search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் கோடைகாலம் முடிந்த பிறகும் வாட்டி வதைக்கும் வெயில்
    X

    தமிழகத்தில் கோடைகாலம் முடிந்த பிறகும் வாட்டி வதைக்கும் வெயில்

    • சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்து உள்ளது.
    • வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    சென்னை:

    கோடை காலத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன் பிறகு படிப்படியாக குறைவதும் ஒரு சில மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருப்பதும் உண்டு.

    பொதுவாக ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன் பிறகு படிப்படியாக குறையும். தென்மேற்கு பருவமழை தொடங்கிய உடன் வெயிலின் தாக்கம் பெரும்பாலான மாவட்டங்களில் குறையும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வரை வெயிலின் கோர தாண்டவம் தலை விரித்தாடுகிறது.

    சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்து உள்ளது. மழையால் வெப்பம் தணிந்ததோடு நீர்மட்டமும் அதிகரித்துள்ள நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இயல்பை விட 1,2 செல்சியஸ் அதிகரித்தது. 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் பதிவானது.

    தற்போது கோடை காலம் போல் சுட்டெரிக்கும் வெயில் தாக்கி வருகிறது. இயல்பை விட 4 செல்சியஸ் வெப்பம் பல மாவட்டங்களில் அதிகரித்தது.

    சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் இன்று வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. 2-வது கோடை கோலம் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. பெரும்பாலான மாவட்டங்களில் 102 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. காலையிலேயே அக்னி நட்சத்திரம் போல வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பின்னர் படிப்படியாக உஷ்ணம் அதிகரித்தது.

    வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். உடலில் இருந்து வியர்வை வெளியேறியதால் சோர்வடைந்தனர்.

    இதற்கிடையே வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கத்தில் கரையை கடக்க உள்ளதால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் தென் மாநிலங்களில் வறண்ட வானிலை காணப்படுகிறது.

    தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகமும் மாறி உள்ளதால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்து வானிலை அதிகாரி கீதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    செப்டம்பர் மாதத்தில் வெப்பம் அதிகரிப்பது என்பது புதிதானது அல்ல. எப்போதாவது இது போன்று நிகழ்வது உண்டு.

    வடமாநிலங்களில் மாறிமாறி காற்றழுத்தம் உருவாகி வருவதால் கடலில் உள்ள ஈரப்பதத்தை முழுவதும் இழுத்து சென்று விட்டது. கடல் காற்றுக்ககு பதிலாக நிலப்பகுதியில் இருந்து காற்று வீசுகிறது.

    சுழற்சி காரணமாக நிலப்பரப்பில் இருந்து காற்று வீசுகிறது. அதனால் ஈரப்பதம் குறைந்தது. தென் மேற்கில் இருந்து காற்று வந்த பிறகு தான் வெப்பத்தின் அளவு படிப்படியாக குறையும்.தற்போதைய நிலவரப்படி 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும். அதன் பின்னர் குறையும் என்றாலும் அதற்கிடையே புதிய காற்றழுத்தம் உருவாகும் பட்சத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால் மின் தேவை உயர்ந்துள்ளது. வீடுகளில் ஏ.சி. பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.

    காலநிலை மாற்றத்தால் கோடை வெயில் காலத்தை போல தற்போது வெப்பம் சுட்டெரிப்பதால் மின் நுகர்வு கூடி வருகிறது.

    Next Story
    ×