search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    5 தலைமுறை கண்ட 104 வயது மூதாட்டி மரணம்- அதிர்ச்சியில் 102 வயது தம்பி பலி
    X

    5 தலைமுறை கண்ட 104 வயது மூதாட்டி மரணம்- அதிர்ச்சியில் 102 வயது தம்பி பலி

    • 5 தலைமுறை கண்ட வள்ளியம்மாளுக்கு பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளுபேத்திகள் என 65 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
    • ஒரே நாளில் அக்காள், தம்பி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சி ஜனதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு கவுண்டர். இவருடைய மனைவி வள்ளியம்மாள் (வயது 104).

    இவருக்கு தனபால் (80), பழனி (78) ஆகிய 2 மகன்களும், யசோதம்மாள் (82), சரோஜம்மாள் (80), லட்சுமியம்மாள் (78), ஜெகதமம்மாள் (76), ஈஸ்வரியம்மாள் (74) ஆகிய 5 மகள்கள் உள்ளனர்.

    வள்ளியம்மாளின் கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இதையடுத்து அவர் கூலிவேலை செய்து தனியாக வசித்து வந்தார். பின்னர் வயது முதிர்வு காரணமாக அவர் தனது மூத்த மகன் தனபால் வீட்டில் வசித்தார்.

    5 தலைமுறை கண்ட வள்ளியம்மாளுக்கு பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளுபேத்திகள் என 65 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.

    மூதாட்டி உடலில் எந்த பிரச்சினையும் இல்லாமல் தனது வேலைகளை தானே செய்து வந்தார். இதற்கிடையே நேற்று வள்ளியம்மாளுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் இறந்தார். அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர்.

    அப்போது வள்ளியம்மாளின் தம்பி துரைசாமி (102) அங்கு வந்தார். இறந்துபோன அக்காள் வள்ளியம்மாளின் உடலை பார்த்து கதறி அழுதார். சிறிது நேரத்திலேயே அக்காள் இறந்த அதிர்ச்சியில் இருந்த துரைசாமியும் திடீரென சரிந்து விழுந்து இறந்தார்.

    துரைசாமிக்கு பழனி (68), பாலாஜி (59), அண்ணாமலை (57), சுந்தரேசன் (55) ஆகிய 4 மகன்களும், எல்லம்மாள் (70), சுமதி (68) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

    5 தலைமுறை கண்ட துரைசாமிக்கும் பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளுபேத்திகள் என 57 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.

    வயது முதிர்வு காரணமாக துரைசாமி தனது மனைவி கண்ணம்மாள் (89) உடன் தனது மகன், செட்டியப்பனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை வீட்டில் வசித்து வந்தார்.

    வள்ளியம்மாள் மற்றும் துரைசாமி ஆகியோர் மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.

    100 ஆண்டுகளை கடந்து ஒரே கிராமத்தில் அக்காள் வள்ளியம்மாள், தம்பி துரைசாமி ஆகியோர் உடலில் எந்த நோய் பிரச்சினையும் இல்லாமல் இருந்ததை அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நினைவு கூர்ந்தனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    ஒரே நாளில் அக்காள், தம்பி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×