search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை அருகே மாமியாரை கம்பால் தாக்கி கொலை செய்த மருமகள்
    X

    நெல்லை அருகே மாமியாரை கம்பால் தாக்கி கொலை செய்த மருமகள்

    • ராமசாமிக்கு திருமணம் ஆனதில் இருந்து மாமியார்-மருமகள் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளது.
    • கைது செய்யப்பட்ட மகாலெட்சுமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள துலுக்கர்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 63). இவர் துலுக்கர்குளம் பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்து வருகிறார்.

    இவரது மனைவி சீதாராமலெட்சுமி(58). இவருக்கு ஒரு மகளும், ராமசாமி என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு சுத்தமல்லி அருகே கொண்டாநகரத்தில் திருமணமாகி உள்ளது. ராமசாமிக்கு மகாலெட்சுமி(27) என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும், 10 மாதத்தில் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் மாமியார்-மருமகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த மகாலெட்சுமி, நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சீதாராமலெட்சுமியை சரமாரியாக கம்பால் தாக்கிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்து சென்றார்.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பான புகாரின்பேரில் சீதபற்பநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதா கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து மகாலெட்சுமியை கைது செய்தனர்.

    இந்நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி சீதாராமலெட்சுமி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, மகாலெட்சுமியிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    ராமசாமிக்கு திருமணம் ஆனதில் இருந்து மாமியார்-மருமகள் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர்களிடையே பிரச்சினையை போக்குவதற்காக சண்முகவேல் குடியிருக்கும் வீட்டுக்கு பின்புறத்தில் புதிதாக ஒரு வீட்டை ராமசாமிக்கு கட்டிக் கொடுத்துள்ளனர்.

    ஆனாலும் மகாலெட்சுமி அடிக்கடி மாமனார்-மாமியாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அவ்வப்போது அக்கம்பக்கத்தினர் வந்து சமாதானம் பேசி வந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி உள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த மகாலெட்சுமி, தனது மாமியாரை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார்.

    அதன்படி நேற்று அதிகாலை சீதாராமலெட்சுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது அவர் அங்கு சென்று கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் போலீசில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, தனது மாமியார் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    போலீசார் வீட்டுக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சியை பார்த்தபோது, அதில் மகாலெட்சுமி தான் மூதாட்டியை தாக்கிவிட்டு செயினை பறித்து சென்றார் என்பது தெரியவந்தது.

    மேலும் போலீசில் சிக்காமல் இருப்பதற்காக அவரை தாக்கிவிட்டு, செயினை பறித்துள்ளார். அவ்வாறு செய்தால் செயினை திருடவந்த மர்மநபர்கள் மூதாட்டியை தாக்கி உள்ளனர் என்று ஊரை நம்பவைத்துவிடலாம் என்று மகாலெட்சுமி நினைத்துக்கொண்டு அந்த நாடகத்தை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட மகாலெட்சுமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×