search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கமல்ஹாசன் நாளை சுற்றுப்பயணம்
    X

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கமல்ஹாசன் நாளை சுற்றுப்பயணம்

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீனவர்கள், பொதுமக்களை சந்திக்கிறார்.
    தூத்துக்குடி:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் குமரி மாவட்டம் நாகர்கோவில் சென்றார். இன்று (புதன் கிழமை) குமரி மாவட்டத்தில் பகுதிகளுக்கு சென்று தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்தார். இரவு நாகர்கோவிலில் தங்குகிறார்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டத்தில் காவல்கிணறு, வள்ளியூர், திசையன்விளை, உவரி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.

    பின்னர் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீனவர்கள், பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்கிறார். மக்கள் குறை கேட்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் தலைவர் கமல்ஹாசனுக்கு நாளை காலை 10 மணிக்கு மாவட்ட எல்லையான மணப்பாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    தொடர்ந்து காலை 10.15மணிக்கு மணப்பாடு மீனவர் மக்கள் சந்திப்பும், 11 மணிக்கு திருச்செந்தூரில் பொதுக்கூட்டமும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து, மாலை 4 மணிக்கு காயல்பட்டணத்திலும், 4.15 மணிக்கு ஆறுமுகநேரியிலும், 4.45 மணிக்கு புன்னக்காயலிலும், 5.10 மணிக்கு ஏரலிலும், 5.30 மணிக்கு பண்டாரவிளையிலும் மக்கள் சந்திப்பு நடக்கிறது.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் சந்திப்பு பகுதியில் நடைபெறும் மக்கள் நீதிமய்யம் பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மக்கள் நீதிமய்யத்தினர் செய்து வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டநிகழ்ச்சியை நிறைவு செய்து விட்டு, அன்று இரவே நடிகர் கமல்ஹாசன் நெல்லை வருகிறார். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நெல்லை நகரில் பாளை தெற்கு பஜார், மேலப்பாளையம் சந்தை விலக்கு, கொக்கிர குளம், நெல்லை சந்திப்பு, நெல்லை டவுன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.

    பின்பு ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன் கோவில் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செல்கிறார். 18-ந்தேதி பிற்பகல் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.

    Next Story
    ×