search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அலை கடலென திரண்ட தொண்டர்கள்.. பிரமாண்டமாக தொடங்கிய மது ஒழிப்பு மாநாடு
    X

    அலை கடலென திரண்ட தொண்டர்கள்.. பிரமாண்டமாக தொடங்கிய மது ஒழிப்பு மாநாடு

    • பிரமாண்டமான முறையில் மாநாடு முகப்புகள், பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெற்றது.

    இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில துணை செயலாளர்கள் செஞ்சோலை, சிற்றரசி, மங்கையற்கரசி, அமுதா பொற்கொடி உள்பட பலர் முன்னிலை வகிக்கின்றனர். மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் நற்சோனை வரவேற்று பேசுகிறார்.

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அய்யாவைகுண்டர் இயக்கத்தின் தலைவர் பால.பிரஜாபதி அடிகளார், பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ., துரை.ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணை தலைவர் வாசுகி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் ஆனிராஜா, காங்கிரஸ் எம்.பி.சுதா, ம.தி.மு.க. துணைபொதுச்செயலாளர் ரொஹையா ஷேக் முகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலசெயலாளர் பாத்திமா முசபர், மனிதநேய மக்கள் கட்சி மகளிர் அணி பொருளாளர் ஷான் ராணி ஆலிமா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயலாளர் முத்துலட்சுமி வீரப்பன் ஆகியோர் கருத்துரை ஆற்றுகின்றனர். முடிவில் மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில பொருளாளா் மல்லிகையரசி நன்றி கூறுகிறார்.

    மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்க தலைமையிடத்து பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு உள்ளனர்.

    இதையொட்டி பிரமாண்டமான முறையில் மாநாடு முகப்புகள், பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நேற்று முதலே உளுந்தூர்பேட்டைக்கு வரத்தொடங்கி உள்ளனர். இன்று மதியம் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.

    தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் இந்த மாநாடு பொதுமக்கள் மட்டுமின்றி சக கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாநாட்டையொட்டி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×