search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனமழை- நீலகிரியை மிரட்டும் கடும் குளிர்: பொதுமக்கள் தவிப்பு
    X

    கனமழை- நீலகிரியை மிரட்டும் கடும் குளிர்: பொதுமக்கள் தவிப்பு

    • மழையால் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தது.
    • கேரட், பூண்டு, பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீலகிரியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஊட்டி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர், குந்தா, குன்னூர் என மாவட்டம் முழுவதும் மழை கொட்டுகிறது.

    மழையால் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தது. மண்சரிவுகளும் ஏற்பட்டு வந்தன. கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.

    நேற்று ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தன.

    பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு ஊட்டி அருகே உள்ள கேத்தி பகுதியில் போலீஸ் நிலையம் அருகே நின்றிருந்த மரம் முறிந்து போலீஸ் நிலையத்தின் மீது விழுந்தது.

    இதில் போலீஸ் நிலையம் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக காவல் நிலையத்தில் இருந்த காவலர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றினர்.

    சாலையிலும் இந்த மரம் விழுந்ததால் அப்பகுதியில் உள்ள கிராம பகுதிகளுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி பிங்கர் போஸ்ட், குளிசோலை பகுதிகளிலும் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. அதனை தீயணைப்புத்துறையினர் உடனுக்குடன் அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.

    ஊட்டியில் இருந்து இத்தலார் செல்லும் சாலை முள்ளிகொரையில் மரம் ஒன்று விழுந்தது. இதனால் இந்த வழித்தடத்திலும் போக்குவரத்து தடைபட்டது. மரம் வெட்டி அகற்றப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

    குன்னூர்-ஊட்டி சாலையில் எம்.ஜி. காலனி பகுதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் விழுந்ததில், கார் சுக்குநூறாகிறயது.

    கோடேரி, பெங்கால் மட்டம், கைகாட்டி , குன்னக்கம்பை, அதிகரட்டி, குந்தா பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் சாலைகளில் 7 இடங்களில் மின்கம்பம் மீதும் சாலைகளிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது.

    ஊட்டி அருகே முத்தோரை பாலடா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலும் தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் கேரட், பூண்டு, பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக காலநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை, காற்றுடன், குளிரும் சேர்ந்து கொண்டுள்ளது.

    மாவட்டம் முழுவதுமே கடும் குளிரும் நிலவுகிறது. குறிப்பாக ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

    குளிரில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கம்பளி ஆடைகள், சுவர்ட்டர் அணிந்து கொண்டே வெளியில் வருகின்றனர். இன்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.

    மழையுடன் குளிரும் சேர்ந்து வாட்டி வதைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் வேலைக்கு செல்வோர், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    தொடர் மழை மற்றும் குளிரால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் அதிக காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஊட்டி, குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 20 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் பெய்துள்ள மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    சேரங்கோடு-98, பந்தலூர்-70, கூடலூர்-61, அப்பர் கூடலூர்-60, தேவாலா-57, கிளைன்மார்கன்-44, ஓவேலி-42, செருமுள்ளி-38, பாடந்தொரை-36.

    Next Story
    ×