search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா, அதிமுக ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
    X

    பா.ஜனதா, அதிமுக ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாட்டுக்கு விடிவு காலம் பிறக்க பா.ஜனதா மற்றும் அதிமுக ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஒன்றியம் தணக்கன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்திலும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    மம்தா பானர்ஜி போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றார். அவர் மேற்கு வங்கத்தின் முதல்வர் மற்றும் இரும்புப் பெண்மணி என்று பெயர் பெற்றவர். நானும் அவர்கள் 15 நாட்களுக்கு முன்பு நடத்திய மாநாட்டிற்கு சென்றுவிட்டுதான் வந்தேன். அவ்வளவு செல்வாக்குள்ள ஒரு முதலமைச்சர் அவர். அங்கு பி.ஜே.பி உள்ளே நுழைய முடியாது. அதனால் மோடிக்கு ஆத்திரம் வந்து அந்த அம்மையாரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, பல அக்கிரமங்களை செய்து கொண்டிருக்கின்றார்.

    அங்கு ஒரு சம்பவம் நடந்துள்ள காரணத்தினால் அதற்காக தர்ணா போராட்டத்தை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி துவங்கியிருக்கிறார்.

    மோடி இப்பொழுது பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு ஒரு பொய்யைச் சொல்லி இருக்கின்றார். என்ன பொய் என்று கேட்டால், விவசாயிகளுடைய வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்தப்போகிறேன் என்று புதிதாக ஒரு கதை விட்டிருக்கின்றார். விவசாயினுடைய கோவணத்தை அவிழ்த்து விட்டு ஓடவிட்டவர்கள், மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள். அது உங்களுக்கு தெரியும்.

    மோடி ஒரு பம்மாத்து வேலை செய்யத் துவங்கியிருக்கின்றார். அவரே சொல்லி இருக்கின்றார் இந்த பட்ஜெட் என்பது ஒரு ட்ரெய்லர். இப்பொழுதுதான் ட்ரெய்லர் வந்திருக்கின்றதாம். ட்ரெய்லர் என்பது பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு ட்ரெய்லர் வெளியிடுவார்கள். அதைப்பார்த்து விட்டு அனைவரும் சென்று சினிமா பார்ப்பார்கள்.

    அதுபோல் சொல்கின்றார் மோடி. எனவே, ஒரு ட்ரெய்லர் தயாரிக்கவே 5 வருடம் ஆகிறது என்றால், மக்களுக்கான திட்டங்கள் தீட்டுவதற்கு, அதனை செயல்படுத்துவதற்கு எத்தனை காலம் ஆகும் என்று நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும் என்பதைத்தான் நான் இங்கு குறிப்பிட்டுக்காட்ட விரும்புகின்றேன். ஆகவே, நாடே இன்றைக்கு ஒரு சுடுகாடாக மாறிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது.

    மத்தியில் அப்படி ஒரு ஆட்சி. மாநிலத்தில் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும்.

    அதற்காகத்தான் நாங்கள் உங்கள் எல்லோரையும் தேடி வந்திருக்கிறோம். நாங்கள் தேடிவந்து இருக்கின்றோம் என்று சொல்வதை விட, இந்த இரு கட்சிகளையும் அப்புறப்படுத்த நாங்கள் தயார் என்று நீங்கள் எங்களைத் தேடி வந்து இருக்கின்றீர்கள், அதுதான் உண்மை.

    தி.மு.க. தயவு இல்லாமல் யாரும் மத்தியிலே ஆட்சி நடத்த முடியாது. ஆகவே, விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வரப்போகிறது. அதோடு சேர்த்து 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரப்போகிறது. எங்களுக்கு எல்லாம் என்ன உணர்வு என்றால், ஏன் எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வு என்ன என்று கேட்டீர்கள் என்றால், நாடாளுமன்றத் தேர்தல், 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகிய வற்றோடு சேர்த்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வந்தால் நாடு நன்றாக இருக்கும் என்ற உணர்வு தமிழ்நாட்டு மக்களுக்கு வந்திருக்கிறது. அப்படி வந்தால், எடப்பாடி அரசையும் ஒழித்து விடலாம், மோடி அரசையும் வீழ்த்தி விடலாம்.

    இந்த இரண்டு கட்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டால் நிச்சயமாக உறுதியாக சொல்கின்றேன். நாட்டிற்கும், தமிழகத்திற்கும் விடிவு காலம் பிறக்கும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin
    Next Story
    ×