search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    Armstrong
    X

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தே.மு.தி.க. பிரமுகரிடம் அதிரடி விசாரணை

    • ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழி தீர்த்த அவரது தம்பி பொன்னை பாலு ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஓராண்டாக திட்டம் தீட்டி வந்துள்ளார்.
    • அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் மலர்க்கொடியும் தனது கணவர் தோட்டம் சேகர் கொலையுண்டதற்கு ஆம்ஸ்ட்ராங்கும் ஒரு காரணம் என்று எண்ணி இருந்ததாக தெரிகிறது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த போலீசார் அது தொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, குன்றத்தூர் திருவேங்கடம் உள்பட 11 பேரை கைது செய்தனர்.

    இவர்களில் திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்ட நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சூடு பிடித்து ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ரவுடிகள் பலர் பெரிய அளவில் சதி திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இந்த கொலை வழக்கில் அரசியல் பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு இருப் பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பிரமுகர்களான மலர்க்கொடி, ஹரிஹரன், தி.மு.க. பிரமுகரான அருள், த.மா.கா.வை சேர்ந்த ஹரிஹரன், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு இவர்கள் பல்வேறு வழிகளில் உதவிகளை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய திருப்பமாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவரிடம் போலீசார் அதிரடி விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    திருவள்ளூரை சேர்ந்த அவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க. கவுன்சிலரான ஹரிஹரனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

    அந்த அடிப்படையிலேயே தே.மு.தி.க. நிர்வாகியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவருக்கும் தொடர்பு இருந்தால் அவரை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    தே.மு.தி.க. நிர்வாகியுடன் ஜல்லிமேடு பகுதியை சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 5 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இவர்களில் வக்கீல் ஒருவரும் உள்ளார். இவர்களை தவிர, மேலும் பலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான பெண் தாதா அஞ்சலையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரவுடிக் கும்பலை சேர்ந்தவர்கள் கூட்டாக சதி செய்து ஆம்ஸ்ட்ராங்கை கொன்றிருப்பது அம்பலமாகி உள்ளது.

    ரவுடி ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழி தீர்த்த அவரது தம்பி பொன்னை பாலு ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஓராண்டாக திட்டம் தீட்டி வந்துள்ளார்.

    அதே நேரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் மலர்க்கொடியும் தனது கணவர் தோட்டம் சேகர் கொலையுண்டதற்கு ஆம்ஸ்ட்ராங்கும் ஒரு காரணம் என்று எண்ணி இருந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஆயுள் கைதியான வடசென்னை தாதாவும் ஆம்ஸ்ட்ராங் மீது கண் வைத்திருந்துள்ளார். இப்படி 3 ரவுடிக் கும்பலை சேர்ந்தவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திரைமறைவில் திட்டம் தீட்டி வந்த நிலையில் ஆற்காடு சுரேசின் கொலையால் நிலை குலைந்து போயிருந்த பெண் தாதா அஞ்சலையும் அவர்களோடு கை கோர்த்து செயல்பட்டிருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இப்படித்தான் ஆம்ஸ்ட்ராங் நாலா புறமும் உள்ள ரவுடிகளால் சுற்றி வளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது காவல் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    இதையடுத்து போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்ய தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் போலீஸ் விசாரணை விரிவடைந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் பல அரசியல் பிரமுகர்களும், ரவுடிக் கும்பலை சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட உள்ளனர். இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரும் தப்ப முடியாது என்று தெரிவித்தார்.

    Next Story
    ×