என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உலகளவில் சாதனை நிகழ்த்தி வருகின்றனர்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- விளையாட்டு போட்டிகளை ஊக்கவிக்கவே முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
விருதுநகர்:
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல் நிகழ்ச்சியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகளிர் குழுவினருக்கு கடனுதவிகளை வழங்கினார்.
இதையடுத்து மதுரை, விருதுநகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு மதுரை வருகை தந்தார். இதையடுத்து மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் இரவு தங்கினார்.
இன்று காலை அவர் விருதுநகர் புறப்பட்டார். மதுரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை முன்பு கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மேளதாளங்கள் முழங்க உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் கலெக்டர் ஜெயசீலன் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளுக்கு ரூ.2.85 கோடி மதிப்பில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கினார்.
பின்னர் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 2,111 நபர்களுக்கு ரூ.42.96 லட்சம் மதிப்பிலான பரிசு தொகைகளையும், 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.39 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், 30 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்கான வங்கி கடன் மானியம் என 2,846 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான கலைஞர் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சியினை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணம் கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது:-
தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சர் இந்த முறை பரிசு தொகையை மட்டும் ரூ.37 கோடியாக உயர்த்தி உள்ளார். இந்தாண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளிவில் வெற்றி பெற்றவர்களுக்கு இங்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் அதிகளவில் விளையாட்டு வீரர் சாதனையாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு போட்டிகளை ஊக்கவிக்கவே முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் உலகளவில் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்றது. தெற்காசியாவிலேயே சென்னையில் எப்-4 கார் பந்தயம் நடத்தப்பட்டது.
கன்னியாகுமரியை சேர்ந்த வீரர் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். குஜராத், பஞ்சாப், கோவா, அசாம் மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் 4 முறை தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.
கடந்த 3 வருடங்களில் 7 தங்கப்பதக்கம், 2 வெள்ளி பதக்கம், 2 வெண்கல பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடிதந்துள்ளார். இன்றைக்கு இந்திய ராணுவத்தில் நாட்டை காக்கும் பணியை அவர் செய்து வருகிறார்.
விளையாட்டு துறையில் சாதிக்கத்துடிக்கும் மகளிருக்கு ஊக்கமளிக்கின்ற வகையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை பதக்கங்களை வென்று வருகிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்
இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை மற்றும் விருதுநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்