search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14,086 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14,086 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • சென்னையில் இருந்து 11,176 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • இந்த ஆண்டு தாம்பரத்தில் இருந்து பஸ்கள் புறப்படாது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட வசதியாக தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை கிடைப்பதால் வெளியூர் பயணம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டு இருப்பதால் இந்த ஆண்டு சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட செல்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.

    தீபாவளிக்கு இன்னும் 9 நாட்களே இருப்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது குறித்து இன்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்குவது மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன், 4,900 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 11,176 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 2,910 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 14,086 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிற நவம்பர் 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரையில் தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 3,165 சிறப்பு பஸ்களும் 3 நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,441 பஸ்கள் ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,165 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 12,606 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    மேலும் பஸ் நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பஸ் மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு வசதியினை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும்.

    பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மேற்கூறிய 2 பஸ் நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இணைப்பு பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

    சென்னையில் இருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 28-ந்தேதி வழக்கமாக செல்லும் 2092 பஸ்களுடன் 700 சிறப்பு பஸ்களும் 29-ந் தேதி 2125 சிறப்பு பஸ்களும், 30-ந்தேதி 2075 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. 3 நாட்களும் 6,276 வழக்கமான பஸ்களும் 4,900 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 7 முன்பதிவு மையங்கள் கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்கள் செயல்படும்.

    கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

    கோயம்பேட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

    மாதவரத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    அரசு பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக 94450 14436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151, 044-24749002, 044-26260445, 044-26281611 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இது தவிர பயணிகள் நலன் கருதி கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.

    கூடுதலாக பஸ் தேவைப்பட்டால் தனியார் பஸ்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம். அரசு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் அவை இயக்கப்படும்.

    ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் உரிமையாளர்களுடன் 24-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    கடந்த ஆண்டை விட இந்த வருடம் கூடுதலாக மக்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் 5.50 லட்சம் பேர் பயணம் செய்தனர். இந்த ஆண்டு 5.83 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்கு வரத்து துறை ஆணையர் போலீஸ் உயர் அதிகாரிகள் அரசு அலுவலர்கள், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×