search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில்  என்ஐஏ சோதனை
    X

    சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை

    • சென்னையில் 10 இடங்களிலும், நாகர்கோவில் மற்றும் புதுக்கோட்டையிலும் சோதனை நடைபெற்றது.
    • வடகாடு பகுதியில் வசித்து வரும் அப்துல்கான் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னையில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் உல்-தஹீரிர் என்கிற பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை திரட்டிய விவகாரம் கடந்த மே மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    யூடியூப் சேனல்களில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்புபவர்கள் மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்களை சென்னை மாநகர போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

    அந்த வகையில் ராயப்பேட்டையில் ஜானி கான் தெருவில் அலுவலகம் அமைத்து தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆட்களை திரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல்ரகுமான், இவர்களது நண்பர்கள் முகமது காதர் நவாஸ், ஷெரீப், அகமது அலி ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த 6 பேரும் வெளி மாவட்டங்களுக்கு சென்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்தது அம்பலமானது. தமிழகத்தை தாண்டி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இவர்கள் தொடர்பு வைத்திருந்ததும் அம்பலமானது.

    இதன் காரணமாக சென்னை சைபர் கிரைம் போலீசிடம் இருந்து இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமை என்று அழைக்கப்படும் என்.ஐ.ஏ.க்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

    ராயப்பேட்டையில் உள்ள அலுவலகம் மற்றும் பல இடங்களுக்கு அவர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்தனர். இதில் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக ஹமீது உசேன் யூடியூப் சேனலில் பேசியிருப்பதற்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை தெரிவித்து இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலரும் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக இன்று சென்னையில் 10 இடங்களிலும், நாகர்கோவில் மற்றும் புதுக்கோட்டையிலும் சோதனை நடைபெற்றது. மொத்தம் 12 இடங்களில் அதிரடி சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னையில் ஏழுகிணறு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சிட்லப்பாக்கம், தாம்பரம், வண்டலூர், வெட்டுவாங்கேணி, நன்மங்கலம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையின்போது தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    ஏழுகிணறு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் ரகுமான் என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    குமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் முகமது அலி என்பவரது வீட்டிலும் சென்னையில் இருந்து சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவர் இமாமாக இருப்பது தெரியவந்து உள்ளது. நாகர்கோவில் வட்டவிளை பகுதியில் இருந்து கடந்த 12 நாட்களுக்கு முன்புதான் முகமதுஅலி இளங்கடை பகுதிக்கு குடிபெயர்ந்து உள்ளார். என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்றபோது முகமது அலி வீட்டில் இல்லை. அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் அருகே உள்ள வடகாடு பகுதியில் வசித்து வரும் அப்துல்கான் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த ஜூன் மாதம் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் சோதனை நடைபெற்று உள்ளது.

    இந்த சோதனையின்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆட்களை திரட்டிய வழக்கு தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். இதன் அடிப்ப டையில் அடுத்தக்கட்ட விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

    Next Story
    ×