search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கிடைக்காததை கிடைக்கும் என்று சொல்பவர்களை பொதுமக்கள் தயவு செய்து நம்பி ஏமாற வேண்டாம்- அமைச்சர் மூர்த்தி
    X

    கிடைக்காததை கிடைக்கும் என்று சொல்பவர்களை பொதுமக்கள் தயவு செய்து நம்பி ஏமாற வேண்டாம்- அமைச்சர் மூர்த்தி

    • முதலமைச்சர் சொன்னதைப்போல நாம் யாரை நம்பியும் இல்லை.
    • நம்மை நம்பி இருப்பவர்களுக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருப்பது தான் தி.மு.க. என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி மற்றும் கோ.தளபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களில் இந்த முறை மதுரை பாராளுமன்ற தொகுதியை தி.மு.க.விற்கு ஒதுக்க வேண்டும் என தொடர்ச்சியாக பேசி வந்தனர்.

    ஆனால் கட்சி தலைமை மதுரை தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன் 2-வது முறையாக போட்டியிட்டு 2,09,409 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9-ந்தேதி அப்போதைய அமைச்சரும், தற்போதைய துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஒத்தக்கடை பகுதியில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் வெங்கடேசன் எம்.பி.யும் கலந்து கொண்டார்.

    பின்னர் கடந்த 7-ந்தேதி மதுரை மாநகராட்சி பகுதிகளுக்குள் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரமாண்ட பேரணி வெங்கடேசன் எம்.பி. தலைமையில் நடந்தது.

    அப்போது அவர் பேசுகையில், 10 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுத்தார்கள். ஆனால் மாநகராட்சி பகுதியில் உள்ள ஏழைகளுக்கு பட்டா கொடுக்காமலும், அதுதொடர்பாக அரசாணை வெளியிடாமலும் இருக்கிறார்கள் என தி.மு.க. அரசை விமர்சித்தார்.

    பட்டா கேட்டு நடத்திய இந்த பேரணி பட்டா வழங்கும் நிகழ்ச்சியை நடத்திய அமைச்சருக்கு எதிராக உள்ளதோ என கருதி, மதுரை தி.மு.க.வி.னரும், அமைச்சரின் ஆதரவாளர்களும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியினருக்கு எதிரான கருத்துகளை சமூகவலை தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

    இதற்கிடையே அமைச்சர் மூர்த்தியின் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்டியூர் பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனி்ஸ்ட் கட்சி சார்பில் கிளை மாநாடு நடந்தது. அதில் வண்டியூர் பகுதிகளில் சாலைகள் மோசமாக இருப்பதால் அதனை சீரமைக்க வேண்டும், ரேசன் கடைகளில் பொருட்கள் தரமற்றதாகவும், எடை குறைவாக இருப்பதாகவும் கூறி கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றி அதனை வண்டியூர் பகுதியில் பேனராகவும் வைத்தனர்.

    இதனையடுத்து ஓரிரு நாட்களில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வண்டியூர் பகுதி முழுவதும் கண்டா வரச்சொல்லுங்க...! என்ற வாசகத்துடன் மதுரை வெங்கடேசன் எம்.பி.க்கு எதிராக பொதுமக்கள் என்ற பெயரில் நோட்டீசுகள் ஒட்டப்பட்டன. இது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரிடையை கோபத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஒன்றிய மாநாட்டில் வெங்கடேசன் எம்.பி. பேசுகையில், வண்டியூர் சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும், ரேஷன் கடையில் தரமான பொருள் வை என்றால் ஒருத்தனுக்கு கோபம் வருகிறது என்றால் தரம் இல்லாத பொருளை எடை குறைவான பொருளை போடுபவனுக்கு பின்னால் இருக்கும் நபருக்கு தான் வரும்.

    மக்களுக்கான போராட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள், எங்களை விட சிறந்த போராட்டக்காரர்களாக இருந்தால் எங்களோடு வாருங்கள் போட்டி போடலாம் என சவால் விடுத்தார்.

    இந்தநிலையில் மதுரை மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் நடைபெற்ற தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடத்தப்பட்ட பேரணியை கடுமையாக சாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மதுரையில் மீண்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் விரைவில் பட்டா வழங்க இருக்கிறார்கள். இதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது. தகுதி இல்லாதவர்களை அழைத்து பட்டா கொடுக்கிறேன் என சொல்லி திசை திருப்புகிற வேலையை விட்டுவிடுங்கள்.

    தன்னுடைய புகழுக்காக எதையாவது பெற்றுத் தருகிறேன் என தவறான பிரசாரம் செய்வதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மக்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் செய்து வருகிறார். நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது.

    கிடைக்காததை கிடைக்கும் என்றும், வாங்கி தருவோம் என்று சொல்லியும் வருபவர்களை தயவு செய்து நீங்கள் நம்பி ஏமாந்து விடவேண்டாம். தகுதி உள்ளவர்களுக்கு நிச்சயமாக பட்டாவை பெற்று தரக்கூடிய பணியை அரசுத்துறையும், அதிகாரிகளும் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.

    முதலமைச்சர் சொன்னதைப்போல நாம் யாரை நம்பியும் இல்லை, நம்மை நம்பி இருப்பவர்களுக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருப்பது தான் தி.மு.க. என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மதுரையில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கூட்டங்களில் அவன், இவன் என மேடையிலேயே ஒருமையில் சவால் விடுத்து பேசும் வகையில் ஒருவரை ஒருவர் சாடி வருவதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியிடமும் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

    Next Story
    ×