search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரெயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி பணம், நகை சிக்கியது- வாலிபர் கைது
    X

    ரெயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி பணம், நகை சிக்கியது- வாலிபர் கைது

    • கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க கட்டி, தங்க நகைகள் இருந்தது.
    • நகை மற்றும் பணத்தை அவர் சென்னையில் இருந்து மதுரைக்கு கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.

    திருச்சி:

    திருச்சி ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் அபிசேக், பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டின் ஆகியோர் இன்று ஜங்சன் ரெயில் நிலையத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னையிலிருந்து மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தது. பின்னர் பயணிகள் அந்த ரெயிலில் ஏறி இறங்கினர். அப்போது முன்பதிவு பெட்டியில் இருந்து இறங்கிய ஒரு நபர் கையில் பெரிய பையுடன் வேக வேகமாக புறப்பட்டுச் சென்றார்.

    இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த நபரை மடக்கி பையை சோதனை செய்தனர். அப்போது அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க கட்டி, தங்க நகைகள் இருந்தது. ஆனால் அந்த நபரிடம் அதற்கான ரசீது எதுவும் இல்லை.

    அதை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவரை பிடித்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்டவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த லட்சுமணன்( வயது 25) என்பது தெரியவந்தது.

    நகை மற்றும் பணத்தை அவர் சென்னையில் இருந்து மதுரைக்கு கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரனை நடந்து வருகிறது.

    அதன் பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வருமான வரித்துறை மற்றும் வணிகவரித் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து சென்று பணம் மற்றும் நகையை மதிப்பிட்டு வருகின்றனர்.

    இதில் ரொக்க பணம் ரூ. 15 லட்சமும், ரூ.1 கோடியே 89 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான 2.45 கிலோ தங்க நகைகளும் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரம் ஆகும். கைப்பற்றப்பட்ட நகை, பணம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதா? அல்லது ஹவாலா பணமா என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    இதன் பின்னணியில் இருப்பது யார் என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

    திருச்சி ரெயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×