search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணத்தில் கியாஸ் சிலிண்டரை தலையில் போட்டு மனைவி படுகொலை
    X

    கும்பகோணத்தில் கியாஸ் சிலிண்டரை தலையில் போட்டு மனைவி படுகொலை

    கும்பகோணத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி தலையில் கியாஸ் சிலிண்டரை போட்டு கணவர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாக்கோட்டை மெயின்ரோட்டில் வசித்து வருபவர் பசீர் அகமது (வயது 42). இவரது மனைவி பாத்திமா (33). பசீர் அகமது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    பாத்திமாவின் சொந்த ஊர் சென்னை திருவான்மியூர் ஆகும். பாத்திமா ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். பின்னர் முதல் கணவரை பிரிந்து வாழ்ந்த அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பசீர் அகமதுவை திருமணம் செய்து கொண்டார். பசீர் அகமதுவுக்கு பாத்திமா 3-வது மனைவி ஆவார்.

    பாத்திமா வீட்டிலேயே டெய்லர் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து பசீர் அகமது , கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார். ஊருக்கு வந்த அவர் மதுகுடித்து விட்டு மனைவி பாத்திமாவிடம் தகராறு செய்து வந்தார். இதேபோல் அடிக்கடி அவர் தகராறு செய்ததால் பாத்திமா பீவி நாச்சியார் கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றார்.

    இதையடுத்து நேற்றுமுன் தினம் நாச்சியார் கோவிலுக்கு சென்ற பசீர் அகமது பேச்சுவார்த்தை நடத்தி மனைவியை குடும்பம் நடத்த சாக்கோட்டைக்கு அழைத்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவில் திடீரென கணவன்- மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு வந்தது. இதையடுத்து இருவரும் ஒருவரையொருவர் சத்தம் போட்டப்படி இருந்தனர். பிறகு பசீர் அகமது அங்கிருந்து சென்றார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் பாத்திமா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பசீர் அகமது திடீரென வீட்டின் சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை தூக்கினார். அதை அப்படியே தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் ‘டமார்’ என போட்டார். இதில் பாத்திமா மூளை சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    மனைவி இறந்து விட்டார் என்பதை அறிந்த பசீர் அகமது அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    பாத்திமா கொலை செய்யப்பட்ட சம்பவம் நாச்சியார் கோவில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய கவுரி மற்றும் போலீசார் விரைந்து வந்து பாத்திமா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே மனைவி தலையில் சிலிண்டர் போட்டு கொலை செய்த பசீர் அகமது இன்று காலை நாச்சியார் கோவில் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    Next Story
    ×