search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடோனில் தீ கொழுந்து விட்டு எரியும் காட்சி.
    X
    குடோனில் தீ கொழுந்து விட்டு எரியும் காட்சி.

    ராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    ராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் அதனை அணைக்க போராடி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் ராம்ஜி. இவர் பிளாஸ்டிக் கவர் மற்றும் பைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவருக்கு சொந்தமாக ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் 7-க்கும் மேற்பட்ட ஆலைகள் உள்ளன.

    இந்த ஆலைகளின் தலைமை அலுவலகம் மற்றும் பெரிய ஆலை, குடோன் போன்றவை ராஜபாளையத்தை அடுத்த முறம்பு மாசிலாபுரத்தில் உள்ளது. இங்கு பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வைக்க தனியாக இடம் உள்ளது.

    இன்று அதிகாலை கழிவுகள் கொட்டப்பட்ட பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ, அருகில் இருந்த குடோனுக்கும் பரவியது.

    இதனால் அங்கிருந்த பிளாஸ்டிக் பைகள், கவர்கள் உள்ளிட்ட பொருட்களில் தீப்பற்றியது. குடோனில் அதிக அளவு பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததால் தீ மளமளவென பரவியது.

    தீயின் காரணமாக அந்தப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. பனை மர உயரத்திற்கு கொழுந்து விட்டு எரிந்த தீ பல மைல் தூரத்தில் இருந்து பார்ப்பவர்களையும் பீதிக்கு ஆளாக்கியது.

    தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. அதில் வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது. ஆலையின் அருகில் தீயணைப்பு வீரர்களால் நெருங்க முடியவில்லை.

    இருப்பினும் தீயை அணைக்கும் பணியில் அவர்கள் தீவிரம் காட்டினர். அருகில் உள்ள மற்ற தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் அங்கு விரைந்தனர்.

    தீ விபத்துக்குள்ளான குடோனில், ஏற்றுமதிக்கான பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததால், பல கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகே தீ விபத்துக்கான காரணம் தெரியவரும்.
    Next Story
    ×