search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    காட்டு யானை தாக்கி முதியவர் பலி: பொதுமக்கள் மறியல்- போக்குவரத்து பாதிப்பு
    X

    காட்டு யானை தாக்கி முதியவர் பலி: பொதுமக்கள் மறியல்- போக்குவரத்து பாதிப்பு

    • சம்பவம் நடந்த இடத்தை பார்த்து விட்டு, முகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.
    • முகமதுவின் உறவினர்கள் அவரது உடலை எடுக்கவிடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி அடுத்துள்ளது சப்பந்தோடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் முகமது(வயது54).

    இவருக்கு வீட்டிற்கு பின்புறம் பாக்கு தோட்டம் உள்ளது. இங்கு ஏராளமான பாக்குமரங்களை வளர்த்து பராமரித்து வந்தார்.

    இன்று அதிகாலை வனத்தை விட்டு வெளியேறி 2 காட்டு யானைகள் சப்பந்தோடு கிராமத்திற்குள் புகுந்தன. குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்த 2 காட்டு யானைகள், முகமதுவின் பாக்கு தோட்டத்திற்குள் புகுந்தது.

    அங்கு பயிரிடப்பட்டிருந்த பாக்கு மரங்களை பிடுங்கி எறிந்து சேதப்படுத்தியது. வெளியில் ஏதோ சத்தம் வருவதை கேட்டதும் தூங்கி கொண்டிருந்த முகமது எழுந்து விட்டார்.

    பின்னர் வீட்டிற்கு வெளியில் வந்து டார்ச்லைட் அடித்து என்னவென்று பார்த்தார். அப்போது தோட்டத்திற்குள் 2 காட்டு யானைகள் நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் வீட்டிற்குள் செல்ல முயன்றார்.

    அதற்குள் அங்கு நின்றிருந்த 2 காட்டு யானைகளில் ஒன்று முகமதுவை நோக்கி விரட்டி வந்தது. இதனால் அச்சம் அடைந்த அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் யானை துரத்தி வந்து, முகமதுவை தாக்கி தூக்கி வீசியது.

    இதில் பலத்த காயம் அடைந்த முகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்களும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர்.

    அப்போது அங்கு காட்டு யானைகள் நின்றிருந்தன. பொதுமக்கள் சத்தம் போட்டு விரட்டியதும் யானைகள் அங்கிருந்து நகர்ந்து சென்றன. இதையடுத்து அவர்கள் அருகில் சென்று பார்த்தனர். அப்போது முகமது உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

    அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    சம்பவம் நடந்த இடத்தை பார்த்து விட்டு, முகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் முகமதுவின் உறவினர்கள் அவரது உடலை எடுக்கவிடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    யானையிடம் இருந்து நிரந்தர தீர்வு வேண்டும் என கூறி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் வனத்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து இந்த பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு கோரியும், இங்கு சுற்றி திரியும் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என வலியுறுத்தியும் சேரம்பாடி சுங்கம் பகுதியில் உடலை எடுக்க விடாமல் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் வந்து யானையிடம் இருந்து உரிய பாதுகாப்பு வழங்குவதாக கூறினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    பொதுமக்களின் இந்த போராட்டத்தால், தமிழக-கேரள எல்லையின் முக்கிய சாலையாக கருதப்படும் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×