search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது: அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்க முடியாது- ஆர்.பி.உதயகுமார்
    X

    கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது: அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்க முடியாது- ஆர்.பி.உதயகுமார்

    • 3 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது கடும் இரட்டை சுமையை கொடுத்துள்ளது.
    • கடந்த தேர்தலில் அரசியலில் விட்டு ஒதுங்கி கொள்கிறேன் எனக் கூறியவர் தற்போது மீண்டும் அரசியல் குதிக்கிறேன் என சொல்கிறார்?

    மதுரை:

    தி.மு.க. ஆட்சியில் அரங்கேறி வரும் கள்ளச்சாராய உயிரிழப்பு மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழக்கு நிகழ்ச்சி சமயநல்லூரில் இன்று நடைபெற்றது.

    இதற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் முன்னிலை வகிததார். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், மாணிக்கம், கருப்பையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    இன்றைக்கு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. நாட்டில் உள்ள அவலங்களை பற்றி சட்டசபையில் பேச முயன்றால் தூக்கி எறிகிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் கள்ளச்சாராயம், போதை பொருள் கடத்தல் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை 38 வருவாய் மாவட்டங்களில் பட்டி தொட்டி எங்கும் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகிய பகுதிகளில் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தொண்டர்கள் பொதுமக்களுக்கு நேரில் வழங்கி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். உயர்த்திய மின் கட்டணத்திற்கு வருத்தம் தெரிவிக்காமல், அதனை நியாயப்படுத்துகிறார்கள். 8 ஆண்டுகள் மின்சார கட்டணத்தை உயர்த்தாத அரசு அ.தி.மு.க. அரசு. மரக்காணம் பகுதியில் 2023 ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியான அன்று, இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாது என்றார். அது வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டது.

    கண்டிக்க தவறிய அதிகாரிகளை இடமாற்றம் செய்து விட்டேன் என கூறும் ஸ்டாலின், ஆடதெரியாதவன் தெரு கோணல் என்பது போல தனக்கு ஆட தெரியவில்லை என ஸ்டாலினால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. நாங்கள் அதே அதிகாரிகளை வைத்து தான் அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையை ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகராக வைத்திருந்தோம்.

    நான் இங்கு யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, தரக்குறைவாக பேச விரும்பவில்லை, நடந்ததை குறிப்பிட விரும்புகிறேன். 33 ஆண்டு காலம் அம்மாவுடன் இருந்தவர்கள் தென் தமிழகத்தில் இன்றைக்கு ஆடி மாதத்தில் அம்மா வழியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீங்கள் உங்கள் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள்?

    உங்களை சேர்ந்தவர்களுக்கு நீங்கள் ஏதாவது நல்லது செய்து இருந்தால் அனைவரும் உங்கள் பின்னால் வந்திருப்பார்கள். உங்களுக்கு இருக்கும் பணத்திற்கு, சொத்தை வைத்து ஏதாவது செய்து இருந்தால் அந்த பகுதியே சொர்க்க பூமியாக இருந்திருக்கும். அரசியலில் ஓரம் கட்டப்பட்டதற்கு அம்மா காரணம் அல்ல, அம்மாவின் நிழலாக இருக்கும் ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா சென்றவர்தான் காரணம். அவர்கள், இவர்கள் இருந்தால் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்பது கற்பனை கதை. தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    3 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது கடும் இரட்டை சுமையை கொடுத்துள்ளது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் அளவில் உள்ளது. காளிமுத்து கூறியது போல கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. இந்த நேரத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். 52 ஆண்டுகள் பொன்விழா கண்ட கட்சியில் 50 ஆண்டுகள் கடும் உழைப்பில் எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் தான் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள். யாரது உள்ளடி வேலையில் மூன்றாவது முறையாக சாதனை படைக்க இருந்த எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்பட்டார்.

    பொதுச் செயலாளராக பொறுப்பேற்று எத்தனையோ வழக்குகள் நீதிமன்றங்களுக்கு சென்றபோது, தொண்டர்கள் எடப்பாடியுடன் நின்ற காரணத்தினால் அ.தி.மு.க.வை முழுமையோடு எடப்பாடி வழி நடத்துகிறார். 2 கோடி தொண்டர்கள் சுதந்திர சுவாச காற்றை சுவாசிக்கின்றனர்.

    33 ஆண்டுகள் அம்மாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை முழுமையாக செயல்படுத்தியவர்கள் தனக்குத்தானே பிரசாரத்தில் முன்னிலைப்படுத்தி கொள்கிறார். ஆனால் தாங்கள் சார்ந்த சமுதாயத்திற்கு அவர்களது மக்கள் படுகின்ற கஷ்டத்திற்கு தீர்வு காண ஏதாவது முயற்சி செய்தாரா? கல்வியிலே, பொருளாதாரத்திலே பின்தங்கி செத்து செத்து பிழைக்கின்றனர்.

    அந்தக் கண்ணீரைத் துடைப்பதற்கு என்ன நடடிக்கை எடுத்தார். இந்த சாதிய பின்புல சமுதாயத்தை பயன்படுத்தி தன்னை முன்னிறுத்துகிறாரே தவிர நம் மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. ஏதாவது செய்திருந்தால் இந்த நாடே அவர்கள் பின்னால் நின்றிருக்கும்.

    அ.தி.மு.க.வில் மூத்த முன்னோடிகளின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாவதற்கு யார் காரணம்? ஆடி மாதத்தில் தென்காசியில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா சென்று இருக்கிறார். அவர்களுக்கு இருக்கக்கூடிய சொத்து, பணத்திற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்திருக்க முடியும். ஆனால் எதுவும் செய்யவில்லை.

    காலமும், அதிகாரமும் கையில் இருந்தும் ஏழை, எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நீங்கள் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறீர்களா? அ.தி.மு.க. தொண்டர்கள் எச்சரிக்கையாகவும், கவனமாகவும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்.

    எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் தெரியும் அவர்கள் கையில் எந்த அளவிற்கு அதிகாரம் இருந்தது என்று. அவர்களால் பலன் அடைந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா? சசிகலாவிடம் யாராக இருந்தாலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். பகல் கனவு காண்பவர்களுக்கு நிச்சயமாக பகல் கனவாக தான் போகும். உச்சநீதி மன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புகளை மதிக்க வேண்டும்.

    கடந்த தேர்தலில் அரசியலில் விட்டு ஒதுங்கி கொள்கிறேன் எனக் கூறியவர் தற்போது மீண்டும் அரசியல் குதிக்கிறேன் என சொல்கிறார்? இதில் எதை ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஜானகி அம்மாள் எடுத்த முடிவை முன்மாதிரியாக கொண்டு சசிகலா செயல்பட்டால் இரண்டு கோடி தொண்டர்களும் பலன் அடைவார்கள் என எடப்பாடி கூறியதை அவர்கள் செய்தால் நன்றாக இருக்கும்.

    கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது என்பது போல மீண்டும் அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக்கொள்ள மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×