search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
    X

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #SouthDistricts
    சென்னை:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் நாகையில் கரையை கடந்தபோது 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    அதன்பின் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் பரவலாக மழை பெய்தது.

    வங்கக் கடலில் 22-ந்தேதி உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா, தமிழகத்தின் மேட்டூர் அணைப் பகுதியில் நிலை கொண்டிருந்தது.

    அது காற்றின் சுழற்சியால் தமிழகத்தில் நீடித்துக் கொண்டிருந்ததால் இன்று வரை தமிழகத்தில் மழை இல்லாத வறண்ட வானிலையே காணப்பட்டது.

    இந்த நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



    இது தொடர்பாக வானிலை ஆய்வுமைய அதிகாரி கூறியதாவது:-

    இந்திய பெருங்கடல் மத்தியரேகை மற்றும் அதனை யொட்டியுள்ள வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (29-ந்தேதி) ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.



    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Rain #SouthDistricts

    Next Story
    ×