search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசிக்க ஜே.பி.நட்டா திட்டம்
    X

    தமிழக பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசிக்க ஜே.பி.நட்டா திட்டம்

    • தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் சந்திப்பு, பொது கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சியில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார்.
    • தமிழகத்தில் பா.ஜனதா மேற்கொள்ளும் தேர்தல் பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக மாநில நிர்வாகிகளிடம் ஜே.பி.நட்டா கேட்டறிய உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பணிகளை வேகப்படுத்தி உள்ளன. தமிழக பா.ஜனதா சார்பில், 'பூத்' கமிட்டி அமைக்கப்பட்டு, அவற்றை வலுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டுகிறது.

    இந்த நிலையில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். அவரின் இந்த பயணம், அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின்போது, தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் சந்திப்பு, பொது கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

    முதலாவதாக, சென்னை அடுத்த காட்டாங்குளத்தூர் அருகே பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜனதா மாநில நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மேலும் தமிழக பா.ஜனதா சார்பில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, சமூகவலைதள பிரசார பிரிவு, மகளிர் அணி, இளைஞரணி, சட்டம் பிரிவு உள்பட 38 குழுக்களையும் ஜே.பி.நட்டா சந்தித்து ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

    தமிழகத்தில் பா.ஜனதா மேற்கொள்ளும் தேர்தல் பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக மாநில நிர்வாகிகளிடம், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கேட்டறிய உள்ளார். மேலும், தேர்தல் வியூகங்கள் வகுப்பதற்கான வழிகாட்டுதல்களையும் மாநில நிர்வாகிகள் மற்றும் சிறப்பு குழுக்களுக்கு அவர் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பின்போது, கூட்டணி குறித்தும் விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்பிறகு, சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், ஜே.பி.நட்டா பங்கேற்று பொதுமக்களிடையே உரையாற்ற உள்ளார்.

    Next Story
    ×