search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு ரூ.2 லட்சம் இன்சூரன்சு
    X

    மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு ரூ.2 லட்சம் இன்சூரன்சு

    மதுரையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு ரூ.2 லட்சம் இன்சூரன்சு வசதி செய்யப்படுகிறது. #Jallikattu

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு திருவிழா மதுரை மாவட்டத்தில் நாளை முதல் தொடங்குகிறது.

    முதல் ஜல்லிக்கட்டு போட்டி நாளை மதுரை அவனியாபுரத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க 700-க்கும் மேற்பட்ட காளைகள் தயாராக உள்ளன. 600 மாடுபிடி வீரர்களும் இதற்காக முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுள்ளனர்.

    நாளை மறுநாள் (புதன் கிழமை) மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

    இந்த ஜல்லிக்கெட்டில் பங்கேற்க 880 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 850 பேர் உடல் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஜல்லிக்கட்டில் சுமார் 900 காளைகள் பங்கேற்கிறது.

    அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக மதுரை மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    மதுரை அவனியாபுரத்தில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழு முன்னிலையில் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் நடராஜன், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    பார்வையாளர்களுக்கென தனி கேலரி அமைக்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் தங்க காசுகள், வெள்ளி பொருட்கள், கார், மோட்டார் சைக்கிள், பாத்திரங்கள், பீரோ, கட்டில், டி.வி., சைக்கிள்கள் உள்ளிட்ட விலைஉயர்ந்த பரிசு பொருட்களும் காத்திருக்கின்றன.

    இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு முதன் முறையாக இந்த ஆண்டு முதல் இன்சூரன்சு வசதியை மதுரை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

    பிரதான்மந்திரி சுரக்ஷா பீமாயோஜனா திட்டத்தின் கீழ் ரூ.12 செலுத்தி ரூ.2 லட்சம் இன்சூரன்சு பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் இந்த இன்சூரன்சு வசதி செய்யப்படுகிறது.இதை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

    மேலும் வங்கி கணக்குகள் இல்லாத மாடுபிடி வீரர்களுக்கு இன்று வங்கி கணக்குகளையும் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் இன்சூரன்சு செய்யப்படுகிறது. பார்வையாளர்கள் அவரவர் பாதுகாப்புக்கு ரூ.330 இன்சூரன்சு செய்யலாம். படுகாயம் மற்றும் மரணம் ஏற்பட்டால் அவர்களது குடும்பத்திற்கு இந்த இன்சூரன்சு வசதி பெரும் உதவியாக இருக்கும்.

    இந்த மாடுபிடி வீரர்கள் தமிழகம் முழுவதும் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றாலும் இந்த இன்சூரன்சு மூலம் உதவி பெறலாம். மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆயிரக்கணக்கானோர் திரளுவதால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். #Jallikattu

    Next Story
    ×