search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் கூடுதலாக 15 நாட்கள் வகுப்பு நடத்தப்படும்: செங்கோட்டையன் பேட்டி
    X

    இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் கூடுதலாக 15 நாட்கள் வகுப்பு நடத்தப்படும்: செங்கோட்டையன் பேட்டி

    புதிய பாடத்திட்டத்தின்படி இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் கூடுதலாக 15 நாட்கள் வகுப்பு நடத்தப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    கோபி:

    தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபி அருகே உள்ள கொடிவேரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழக அரசு அறிவித்தபடி ஜூன் 1-ந்தேதி முதல் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். இந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் சிறந்த முறையில் படைக்கப்பட்டு பல வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை பார்க்கும் போதே மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டும். அடுத்த மாதம் அரசு அறிவித்தபடி அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    பிளஸ்-2 தேர்வு முடிந்து முடிவுகளும் நல்ல முறையில் அறிவிக்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட கல்வித்துறை தயார் நிலையில் உள்ளது. வருகிற 23-ந்தேதி காலை 9 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு வெளியிடப்படும்.

    புதிய பாடத்திட்டம் ஆண்டுக்கு 185 நாட்கள் நடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 170 நாட்கள்தான் பாடம் நடத்தப்பட்டது. தற்போது கூடுதலாக 15 நாள் வகுப்புகள் நடத்தப்படும்.

    அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க செப்டம்பர் மாதம் வரை சேர்க்கை நீடிக்கப்பட்டுள்ளது.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் வெற்றிபெறும் மாணவ- மாணவிகளுக்கு இப்போதே எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கல்விதுறை மூலம் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், புதிய பாடத்திட்டங்களையும் அரசு அறிவித்துள்ளது.

    எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக கல்விதுறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    இதுவரை பிளஸ்-2 பாடத்தில் 6 பாடங்களுக்கு தலா 200 மதிப்பெண்கள் மூலம் 1200 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த மதிப்பெண்கள் முறை இந்த ஆண்டுடன் முடிவடைய உள்ளதாக கல்விதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதன்படி இனி வரும் கல்வி ஆண்டு முதல் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்கள் மட்டும் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என கல்விதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறையை செயல்படுத்த கல்விதுறை முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

    Next Story
    ×