search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்தது - 24வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடை
    X

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்தது - 24வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடை

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்த போதிலும் அதிகாரிகள் எந்தவித உத்தரவும் பிறப்பிக்காததால் தொடர்ந்து இன்று 24-வது நாளாக குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதிக்கப்பட்டது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் போன்ற அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டது.

    இதனால் ஒகேனக்கல்லுக்கு அதிகரித்து வந்த நீர்வரத்து படிபடியாக குறைந்து நேற்று முன்தினம் 26 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நேற்று நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 19 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 17 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    நீர்வரத்து 20 ஆயிரத்துக்கும் குறைவாக வந்து கொண்டிருப்பதால் மெயினருவி, ஐந்தருவி சினிபால்ஸ் ஆகிய இடங்களில் தண்ணீர் சீராக பாய்ந்தது.

    குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி கரையோரம் பகுதிகளில் இன்று முதல் குளிப்பதற்கான தடை நீக்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். சில சுற்றுலா பயணிகள் கேட்டின் ஏறி குதித்து மெயினருவியில் குளித்தனர்.

    நீர்வரத்து அதிகமான காலங்களில் குளிக்கவும், பரிசலில் செல்ல தொடர்ந்து 23-வது நாளாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்த போதிலும் அதிகாரிகள் எந்தவித உத்தரவும் பிறப்பிக்காததால் தொடர்ந்து இன்று 24-வது நாளாக குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதிக்கப்பட்டது.

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து இன்று 17 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இருந்தபோதிலும் ஒகேனக்கல் மெயினருவில் பாதுகாப்பு வளையங்கள் வெள்ளபெருக்கின்போது சிதலமடைந்து காணப்படுகிறது. எனவே மெயினருவில் குளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது. இதுகுறித்து இன்று சப்-கலெக்டர் ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வுக்கு பிறகுதான் ஒகேனக்கல்லில் குளிக்க தடை நீக்க முடியும். அதுவரை குளிக்க தடை தொடரும். இதேபோல் பரிசல் இயக்க அதிகபட்சமாக 5 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருக்க வேண்டும். தற்போது 17 ஆயிரம் கனஅடி நீர்வரத்து உள்ளதால் இன்றும் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மாற்று ஏற்பாடு கோரி பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மாற்று வழி இயக்குவது குறித்து பேரிடர் மேலாண்மை துறை இதுவரை எந்தவித தகவலும், சான்றிதழும் எங்களிடம் சமர்ப்பிக்கவில்லை.

    இதுகுறித்து உயர்குழு அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளோம். அதுவரை நீர்வரத்து அதிகமாகும் காலங்களில் ஒகேனக்கல்லில் மாற்றுவழியில் பரிசல் இயக்க அனுமதிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Hogenakkal #Cauvery
    Next Story
    ×