search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக்கொலை
    X

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக்கொலை

    • நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    • இன்று நீலாங்கரை அருகே போலீசார் மீது தாக்குதல் நடத்திய நிலையில் என்கவுண்டர்.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டி வந்த வீடு முன்பு அவரை ரவுடிக் கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றது. தமிழகம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    வேலூர் சிறையில் இருந்த பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும் காங்கிரஸ் பிரமு கருமான அஸ்வத்தாமன், பெண் தாதா அஞ்சலை உள்பட 28 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தனர். தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா.வை சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களில் 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ஆற்காடு சுரேசின் நெருங்கிய கூட்டாளியான இவன் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டவுடன் பழிக்குப்பழி வாங்க சபதம் எடுத்து செயல்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சீசிங் ராஜாவை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இதை அறிந்த சீசிங் ராஜா ஆந்திராவுக்கு தப்பி சென்று தலைமறைவாக இருந்தான். கடந்த 2½ மாதங்களாக சீசிங் ராஜாவை பிடிக்க முடியாமல் தனிப்படை போலீசார் திணறியபடி இருந்தனர்.

    பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு அவன் ஆந்திராவில் இருப்பது தெரிந்தது. சில நாட்களுக்கு முன்பு சீசிங் ராஜாவை போலீசார் ஆந்திராவில் சுற்றி வளைத்தனர். ஆனால் போலீஸ் பிடியில் இருந்து சீசிங் ராஜா நூலிழையில் தப்பினான்.

    இருப்பினும் போலீசார் ஆந்திராவிலேயே முகாமிட்டு அவனது நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்தனர். இதற்கிடையே வேளச்சேரி பகுதியில் மதுபான பார் ஊழியர் ஆனந்தன் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் சீசிங் ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் வேளச்சேரி போலீசார் அவனை தேடிவந்தனர்.

    இந்த நிலையில்தான் நேற்று இரவு ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து சீசிங் ராஜாவை போலீசார் மடக்கி பிடித்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29-வது குற்றவாளியாக அவன் கைது செய்யப்பட்டான்.

    அவனை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது நீலாங்கரை பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக சீசிங் ராஜா போலீசாரிடம் தெரிவித்தான்.

    அந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் விமல் தலைமையிலான போலீசார் அவனை அழைத்து சென்றனர்.

    சோழிங்க நல்லூரில் இருந்து அக்கரை நோக்கி செல்லும் வழியில் கலைஞர் கருணாநிதி சாலையை ஒட்டி பக்கிங்காம் கால்வாய் ஓடுகிறது.

    இதையொட்டி செல்லும் சிறிய மண்பாதை வழியாக சென்றால் அப்பகுதியில் உள்ள இஸ்கான் கோவிலை சென்றடைய முடியும். அந்த கோவிலுக்கு பின்பகுதியில்தான் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக சீசிங் ராஜா கூறியதையடுத்து அங்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    போலீஸ் வேனில் இருந்து இறங்கி ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த இடத்தை அடையாளம் காட்டிய சீசிங் ராஜா அங்கி ருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென்று போலீசாரை நோக்கி சுட்டான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சாதுர்யமாக விலகிக் கொண்டனர். இதனால் யார் மீதும் துப்பாக்கி குண்டு பாயவில்லை. போலீசாரின் வாகனம் மட்டும் சேதம் அடைந்தது. சீசிங் ராஜா தொடர்ந்து சுட்டதால் இன்ஸ்பெக்டர் விமல் தற்காப்புக்காக சீசிங் ராஜாவை நோக்கி 2 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டார். இதில் சீசிங் ராஜாவின் மார்பு மற்றும் வயிற்றின் மேல் பகுதியில் குண்டுகள் பாய்ந்தன.

    இதனால் நிலை குலைந்த சீசிங் ராஜா சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பலியானான். இருப்பினும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு போலீசார் சீசிங் ராஜாவை தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சீசிங் ராஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து ராயப் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சீசிங் ராஜா உடல் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நபர்களில் இது 2-வது என்கவுண்டராகும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி திருவேங்கடம் கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

    புழல் பகுதியில் போலீஸ் பிடியில் இருந்து தப்பியபோது அவனை போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில்தான் இன்று அதிகாலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டு உள்ளான்.

    சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பிறகு போலீசார் ரவுடிகள் வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். கடந்த 2½ மாதத்தில் 300-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் போலீசார் மீது தாக்குதல் நடத்தும் ரவுடிகள் என்கவுன்டர் செய்யப்பட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் ரவுடிகள் திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோர் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை தலைமறைவாக உள்ள மற்ற ரவுடிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. அவர்களும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    Next Story
    ×