search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1¼ கோடி அடகு நகை கொள்ளை
    X

    தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1¼ கோடி அடகு நகை கொள்ளை

    • நிதி நிறுவனத்தில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த மூலக்கரைபட்டியை சேர்ந்தவர் வின்சென்ட் மகன் ரெமன் (வயது 45).

    இவர் மூலக்கரைப்பட்டி மெயின் பஜாரில் வணிக வளாகம் வைத்துள்ளார். இந்த வணிக வளாகத்தில் அவர் தனியார் நிதி நிறுவனம் மற்றும் ஜவுளிக்கடை, பேன்சி கடைகள் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு கடை ஊழியர்கள் கடைகளை அடைத்து சென்றனர். இன்று காலை வணிக வளாகத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் பின்பக்க ஜன்னல் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ரெமனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் உடனடியாக வணிக வளாகத்துக்கு விரைந்து சென்றார்.

    அங்கு வணிக வளாகத்தில் உள்ள நிதி நிறுவனத்தின் பின்பக்க ஜன்னல் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்திருப்பது தெரிய வந்தது. மேலும் இந்த நிதி நிறுவனத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தங்களது நகைகளை அடகு வைத்து கடன் பெற்றிருந்தனர்.

    இதுதொடர்பாக அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்த போது சுமார் 250 பவுன் நகைகள் வரை அடகு வைக்கப்பட்டிருந்ததும், அவை கொள்ளை போயிருந்ததும் தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1¼ கோடி ஆகும். மேலும் நிதி நிறுவனத்தில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ரெமன் மூலக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் நிதி நிறுவனத்தின் பின்பக்க ஜன்னல் கதவை உடைத்து உள்ளே நுழைந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

    மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்கள் நடமாட்டம் மிகுந்த மெயின் பஜாரில் உள்ள வணிக வளாகத்திலேயே மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ள இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×