search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆடிப்பெருக்கு விழா: பவானி கூடுதுறை-அம்மாபேட்டை காவிரி கரையில் ஷவர் அமைத்து நீராடிய பக்தர்கள்
    X

    ஆடிப்பெருக்கு விழா: பவானி கூடுதுறை-அம்மாபேட்டை காவிரி கரையில் ஷவர் அமைத்து நீராடிய பக்தர்கள்

    • பவானி காவிரி கரை பகுதிகளில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • கூடுதுறை அழகிய தீவு போல் காட்சியளிக்கிறது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக பவானி சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருவது வழக்கம்.

    அதேபோல் ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து வழிபாடு மேற்கொள்வதும், ஆடி 18 அன்று தம்பதியர் புதிய தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும் காவிரி தாயை வழிபாடு மேற்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவு நிரம்பிய நிலையில் உபரி நீராக அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பவானி காவிரி கரை பகுதிகளில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஒடுகிறது. பவானி கூடுதுறை இரட்டை விநாயகர் சன்னதியின் மேல் படிக்கட்டு முதல் தண்ணீர் தொட்டு செல்கிறது. இதனால் கூடுதுறை அழகிய தீவு போல் காட்சியளிக்கிறது.

    இதையடுத்து பக்தர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் மூலம் காவிரி ஆற்றுக்கு பக்தர்கள் செல்லாத வகையில் தகர செட் அமைத்து அடைக்கப்பட்டு பாதுகாப்பு செய்து உள்ளனர். அதேபோல் ஆண், பெண் என பக்தர்கள் தனித்தனியாக குளிக்கும் வகையில் 2 இடங்களில் சமர்பாத் அமைத்து குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தொட்டிகள் அமைத்து குளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் திதி, மற்றும் தர்ப்பணம் கொடுக்க பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் பலர் கூடுதுறைக்கு வந்து இருந்தனர். இதை தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக ஷவர் பாத் மற்றும் தொட்டிகளில் நிரப்பட்ட தண்ணீர்களில் புனித நீராடினர். புதுமண தம்பதிகள் பலர் வந்து ஷவர்களில் புனித நீராடி சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மனை வழிபட்டனர்.

    தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர். மேலும் பலர் கன்னிமார் பூஜை செய்தனர்.

    இதே போல் அம்மாபேட்டை காவிரி கரை பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதையடுத்து அம்மாபேட்டை சொக்கநாதன் கோவில் காவிரி கரை படித்துறை, சிங்கம் பேட்டை, காடப்பநல்லூர், காட்டூர், நெரிஞ்சிபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி கரையோர பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது.

    அதில் பக்தர்கள் பலர் புனித நீராடி திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். மேலும் பக்தர்கள் பலர் ஷவர்களில் குளித்து விட்டு சொக்கநாதரை வழிபட்டனர். இதில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இதே போல் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் இன்று பொதுமக்கள் பலர் வந்து இருந்தனர். ஆனால் அங்கு பொதுமக்கள் உள்ளே செல்லாத வகையில் தடுப்பு அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு அன்று மக்கள் காவிரி தாய் வழிபாடு நடத்துவார்கள். ஆனால் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் ஏமாற்றுத்துடன் சென்றனர்.

    மேலும் இந்த பகுதியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் மக்கள் புனித நீராடவும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிப்பட்டு இருந்தது. இதையடுத்து காலை முதலே மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    மேலும் பொதுமக்கள் கருங்கல்பாளையம் காளிங்கராயன் வாய்க்காலில் பக்தர்கள் பலர் தடையை மீறி புனித நீராடி காவிரி தாய் வழிபாடு நடத்தினர். பொதுமக்கள் பலர் காளிங்கராயன் வாய்க்காலில் திதி, தர்ப்பணமும் கொடுத்தனர்.

    இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளிலும் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கவில்லை. ஆனால் பக்தர்கள் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர். மேலும் பக்தர்கள் பலர் கொடுமுடிக்கு வந்து மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×