search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கோவையில் வெடிகுண்டு மிரட்டலால் போலீசார் உஷார்
    X

    கோவையில் வெடிகுண்டு மிரட்டலால் போலீசார் உஷார்

    • போலீசார் அந்த ஓட்டலில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.
    • தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    கோவை:

    கோவை அவினாசி ரோட்டில் உள்ள 3 ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாயுடன் அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஓட்டல் ஒன்றில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதனால் போலீசார் அந்த ஓட்டலில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.

    ஓட்டல்களுக்கு வந்த இ-மெயில் மிரட்டலில் கோவை கார் குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபினின் பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    ஜமேஷா முபின் இறந்து இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஐ.எஸ்.அமைப்பினர் அந்த ஓட்டல்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், காலை 10.30 மணிக்கு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    வெடிகுண்டு சோதனையில் அது புரளி என்றாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    காரணம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளிக்கு முந்தைய நாள் தான் கோவையில் கார்குண்டு வெடித்து ஜமேஷா முபின் பலியானான். கோவையில் தீபாவளி கூட்டத்தில் கார் வெடிகுண்டை வெடிக்கச் செய்து பெரும் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த சதியில் ஜமேஷா முபினே சிக்கி பலியானான்.

    இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இதுதொடர்பாக 5-க்கும் மேற்பட்ட முறை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மாநிலம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் தற்போது தீபாவளி பண்டிகை வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக புதுத்துணிகள், நகைகள் எடுப்பதற்காக கோவையின் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் இப்போதே கூடத் தொடங்கி விட்டனர். இதை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    மக்கள் அதிகம் கூடும் கோவை ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, ராஜவீதி மற்றும் காந்திபுரம் கிராஸ் கட் ரோடு, 100 அடி ரோடு போன்ற இடங்களில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் நின்றவாறும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுமாறும், சந்தேக நபர்கள் யாராவது தென்பட்டால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் ஒலிபெருக்கிகள் மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    தீபாவளியை நெருங்கும் வேளையில் ஆயிரக்கணக்கான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×