search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    டிஎன்பிஎல் 2018 இறுதிப்போட்டி- திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டிச்சென்றது மதுரை பாந்தர்ஸ்
    X

    டிஎன்பிஎல் 2018 இறுதிப்போட்டி- திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டிச்சென்றது மதுரை பாந்தர்ஸ்

    டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் அருண் கார்த்திக் அதிரடியால் திண்டுகல் டிராகன்ஸ் அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. #TNPL2018
    சென்னை :

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 11-ந் தேதி தொடங்கி நெல்லை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய இடங்களில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் (5 வெற்றி, 2 தோல்வி), மதுரை பாந்தர்ஸ் (5 வெற்றி, 2 தோல்வி), கோவை கிங்ஸ் (4 வெற்றி, 3 தோல்வி), காரைக்குடி காளை (4 வெற்றி, 3 தோல்வி) அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

    நத்தத்தில் நடந்த முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சை சாய்த்து இறுதிபோட்டிக்குள் நுழைந்தது. இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும்.

    இந்நிலையில் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மதுரை பாந்த்ர்ஸ் அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டுக்கல் டிராகன்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    ஹரி நிஷாந்த் 1 ரன்னிலும், பால்சந்தர் அனிருத் 4 ரன்னிலும், சதுர்வேத் 9 ரன்னிலும், தோதாத்ரி 0 ரன்னிலும், மோகன் அபிநவ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் 21 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

    இதனால் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.5 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி ஜெகதீசன் 42 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 44 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 51 ரன்கள் அடித்தார். 



    மதுரை பாந்தர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வர் 3.5 ஓவரில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். லோகேஷ் ராஜ் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதைத்தொடர்ந்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி சேசிங் செய்ய தொடங்கியது, அந்த அணியில் அருண் கார்த்திக் மற்றும் தலைவன் சற்குணம் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    தலைவன் சற்குணம், ரஹேஜா மற்றும் ரோகித் ஆகியோர்  ரன் ஏதும் அடிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து தொடக்கத்திலேயே பெரும் அதிர்ச்சியளித்தனர்.

    இருப்பினும், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அருண் மற்றும் ஷிஜித் சந்திரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், 17.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கள் இழந்து 119 ரன்களை குவித்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் திண்டுக்கள் அணியை   வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

    அந்த அணியில் அருண் கார்த்திக் 71 ரன்களுடனும், சந்திரன் 38 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். திண்டுக்கள் அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

    இதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடம் பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக கிடைத்துள்ளது.
    #TNPL2018
    Next Story
    ×