search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரிமங்கலம் அருகே தனியார் பள்ளி பெண் ஊழியர் மர்ம மரணம்
    X

    காரிமங்கலம் அருகே தனியார் பள்ளி பெண் ஊழியர் மர்ம மரணம்

    காரிமங்கலம் அருகே தனியார் பள்ளியில் ஊழியராக பணியாற்றிய இளம்பெண் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பையப்பட்டி யானூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன்-அம்பிகா தம்பதியினரின் மகன் பிரசாந்த். இவர் பஞ்சு மெத்தை விற்பனை செய்யும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் வெள்ளையன் கொட்டாயூர் பகுதியைச் சேர்ந்த சகாதேவன்- நாகவள்ளி தம்பதியினரின் மகள் முத்துலட்சுமிக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. முத்துலட்சுமி தனியார் பள்ளியில் அக்கவுண்டரராக பணியாற்றி வந்தார்.

    பிரசாந்த்-முத்துலட்சுமி இருவரும் திருமணம் நடந்த பிறகு சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு இருதேவ் என்ற ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று மாலை மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பிரசாந்தின் தாயார் அம்பிகா இதனை தட்டிகேட்டார். இதில் முத்துலட்சுமியை திட்டியதாக தெரியவந்தது. இதனால் முத்துலட்சுமி மனமுடைந்து காணப்பட்ட அவர் தனது அறையில் கதவை உள்தாழிட்டு கொண்டு தூங்க சென்றார். 

    இன்று காலை நீண்ட நேரமாகியும் முத்துலட்சுமி அறையின் கதவை திறக்கவில்லை. இதனால் பதறிப்போன கணவர் பிரசாந்த், மாமியார் அம்பிகா ஆகியோர் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் முத்து லட்சுமி கதவு திறக்கவில்லை. உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மின் விசிறியில் முத்துலட்சுமி தூக்கில் பிணமாக இருப்பதை கண்டு கதறி அழுதனர். 

    முத்துலட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இன்று அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று   பிரசாந்த் மற்றும் அவரது பெற்றோர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் பிரசாந்த் வீட்டிற்கு திரண்டு வந்தனர். அப்போது முத்துலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். அவரது காது அறுந்த நிலையிலும், அதில் தோடு காணாமலும் இருந்தது. இதனால் முத்துலட்சுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கருதிய அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அப்போது தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு காரணமான பிரசாந்த் மற்றும் அவரது தந்தை, தாய் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் கொடுத்தனர். 

    இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நகரமாட்டோம் என்று கூறி முத்துலட்சுமியின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. 

    இதுகுறித்து முத்துலட்சுமியின் உறவினர் ஒருவர் கூறியதாவது:

    முத்துலட்சுமியிடம் பேசுவதற்காக நேற்று இரவு அவரது தாயார் செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இன்று காலை முத்து லட்சுமி தூக்கில் பிணமாக கிடக்கிறார் என்று அவரது கணவர் பிரசாந்த்  தகவல் கூறினார். ஆனால் நாங்கள் வந்து முத்துலட்சுமியின் பார்த்தபோது அவரது காது அறுந்த நிலையில் இருந்தது. நேற்று இரவே முத்துலட்சுமியை அவரது மாமியாரும், கணவரும் சேர்ந்து அடித்து கொன்றுவிட்டு தூக்கில் தொங்கி விட்டு எங்களிடம் நாடகமாடுகின்றனர். அவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினால்தான் உண்மை நிலவிவரம் தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் முத்துலட்சுமியின் கணவர் பிரசாந்த் மற்றும் அவரது தாயார் அம்பிகா, மாமனார் முருகேசன் ஆகிய 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துலட்சுமி குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை அடித்து கொன்றுவிட்டு தூக்கில் தொங்கவிட்டு கணவரும், மாமியாரும் நாடகமாடுகின்றனரா? என்று போலீசார் விசாரணைக்கு பிறகுதான் தெரியவரும். 

    திருமணமாகி 2 வருடங்கள் ஆனநிலையில் முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.    
    Next Story
    ×