search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை- மு.க.ஸ்டாலின்
    X

    பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை- மு.க.ஸ்டாலின்

    • கலைஞரை இந்த அளவுக்கு புகழ வேண்டும், பாராட்டி பேச வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை.
    • கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது ஒன்றிய அரசு.

    சென்னை:

    திருவொற்றியூரில் முன்னாள் அமைச்சர் மறைந்த கே.பி.பி.சாமியின் சகோதரர் திருவொற்றியூர் கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடத்தி வைத்து மணமக்கள் திலீபன்-விஷாலியை வாழ்த்தினார்.

    பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

    உள்ளபடியே கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசினால் என்ன பேசுவார்களோ அதை விட அதிகமாக, தி.மு.க.காரன் பேசுவதை விட அதிகமாக சிறப்பாக தலைவர் கலைஞரை பற்றி அவர் பேசியது உள்ளபடியே வரலாற்றில் பொறிக்க தக்க உரையாக அந்த உரை அமைந்தது.

    கலைஞரை இந்த அளவுக்கு புகழ வேண்டும், பாராட்டி பேச வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. தேவையும் இல்லை அவருக்கு. ஆனாலும் பேசினார் என்றால், உள்ளத்தில் இருந்து உண்மையை பேசினார்.

    இதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர் நேற்று ஒரு பேட்டி கொடுக்கிறார்.

    நாணயம் வெளியிடுகிறார்கள். இந்தியில் இருக்கிறது, தமிழில் இல்லை. தமிழ், தமிழ், தமிழ் என்று முழங்குகிறார்களே, இந்தியில் இருக்கிறது என்று சொல்கிறார்.

    முதலில் ஒன்று அரசியல் தெரிந்திருக்க வேண்டும். இல்லை நாட்டினுடைய நடப்பு புரிந்திருக்க வேண்டும்.

    அந்த நிகழ்ச்சி எப்படி நடக்கிறது என்றால் மத்திய அரசு அனுமதி கொடுத்து மத்திய அரசின் மூலமாக நடைபெறுகிற நிகழ்ச்சி அது.

    ஏற்கனவே பல பேருக்கு நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. மறைந்த எம்.ஜி.ஆர்., அண்ணாவுக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த நாணயத்தை எல்லாம் ஒருவேளை அவர் பார்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். அதை எடுத்து பாருங்கள். எல்லா தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடுகிறபோது, ஒன்றிய அரசு இந்தியில்தான் எழுதி அப்புறம் ஆங்கிலத்தில் எழுத்துகள் அமைந்திருக்கும்.

    ஆனால் அண்ணாவுக்கு நாணயம் வெளியிடுகிறபோது தலைவர் கலைஞர் யாரும் செய்யாத ஒரு ரகசியத்தை செய்தார். அண்ணாவுடைய தமிழ் கையெழுத்து அதில் இடம் பெற வேண்டும் என்று சொல்லி அண்ணாவின் தமிழ் கையெழுத்தை அந்த நாணயத்தில் வெளியிட்டு அதற்கு பிறகு வெளியிடப்பட்டது.

    அது மாதிரிதான் கலைஞரின் நாணயத்தை வெளியிடுகிறபோது கலைஞருக்கு ரொம்ப பிடித்த எழுத்து, தமிழ் வெல்லும். ஆக அந்த 'தமிழ் வெல்லும்' என்பது தமிழில்தான் எழுதப்பட்டு உள்ளது. இதை கூட அவர் பார்க்காமல், புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது வருத்தமாக உள்ளது.

    ஏன் ராகுல்காந்தியை அழைக்கவில்லை என அவர் கேட்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு சொல்லிக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை தி.மு.க. நடத்தவில்லை. இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஒன்றிய அரசு. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் தான் நிகழ்ச்சி நடந்தது.

    கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது ஒன்றிய அரசு. அதனால்தான் ஒன்றிய அமைச்சரை அழைத்து அந்த நிகழ்ச்சியை நாங்கள் சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம்.

    இதில் எங்கே பழனிசாமிக்கு வலிக்கிறது? அதைத்தான் நான் கேட்கிறேன்.

    எம்.ஜி.ஆருக்கு நாணயம் வெளியிட்டார்கள். யார் வெளியிட்டார்கள் தெரியுமா? ஒன்றியத்தில் இருந்து யாரும் வரவில்லை. எடப்பாடி பழனிசாமியே வெளியிட்டார். ஏனென்றால் ஒன்றிய அரசு அவரை மதிக்கவில்லை. அவரை ஒரு முதலமைச்சராகவே நினைக்கவில்லை. ஏன் மனுஷனாகவே நினைக்கவில்லை. வர மறுத்து விட்டார்கள். இதுதான் அவருக்கு இருந்த மரியாதை.

    இன்றைக்கு நாம் அழைத்தவுடன் அடுத்த வினாடி ஒரு சொல் கூட தட்டாமல் ஒரு 15 நிமிடம், அரைமணி நேரம் வந்து நீங்கள் நடத்தி விட்டு செல்லுங்கள் என்றோம்.

    15 நிமிடம் என்ன... எவ்வளவு மணி நேரம் என்றாலும் இருந்து காத்திருந்து நிகழ்ச்சியை நடத்தி விட்டு போகிறேன் என்று சொல்லி விட்டு வந்தார். அதுதான் தி.மு.க.வுக்கு இருக்கக்கூடிய பெருமை. கலைஞருக்கு இருக்க கூடிய சிறப்பு.

    இன்னொன்றும் சொல்ல வேண்டும், அம்மா, அம்மா என்று புகழ்ந்து கொண்டி ருக்கிறார்களே அ.தி.மு.க.வினர். பாக்கெட்டில் படத்தை வைத்துக்கொண்டு பூஜை செய்து கொண்டிருக்கிறார்களே அந்த அம்மையார் இறந்து எத்தனை வருடம் ஆகி விட்டது.

    நான் கேட்கிறேன். இதுவரைக்கும் அந்த அம்மையரால் வளர்க்கப்பட்டவர்கள் உருவாக்கப்பட்டவர்கள் ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தி இருக்கிறார்களா?

    ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்துவதற்கு யோக்கியதையற்றவர்கள் கலைஞருடைய விழாவை பார்த்து விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றுதான் நான் கேட்கிறேன்.

    ராஜ்நாத்சிங்கை நாம் அழைத்ததால் ஏதோ பா.ஜ.க.வுடன் நாம் உறவு வைத்துக் கொண்டோம். உறவு வைக்க போகிறோம். அப்படின்னு ஒரு செய்தியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

    இது மீடியாவுக்கு ஒரு தீனி. ஒவ்வொரு ஊடகங்களும் ஒவ்வொரு கோணத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திட்டினாலும் தி.மு.க.தான், வாழ்த்தினாலும் தி.மு.க.தான்.

    நாங்கள் ரகசிய உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அம்மையார் இந்திரா காந்தியே சொன்னார். கலைஞரை பொறுத்தவரைக்கும், தி.மு.க.வை பொறுத்தவரைக்கும், எதிர்த்தாலும் கொள்கையோடு எதிர்ப்பார். ஆதரித்தாலும் கொள்கையோடு ஆதரிப்பார் என்று சொல்லி இருக்கிறார். அது போதும் எங்களுக்கு.

    மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கூட நாங்கள் தீர்மானம் போட்டுள்ளோம். முதலில் எடிப்பாடி பழனிசாமி அதை படிக்க வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமி மாதிரி ஊர்ந்து போய், பதுங்கி போய் பதவி வாங்குகிற புத்தி தி.மு.க.வுக்கு கிடையாது. எல்லோருக்கும் உரிய மரியாதையை நாங்கள் கொடுக்கிறோம்.

    அதற்காக நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன். அண்ணா மீது ஆணையிட்டு சொல்கிறேன். நமக்கென்று இருக்க கூடிய உரிமையை ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இதுதான் அண்ணாவும், கலைஞரும் நமக்கு நமக்கு போட்டுத் தந்திருக்கும் பாதை.

    அப்படிப்பட்ட இயக்கத்தை சேர்ந்த குடும்பத்தில்தான் இன்றைக்கு இந்த மண விழா நடக்கிறது.

    இங்கே உதயநிதி ஸ்டாலின் பேசுகிறபோது, சங்கருக்கு கோபம் வந்திடும். அந்த பயத்திலேயே வந்தேன் என்று சொன்னார். நானும் அப்படித்தான்.

    ஒன்றை மறந்து விடக்கூடாது. கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். கட்சிக்கென்று ஒரு பிரச்சினை வருகிறபோது பெரிய கோபம் வந்தே தீர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே. சேகர்பாபு, காந்தி, பெரிய கருப்பன், ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் ஆர்.டி.சேகர் எம். எல்.ஏ., கலாநிதி வீராசாமி எம்.பி., மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் ஜே.ஜே. எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி மாநில மீனவர் அணி தலைவர் இரா. பெர்ணார்டு, மீனவர் அணி நிர்வாகிகள் மதிவாணன், ஜோசப் ஸ்டாலின், பகுதி செயலாளர்கள் தி.மு. தனியரசு, வை. ம. அருள்தாசன், ஏ.வி. ஆறுமுகம், மாவட்ட இளைஞர் அணி. அமைப்பாளர் ஆர்.டி. மதன்குமார், ஆகாஷ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் செல்வ ராஜகுமார், ராமநாதன், இரா. முருகேசன்,அவைத் தலைவர் குறிஞ்சி கணேசன் பரசு பிரபாகரன், பி. எஸ். இனியன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். முன்னதாக கே.பி.சொக்கலிங்கம் வரவேற்றார். முடிவில் கே.பி.சங்கர் எம்.எல். ஏ. நன்றி கூறினார்.

    Next Story
    ×