search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குமரி மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் 451.8 மில்லிமீட்டர் மழை பதிவு
    X

    குமரி மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் 451.8 மில்லிமீட்டர் மழை பதிவு

    • தமிழ்நாட்டிலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக அளவு மழை இந்த 3 மாதத்தில் கொட்டி தீர்த்துள்ளது.
    • பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 52.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மார்ச் 1-ந்தேதி முதல் நேற்று வரை கடந்த 3 மாதத்தில் குமரி மாவட்டத்தில் 451.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இயல்பாக 281.5 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் அதிகமான அளவு மழை கொட்டி தீர்த்துள்ளது. தமிழ்நாட்டிலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக அளவு மழை இந்த 3 மாதத்தில் கொட்டி தீர்த்துள்ளது.

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளிலும், சானல்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து பாசன குளங்களும் மாவட்டம் முழுவதும் நிரம்பி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்து இருந்த நிலையில் இன்று அதிகாலையில் மீண்டும் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது பெய்தது.

    இதுபோல் தக்கலை, இரணியல், கொட்டாரம், மயிலாடி, குழித்துறை, திற்பரப்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று அதிகாலையில் மழை வெளுத்து வாங்கியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 52.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.20 அடியாக இருந்தது. அணைக்கு 568 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 58.80 அடியாக உள்ளது. அணைக்கு 424 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 15.15 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 15.25 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 16.20 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 30.43 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 13 அடியாகவும் உள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் 10 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியல் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். இன்று காலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியல் குளித்து மகிழ்ந்தனர். மழையும் அங்கு பெய்து கொண்டிருந்த நிலையில் ரம்யமான சூழல் நிலவுகிறது.

    Next Story
    ×