search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக எக்கு கோட்டை, எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
    X

    அதிமுக எக்கு கோட்டை, எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

    அ.தி.மு.க. எக்கு கோட்டை. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் பேசினர். #edappadipalanisamy #opanneerselvam

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் கட்ட பரவையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு பூமிபூஜை இன்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

    1½ கோடி தொண்டர்கள் நிறைந்த மாபெரும் இயக்கம் அ.தி.மு.க. இந்த இயக்கத்தை வலுவோடும், பொலிவோடும் நடத்தி இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சியாக மாற்றி காட்டியவர் புரட்சித்தலைவி அம்மா.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி அலுவலகம் கட்ட அம்மா உத்தரவிட்டார். அதன்படி பல்வேறு மாவட்டங்களில் கட்சி அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த நேரத்தில்தான் அம்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    தற்போது அம்மாவின் லட்சிய கனவை நிறைவேற்றும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி பொதுமக்களும் இங்கு தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம். அவர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படும். இந்த இயக்கம் ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். இதை யாராலும் அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    தமிழ் சமுதாயத்திற்காக உழைத்தவர் தந்தை பெரியார். தமிழர்களுக்காக வாழ்ந்தவர் அறிஞர் அண்ணா. ஏழைகளுக்கு பாடு பட்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இவர்களின் கொள்கைகளை, லட்சியங்களை செயல்வடிவம் ஆக்கியவர் புரட்சித்தலைவி அம்மா.

    அ.தி.மு.க. தொடங்கும் போது 16 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் 1½ கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாற்றி காட்டியவர் அம்மா. எனவே அவரது பாதையில் தமிழக மக்களுக்கு நல்லாட்சி நடத்தி வருகிறோம். இந்த இயக்கத்தை தொண்டர்கள் ஆலமரம்போல காத்து வருகிறார்கள்.

    எனவே எக்கு கோட்டையான அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், பரவை ராஜா, திரவியம், கிரம்மர் சுரேஷ், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், வில்லாபுரம் ரமேஷ், அன்புச்செழியன், சோலைராஜா, கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×