சுகப்பிரசவத்துடன் பெற்று வளர்க்க வேண்டும் என்று மனம் முழுக்க ஆசையுடன் இருந்தாள்.

    ஆனால் அவளுக்கு திடீரென்று ஒரு சோகம் ஏற்பட்டது. அவளது கணவர் நித்துருவர் ஒரு சமயம் அவளை ஆசிரமத்தில் தனியே விட்டுவிட்டு வருணனை பார்க்க புறப்பட்டு சென்று விட்டார். தனிமையில் இருந்த வேதிகை சற்று உடல் சோர்வாக இருந்ததால் அயர்ந்து தூங்கிவிட்டாள்.

    அப்போது ஊர்த்துவபாதர் என்ற முனிவர் அந்த ஆசிரமத்துக்கு வந்தார். தனக்கு மிகவும் பசியாக இருப்பதாகவும் பசி போக்க உணவு தருமாறும் வாசலில் நின்று கேட்டார். ஆனால் அவரது குரல் வீட்டுக்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேதிகைக்கு கேட்கவில்லை.

    இதனால் அந்த முனிவர் சற்று உரக்க குரல் கொடுத்து உணவு கேட்டார். ஆனால் உடலில் இருந்த சோர்வு காரணமாக வேதிகையால் உடனே எழுந்து வர இயலவில்லை. இது முனிவர் ஊர்த்துவபாதருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த காலத்தில் முனிவர்கள் கோபம் வந்தால் உடனே ஏதாவது சாபம் கொடுத்து விடுவார்கள்.

    ஊர்த்துவபாதர் முனிவரும் வேதிகைக்கு சாபமிட்டார். ராசயட்சு என்ற வகை நோயால் பாதிக்கப்பட்டு வருந்துவாயாக என்று முனிவர் சாபமிட்டார். அந்த சாபத்தால் வேதிகையின் வயிற்றில் இருந்த கருவில் பாதிப்பு ஏற்பட்டது. கரு கலைந்து விடுமோ என்ற நிலை உருவானது.

    உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு வேதிகை மனம் கலங்கினாள். இந்த நிலையில் வருணனை பார்க்க சென்றிருந்த நித்துருவர் திரும்பி வந்தார். முனிவர் கொடுத்த சாபத்தை அறிந்து கவலை அடைந்தார். நித்துருவரும், வேதிகையும் இந்த தலத்து சிவபெருமானையும், அம்பிகையையும் மனமுருக வேண்டினார்கள். வேதிகையின் மேல் இரக்கம் கொண்ட அம்பாள் அங்கு தோன்றினாள். வேதிகை வயிற்றில் பாதிப்புடன் இருந்த கருவை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டாள்.

    அந்த கருவை மீண்டும் முன்பு போல நல்ல ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வந்தாள். இதன் காரணமாக வேதிகையின் வயிற்றில் வளர்ந்த கரு காப்பாற்றப்பட்டது. திட்டமிட்டபடி அவள் வயிற்றில் குழந்தையை சுமந்து சுகப்பிரசவத்துடன் சிசுவை பெற்றெடுத்தாள்.

    கருவை பாதுகாத்து சுகப்பிரசவத்துக்கு உதவி செய்ததால் அந்த அம்பாளை கர்ப்பரட்சாம்பிகை என்று அழைத்தனர். தன்னை போன்று கரு உண்டாகும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அம்பாளை வேதிகை கேட்டுக் கொண்டாள். அதை ஏற்று அந்த தலத்தில் கர்ப்பரட்சாம்பிகை வீற்றிருந்து தற்போதும் அருள்பாலித்து வருகிறாள்.

    இப்போதும் கரு உண்டாகவும், கருவை பாதுகாக்கவும், சுக பிரசவம் ஆகவும் வேண்டுதல்களுடன் தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் திருக்கருகாவூருக்கு வருவதை காண முடிகிறது. கருவை பாதுகாக்க நினைக்கும் பெண்கள் இந்த தலத்தில் குறிப்பிட்ட பூஜையையும், வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.

    கர்ப்பம் அடைந்த பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக இந்த தலத்தில் கர்ப்பரட்சாம்பிகை திருப்பாதத்தில் விளக்கு எண்ணையை வைத்து மந்திரித்து கொடுப்பார்கள். அந்த எண்ணையை பிரசவவலி ஏற்பட்டதும் வயிற்றில் தடவி வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும் என்பது ஐதீகமாகும்.

    குறிப்பிட்ட மாதத்துக்கு முன்னதாகவே வயிற்றில் வலி ஏற்பட்டால் அது அசாதாரண பிரசவ வலியாக கருதப்படும். அந்த சமயத்தில் இந்த தலத்தில் தரப்படும் விளக்கெண்ணையை வயிற்றில் தடவி கொண்டால் அந்த வலி நீங்கி விடும்.

    சில பெண்கள் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியத்தை பெற முடியாமல் இருப்பார்கள். அவர்கள் கர்ப்பரட்சாம்பிகையின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்து கொடுக்கப்படும் நெய்யை பயன்படுத்தினால் உரிய பலன் கிடைக்கும்.

    அதாவது இந்த தலத்தில் தரும் நெய்யை கணவன்-மனைவி இருவரும் தொடர்ந்து 48 நாட்கள் இரவில் சாப்பிட்டு வர வேண்டும். அப்படி சாப்பிட்டால் நிச்சயம் கருத்தரிக்கும்.

    குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த தலத்தில் உள்ள தங்க தொட்டில் பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். கர்ப்பரட்சாம்பிகை அருளால் சுகப்பிரசவம் ஆனவர்களும் தங்கள் குழந்தையை தங்க தொட்டிலில் போட்டு தாலாட்டுவது முக்கிய பிரார்த்தனையாக கருதப்படுகிறது. இந்த பிரார்த்தனைக்கு தனி கட்டணம் உண்டு.

    இந்த தலத்தில் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை 6 நாட்கள் மட்டுமே காலை 8 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை அபிஷேகம் கிடையாது. அபிஷேகம் செய்ய விரும்பும் தம்பதிகள் ஆலயத்தில் முன்பதிவு செய்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    குழந்தை வரம் வேண்டி செல்லும் பெண்கள் கர்ப்பரட்சாம்பிகை முன்பு நின்று மனம் உருக வழிபட வேண்டும். கர்ப்பரட்சாம்பிகை இடது கையை இடுப்பில் வைத்த நிலையில் அழகாக காட்சி தரும் வடிவ அமைப்பில் இருக்கிறாள். சதுர்புஜ அம்பிகையாக நின்ற கோலத்தில் அருள்கி றாள். அவளிடம் எந்த அளவுக்கு மனம் உருக வேண்டுகிறோமோ அந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்று சொல்வார்கள்.

    கர்ப்பரட்சாம்பிகை அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பிறகு மீண்டும் அங்கு சென்று அவசியம் வழிபட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது சக்திக்கு ஏற்ப அம்பாளின் சன்னதியில் தங்கள் குழந்தையின் எடைக்கு எடை கல்கண்டு, வாழைப்பழம், சர்க்கரை போன்றவற்றை துலாபாரம் கொடுக்கலாம். சிலர் நாணயங்களையும் எடைக்கு எடை துலாபாரம் கொடுப்பது உண்டு.

    மேலும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழி படலாம். புடவை சாத்தி வழிபடலாம். இந்த தலத்து ஈசன் சுயம்புவாக தோன்றியவர் என்பதால் அபிஷேகம் கிடையாது. புணுகு சட்டம் சாத்தி வழிபடலாம். கும்பகோணத்துக்கு தென் மேற்கில் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஆலயத்தில் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் என்று எண்ணற்றவர்கள் வந்து வழிபட்டு பலன் பெற்றுள்ளனர்.

    மூலவர் முல்லைவன நாதருக்கும், அம்பாள் கர்ப்பரட்சாம்பிகைக்கும் இடையே முருகன் சன்னதி அமைந்துள்ளது. இந்த மூன்று சன்னதிகளையும் அடுத்தடுத்து தரிசிப்பது மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது. சோமாஸ்கந்த அமைப்பில் உள்ள இந்த சன்னதிகளை தரிசிப்பவர்களுக்கு குழந்தை பேறு கிடைப்பது என்பது ஐதீகமாக உள்ளது. இந்த மூன்று சன்னதிகளையும் ஒரே ஒரு முறைதான் வலம் வரவேண்டும்.

    இந்த தலத்தில் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் 6 மணி வரை உஷக்கால பூஜையும், 8.30 மணி முதல் 9.30 மணி வரை காலசந்தி பூஜையும், 12.30 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெறும். மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை சாயரட்ச பூஜையும், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெறும்.

    தமிழகத்தில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளை நீக்கும் ஒரே தலமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது. இதனால் இந்த ஊருக்கு கர்ப்பபுரி என்ற பெயரும் உண்டு. இந்த தலத்தில் வழிபடும் பெண்களுக்கு கருச்சிதைவோ, குறை பிரசவமுமோ ஏற்படுவது இல்லை.

    அடுத்து என்ன? நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும். அதற்கு செல்ல வேண்டிய தலம் வைத்தீஸ்வரன் கோவில். அடுத்த வாரம் வைத்தீஸ்வரன் தலம் பற்றி காணலாம்.

    Next Story
    ×