search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு (Sports)

    டி.என்.பி.எல். இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் மோதல்
    X

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் பாபா அபராஜித் - கோவை கேப்டன் ஷாருக்கான்

    டி.என்.பி.எல். இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் மோதல்

    • 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    தமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமின்றி கிராமத்து அளவிலும் திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து, அவர்களை உலகறியச் செய்வதற்கான வாய்ப்பினை வழங்கும் ஒரு அடித்தளமாக தமிழ்நாடு பிரிமீயர் லீக் என்படும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடங்கப்பட்டது.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். கிரிக்கெட் 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதுவரை 7 சீசன் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றி வெற்றிகரமான அணியாக விளங்குகிறது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகளும் பட்டம் வென்றுள்ளன. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கும் வீரர்களுக்கு ஐ.பி.எல்.-ல் ஆடும் அதிர்ஷ்டம் அடிப்பதால் இளம் வீரர்கள் எப்போதும் தங்களது முழு திறமையை வெளிக்காட்ட முயற்சிப்பார்கள். வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, ஆல்-ரவுண்டர் ஷாருக்கான் உள்ளிட்டோர் டி.என்.பி.எல்.-ல் அபாரமாக ஆடியதாலேயே ஐ.பி.எல். ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. சேலம், நெல்லை, கோவை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய 5 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். 2-வது தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி மட்டும் சென்னை சேப்பாக்கத்தில் அரங்கேறும். இறுதிப்போட்டி ஆகஸ்டு 4-ம்தேதி நடக்கிறது.

    இந்த சீசனில் ஜெகதீசன், பாபா அபராஜித், பிரதோஷ் ரஞ்சன் பால் (3 பேரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்), ஷாருக்கான், சாய் சுதர்சன், எம்.சித்தார்த் (கோவை), வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின், அலெக்சாண்டர் (மதுரை), கடந்த ஆண்டில் ஒரு சதத்துடன் 385 ரன் குவித்து முதலிடம் பிடித்தவரான அஜிதேஷ், அருண் கார்த்திக் (நெல்லை), டெஸ்டில் 516 விக்கெட் வீழ்த்திய சாதனையாளரான சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், ஐ.பி.எல்.-ல் கொல்கத்தா அணிக்காக சுழலில் மிரட்டிய வருண் சக்ரவர்த்தி, பாபா இந்திரஜித், சந்தீப் வாரியர் (4 பேரும் திண்டுக்கல்), சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவசாலிகளான விஜய் சங்கர், டி.நடராஜன், சாய் கிஷோர் (3 பேரும் திருப்பூர்), ஹரிஷ்குமார் (சேலம்), ரூ,22 லட்சத்துக்கு ஏலம் போன ஆல்-ரவுண்டர் சஞ்சய் யாதவ், அதிசயராஜ் டேவிட்சன் (திருச்சி) உள்ளிட்ட நட்சத்திர வீரர்களின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஜிம்பாப்வே தொடரில் விளையாட சென்று இருப்பதால் அவர்கள் டி என் பி எல் -ல் தொடக்ககட்ட ஆட்டங்களில் விளையாட மாட்டார்கள்.

    நடப்பு டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதல்சுற்று ஆட்டங்கள் சேலத்தில் நடக்கிறது. சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்சும், முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னை அணியில் கேப்டன் பாபா அபராஜித், ஜெகதீசன், ரஞ்சன் பால், பெரியசாமி, ரஹில் ஷா, ஷாஜகான், அபிஷேக் தன்வர், சிலம்பரசன் ஆகியோர் நன்றாக ஆடக்கூடியவர்கள். இதேபோல் கோவை அணிக்கு கேப்டன் ஷாருக்கான், முகிலேஷ், தாமரைக் கண்ணன், சித்தார்த், சுரேஷ்குமார், முகமது உள்ளிட்டோர் வலு சேர்க்கிறார்கள்.

    இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் சேப்பாக் சூப்பர் கில்லீசும், 3-ல் கோவையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. ஏறக்குறைய சரிசம பலத்துடன் வெற்றியோடு தொடங்கும் உத்வேகத்துடன் மல்லுக்கட்டுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    சேப்பாக் கேப்டன் பாபா அபராஜித் நிருபர்களிடம் கூறுகையில், 'இந்த ஆண்டு சேப்பாக் அணிக்கு கேப்டனாக செயல்படவுள்ளது எனக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். அதுவும் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரு அணியை வழிநடத்துவது மிகப்பெரிய பொறுப்பாக உணர்கிறேன். எங்கள் அணியில் அனுபவமிக்க வீரர்களும், பல கவனிக்கத்தக்க இளம் வீரர்களும் நிறைந்துள்ளனர். இந்த சீசன் நன்றாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த முறை எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வெல்லும்' என்றார்.

    கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் அளித்த பேட்டியில், 'இந்த போட்டி தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கிறோம். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மட்டுமின்றி எல்லா அணிகளும் திறமையான அணிகள் தான். இந்த சீசன் முழுவதும் நன்றாக விளையாட வேண்டும். கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது போல் இந்த முறையும் வெல்வோம் என்று நம்பிக்கை இருக்கிறது' என்று தெரிவித்தார்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ,1.7 கோடியாகும். இதில் மகுடம் சூடும் அணிக்கு ரூ,50 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: பாபா அபராஜித் (கேப்டன்), ஆந்த்ரே சித்தார்த், வி.அருணாசலம், அஸ்வின் கிறிஸ்ட், டேரில் பெராரியோ, அய்யப்பன், என்.ஜெகதீசன், ஜிதேந்திர குமார், மதன்குமார், ஜி.பெரியசாமி, பிரேம்குமார், பிரதோஷ் ரஞ்சன் பால், சந்தோஷ்குமார், ஆர்.சதீஷ், ரஹில் ஷா, ஷாஜகான், சிபி, எம்.சிலம்பரசன், பி.சூர்யா, அபிஷேக் தன்வர்.

    கோவை கிங்ஸ்: ஷாருக்கான் (கேப்டன்), சுரேஷ்குமார், சுஜய், அதீக் ரகுமான், திவாகர், கவுதம் தாமரைக் கண்ணன், ஹேம் சரண், மீரான் ரஹில் ரகுமான், முகிலேஷ், ஓம் பிரகாஷ், ராம் அரவிந்த், சாய் சுதர்சன், எம்.சித்தார்த், ஜதாவேத் சுப்பிரமணியன், வித்யூத், ஜி.வி.விக்னேஷ், யுதீஸ்வரன், மணிஷ், சச்சின்.

    இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×