search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்றால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
    X

    தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்றால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

    தமிழகத்தில் வீசத் தொடங்கிய தென்மேற்கு பருவ காற்றால் காற்றாலை மின் உற்பத்தி திறன் உயர்ந்து 4 ஆயிரம் மெகாவாட்டை எட்டியது.
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, முப்பந்தல், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி, செங்கோட்டை மற்றும் தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டம் உடுமலைபேட்டை பகுதிகளில் ஏராளமான காற்றாலைகள் உள்ளன.

    காற்றாலைகள் இயங்கத் தொடங்கினால் கணிசமான மின்உற்பத்தியாகும். குறிப்பாக தென்மேற்கு பருவ காற்று வீசும் காலங்களில் காற்றாலைகள் கூடுதல் மின் உற்பத்தியில் ஈடுபடும்.

    ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள் வரை தென்மேற்கு பருவ காற்று வீசும். இந்த காலங்களில் தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் கூடுதல் மின்சாரம் கிடைக்கும்.

    அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவ காற்று முன்கூட்டியே வீசத் தொடங்கியதால் காற்றாலை மின் உற்பத்தியும் தொடங்கி விட்டது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, முப்பந்தல் பகுதிகளில் காற்றாலைகள் முழுவீச்சில் செயல்பட தொடங்கி உள்ளன.

    கடந்த சில மாதங்களாக 250 முதல் 350 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்த காற்றாலைகள் இப்போது 3 முதல் 5 மடங்கு அதிகமாக மின்சார உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.

    இதுபற்றி காற்றாலை என்ஜினீயர்கள் கூறியதாவது:-

    பொதுவாக தென்மேற்கு பருவகாற்று காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கடந்த 26-ந்தேதி காற்றாலைகள் மூலம் சுமார் 100 மெகாவாட் மின்சாரமே கிடைத்தது. அதன்பிறகு காற்றின் வேகம் அதிகரித்ததால் கடந்த 27, 28-ந்தேதிகளில் 2050 மெகாவாட் முதல் 2100 மெகா வாட்டாக உயர்ந்தது.

    நேற்றும், நேற்று முன்தினமும் காற்றின் வேகம் மேலும் அதிகரித்ததால் உற்பத்தி திறன் உயர்ந்து 4 ஆயிரம் மெகாவாட்டை எட்டியது.



    ஆரல்வாய்மொழி பகுதியில் 600 மெகாவாட்டும், நெல்லை, தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் 1500 மெகாவாட்டும், கோவை மாவட்டத்தில் 1250 மெகாவாட்டும் என தமிழகம் முழுவதும் உள்ள காற்றாலைகள் மூலம் இந்த மின்சாரம் கிடைத்தது.

    இது அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். செப்டம்பர் மாதம் வரை நமக்கு காற்றாலைகள் மூலம் மின்சாரம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×