search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கிண்டி ரேஸ் கிளப்பில் 4 புதிய குளங்கள்... பணியை தொடங்கிய சென்னை மாநகராட்சி
    X

    கிண்டி ரேஸ் கிளப்பில் 4 புதிய குளங்கள்... பணியை தொடங்கிய சென்னை மாநகராட்சி

    • பசுமை பூங்கா அமைப்பதை விட புதிய நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் என தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது.
    • ஏற்கனவே 30 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் 3 குளங்கள் உள்ளது.

    சென்னை:

    ஆக்கிரமிப்புகளால் வேளச்சேரி ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது குறித்தும், கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் ஏரி மாசடைந்துள்ளது குறித்தும், வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமரதாசன் என்பவர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இதை விசாரித்த தீர்ப்பாயம், 'வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்க, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா அமைக்கலாம்' என, யோசனை தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசின் கருத்தையும் கேட்டது.

    மழை பெய்தால் வெள்ளத்தாலும், மழை பொய்த்தால் வறட்சியையும் எதிர்கொள்ளும் சென்னையில், பசுமை பூங்கா அமைப்பதை விட புதிய நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் என தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது.

    இதனை தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை செயலர், சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் செயலர்களுடன் ஆலோசனை நடத்தி, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை அமைக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி, முடிவெடுக்க வேண்டும் என அவகாசம் கேட்டிருந்தது. இதனால் வரும் 14-ந்தேதி வழக்கின் அடுத்த விசாரணை நடக்க உள்ளது.

    இந்த நிலையில், கிண்டி ரேஸ் கிளப்பில் மழை நீரை சேகரிக்கும் வகையில் 4 குளங்களை அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

    ஏற்கனவே 30 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் 3 குளங்கள் இங்கு இருக்கும் நிலையில் 100 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 4 குளங்களை வெட்டும் பணி தொடங்கி உள்ளது.


    Next Story
    ×