search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்- 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
    X

    பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்- 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

    • அதிக அளவில் பக்தர்கள் வாகனங்கள் வந்திருந்ததால் பழனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • பக்தர்கள் வசதிக்காக மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிக அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் உள்பட முக்கிய திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தமிழ் முருகன் மாநாடு 2 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. அதையொட்டி கண்காட்சி ஒருவாரம் நடைபெற்றது. அப்போதும் அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தனர். அதனை தொடர்ந்து வாரவிடுமுறை நாட்களில் தமிழகத்தில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இன்று மாத கார்த்திகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் பழனிக்கு படையெடுத்தனர்.

    இதனால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் படிப்பாதை, யானைப்பாதை, வின்ச்நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மலைக்கோவிலில் ஏராளமானோர் திரண்டனர். பொது தரிசனம், சிறப்பு தரிசனங்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. சுமார் 4 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அதிக அளவில் பக்தர்கள் வாகனங்கள் வந்திருந்ததால் பழனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை போலீசார் சீரமைத்தனர். பக்தர்கள் வசதிக்காக மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிக அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இருந்தபோதும் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் வந்ததால் பஸ்களில் இடம்பிடிக்க முண்டியடித்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. இன்று மாத கார்த்திகை என்பதால் பழனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×