search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    புதிய அணை கட்டுவதற்கான விண்ணப்பம்- மத்திய அரசு நிராகரிக்க வலியுறுத்தி மதுரை தபால் தந்தி அலுவலகம் முற்றுகை
    X

    புதிய அணை கட்டுவதற்கான விண்ணப்பம்- மத்திய அரசு நிராகரிக்க வலியுறுத்தி மதுரை தபால் தந்தி அலுவலகம் முற்றுகை

    • முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கேரள அரசு மத்திய அரசிடம் மனு அளித்திருந்தது.
    • மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசும், தி.மு.க, அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மதுரை:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் ஜீவாதாரமாக விளங்கி வருகிறது. ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் முயற்சியால் கட்டப்பட்ட இந்த அணை கேரள மாநில எல்லை பகுதியில் அமைந்திருந்தாலும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    பெரியாறு மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றை மறித்து நீரை கிழக்கு நோக்கி திருப்பி மழை மறைவு பகுதியான தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டத்திற்கு பயன்படுத்தவே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி. ஆகும். அணையின் நீர்மட்டம் 155 அடியாக உள்ளது.

    சுரங்கம் வழியாக தமிழக எல்லையில் உள்ள சுருளி, வைகையாற்றில் திருப்பி விடப்பட்டு தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணைக்கு பெரியாறு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுகிறது.

    தமிழகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரள அரசு தொடக்கத்தில் இருந்த பல்வேறு அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறது. அணை பலமாக இல்லை என கேரள அரசு தொடர்ந்து தெரிவிக்கிறது. இதனால் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநிலத்துக்கும் தொடர்ந்து பிரச்சனை நிலவி வருகிறது.

    இந்த நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கேரள அரசு மத்திய அரசிடம் மனு அளித்திருந்தது. இதற்கான நிபுணர் குழு கூட்டம் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்காலிகமாக இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசும், தி.மு.க, அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று தேனி மாவட்டத்தில் இருந்து 5 மாவட்ட விவசாயிகள் பேரணியாக முல்லைப்பெரியாறு அணையை நோக்கி சென்றனர். ஆனால் தமிழக எல்லையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று மதுரை தல்லாகுளம் தபால் தந்தி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கேரள அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×